loader

உள்ளூர் செய்திகள்

சமீபத்திய செய்திகள்

தை பிறந்தால் வழி பிறக்கும்..
தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம்!

அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள். பொங்கலும் தைத்திங்களும்
இரட்டிப்புக் கொண்டாட்டம். இந்த புதிய ஆண்டு உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி, செழிப்பு, நலம், வளம், அன்பைக் கொண்டு வர மனமார்ந்த வாழ்த்துகள்.

பொங்கல் என்பது தமிழர்களின் பாரம்பரியத் திருநாள். இயற்கைக்கு நன்றி செலுத்தும் விழாவான பொங்கல் தமிழர்களின் பண்பாட்டைப் பறைசாற்றும். 

இயற்கைக்கும், விளைச்சலுக்கும் நன்றி செலுத்தும் விழாவான பொங்கல் கொண்டாட்டம் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சமூகத்தின் ஒற்றுமையை வலியுறுத்தும் விழாவாகவும் விளங்குகிறது. பொங்கல் என்பது பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பது காலங்காலமாய் நாம் கடைப்பிடித்து வரும் ஒன்று. வாழ்வின் சிறப்பையும், மகிழ்ச்சியையும் கொண்டாடும் இந்த விழா தமிழர்களின் அடையாளம், 
விவசாயிகளின் உழைப்பு. இப்படிப் பொங்கல் என்பது தமிழர்களின் பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் வாழ்வின் சிறப்பைக் கொண்டாடும் அற்புதமான திருநாள்.

குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக இருந்து பொங்கலைக் கொண்டாடுங்கள். உங்கள் முன்னோர்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கு நன்றி செலுத்துங்கள். இந்தப் புத்தாண்டில் புதிய இலக்குகளை நிர்ணயித்து அவற்றை அடைய முயற்சி செய்யுங்கள். பொங்கல் பண்டிகையை ஒரு புதிய தொடக்கமாக எடுத்துக் கொண்டு உங்கள் வாழ்வைச் சிறப்பாக வாழுங்கள்.

புதிய ஆண்டு, புதிய வாய்ப்புகள், புதிய மகிழ்ச்சி. இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் தின நல் வாழ்த்துகள்.

மலேசியாவில் வாழும் அனைத்து தமிழர்களுக்கும் தனது மனமார்ந்த பொங்கல் தின நல்வாழ்த்துகளைத்
கொம்தார் சட்டமன்ற உறுப்பினர் தே லாய் ஹேங் தெரிவித்துக் கொண்டார்.
.
விவசாயிகளின் உழைப்பையும் இயற்கையின் அருளையும் போற்றும் இந்த பொங்கல் திருநாளில், அனைவரும் ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் எல்லா வளங்களுடனும் வாழ வேண்டும் என்பதே தனது விருப்பமாகும் என்றார்.

புதிய ஆண்டான 2026 ஆம் ஆண்டு  அனைவருக்கும் வெற்றியும் முன்னேற்றமும் நிறைந்த ஆண்டாக அமைய வேண்டும். குறிப்பாக, இந்திய சமூகத்தினர் பொருளாதாரத்திலும் வாழ்வாதாரத்திலும் மேலும் சிறப்பாக வளர்ந்து உயர வேண்டும் என்பதே தனது நோக்கம் என்ற தகவலை கூறி மீண்டும் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகளை தே லாய் ஹேங் தெரிவித்தார்.

2026 பொங்கல் திருநாளை முன்னிட்டு மலேசிய இந்திய சமுதாயத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்வதாக மஇகா தேசியத் தலைவர் தான்ஸ்ரீ டத்தோஸ்ரீ டாக்டர் ச. விக்னேஸ்வரன், தன்னுடைய தைப்பொங்கல் திருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

கழனியில் ஏரோட்டினாலும் வீதியில் தேரோட்டிய செம்மாந்த இனம் தமிழினம். அத்தகைய தமிழ் முன்னோர் வாழ்விற்கு வளம் சேர்க்கும் வேளாண் தொழிலின் வினை பயனான அறுவடையைக் கொண்டாடும் விதமாகவும் ஒற்றுமை விழாவாகவும் காலந்தோறும் தை மாத முதல் நாளில் கடைபிடிக்கின்றனர்

வேளாண் தொழிலுக்கு அடியும் முதலுமாக இருந்து துணை நிற்கும் கதிரவனுக்கு நன்றி சொல்லவும் வாழ்வின் எல்லா கட்டத்திலும் துணை நிற்கும் மாடுகளுக்கு நன்றி பாராட்டவும் பொங்கல் நாளை வகுத்துள்ளனர்.

இந்த இருநாள் விழாவுக்கும் முன்னதாக போகிப்பண்டிகை என்னும் பெயரில் தீ தீயதை விளக்கி, நன்மையை கைக்கொள்ளும் விதமாக கொண்டாடிய அதேவேளை நிறைவு நாளாக காணும் பொங்கல் அல்லது  கன்னிப் பொங்கல் என்னும் வகையில் ஒரு சமூக கூட்டு விழாவாக நான்கு நாள் திருவிழாவை ஒற்றுமைத் திருவிழாவாக பொங்கல் சமயத்தில் கொண்டாடி குதூகலிக்கும் பாங்கினை காலங்காலமாக கடைபிடித்து வருகின்ற இனம் தமிழினம்.

அதன் தொடர்ச்சியாக இவ்வாண்டு பொங்கல் விழாவும் மலேசிய இந்திய சமுதாயத்தில் சமத்துவத்தையும் ஒற்றுமையையும் முன்னுறுத்தி நம் எதிர்காலம் வளமாகவும் நலமாகவும் அமைந்திட இந்த பொங்கல் திருநாள் துணை நிற்கட்டும் என்று விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை நம்முடைய எதிர்காலம் இந்த மண்ணில் மிகவும் கேள்விக்குறியாக தெரிவதையும் இந்திய சமுதாயத்தினர் அவதானிக்க வேண்டும்.

எனவே மலேசியாவில் வாழ்கின்ற இந்திய சமுதாயத்தினர் அனைவரும் அனைத்து  வேறுபாட்டையும் மறந்து ஒற்றுமை என்ற ஒரே எண்ணத்தை மனதில் கொண்டு அனைத்து சமூக மக்களோடும் ஒன்றிணைந்து இந்த
பொங்கல் நன்னாளை கொண்டாடுவோம் என்று தன்னுடைய பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தான்ஸ்ரீ விக்னேஷ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூர்,ஜன.14-
மலேசியா முழுவதும் தமிழ்ப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து குறைந்து வருவது குறித்து மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரான டத்தோஸ்ரீ எம். சரவணன் கவலை தெரிவித்துள்ளார்.

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கினாலும், சேர்க்கை எண்ணிக்கை குறைந்து வருவது கவலைக்குரிய விஷயமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

2026 கல்வியாண்டிற்கான அண்மைய தரவுகளின்படி, நாடு முழுவதும் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் முதலாம் வகுப்பில் 10,330 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். இது கடந்த ஆண்டு 11,021 மாணவர்கள் சேர்ந்திருந்த நிலையை ஒப்பிடுகையில் 691 மாணவர்கள் குறைவாகும்.

தமிழ்ப்பள்ளிகள் மலேசிய இந்திய சமூகத்தின் அடையாளத்திற்கும் முன்னேற்றத்திற்கும் அடித்தளமாக உள்ளன. இப்பள்ளிகளை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் மஇகா உறுதியாக உள்ளது.

ஆனால் இதை தனித்து செய்வது சாத்தியமில்லை என்று டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்தார்.

இந்தச் சூழலை மாற்றுவதற்கு தமிழ் சார்ந்த அரசு சாரா அமைப்புகள், பெற்றோர்–ஆசிரியர் சங்கங்கள், முன்னாள் மாணவர் சங்கங்கள், பள்ளி மேலாண்மை வாரியங்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் கூடுதல் செயலில் ஈடுபட வேண்டிய அவசியம் உள்ளதாக அவர் வலியுறுத்தினார்.

மேலும், மாணவர் சேர்க்கையில் பெற்றோரின் முடிவுகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதையும் டத்தோஸ்ரீ சரவணன் சுட்டிக்காட்டினார்.

தமிழ்க் கல்வியின் நீண்டகால மதிப்பை பெற்றோர் உணர வேண்டும். தங்கள் பிள்ளைகளை தமிழ்ப் பள்ளிகளில் சேர்த்து, பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை ஆதரிக்க வேண்டும் எனவும் அவர் பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

2026ஆம் ஆண்டின் நிலவரப்படி, மலேசியாவில் 528 தமிழ்த் தொடக்கப் பள்ளிகள் உள்ளன. இதில் சுமார் 155 பள்ளிகள் 30 அல்லது அதற்கு குறைவான மாணவர்களுடன் இயங்கி வருவது கவலைக்குரியதாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இது வெறும் எண்ணிக்கைகள் பற்றிய விஷயம் அல்ல. நமது மொழி, பண்பாடு மற்றும் சமூக வலிமையை பாதுகாப்பதற்கான போராட்டமாகும்.
தமிழ்ப் பள்ளிகளின் எதிர்காலம், நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தினார்.

கோலாலம்பூர், ஜன.12-
மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் முன்னணி மதிப்புமிக்க உலோக வர்த்தக நிறுவனமாக விளங்கும் Public Gold, உலகம் முழுவதிலுமிருந்து வந்த Public Gold Business Owners (PGBOs)-ஐ FY
2024/25 Triple Diamond Recognition Ceremony என்ற உயரிய விருது விழாவிற்கு, பண்டார் உத்தாமாவில் உள்ள One World Hotel-இல் சிறப்பாக வரவேற்றது.

இந்த பிரமாண்ட விழாவில், மொத்தம் 14 சிறந்த சாதனையாளர்களின் குறிப்பிடத்தக்க வெற்றிகள் கௌரவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டன.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவை Public Gold Group-இன் நிறுவனர் மற்றும் நிர்வாகத் தலைவர் Dato’ Seri Louis Ng அவர்கள் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.

அவருடன் Aurora Italia International Berhad (AIIB)-இன் மேலாண்மை இயக்குநர் Datin Seri Yvonne Lim மற்றும் PGMall-இன் செயல்பாட்டு தலைமை அதிகாரியும், இந்த உயரிய விழாவின் ஏற்பாட்டுத் தலைவருமான Jerry Ng ஆகியோரும் கலந்து கொண்டனர்.

2008ஆம் ஆண்டு பினாங்கில் எளிய முறையில் தொடங்கப்பட்ட Public Gold, இன்று உலகளாவிய நிறுவனமாக வளர்ச்சி பெற்றுள்ளது. மலேசியாவில் 30 கிளைகள், இந்தோனேசியாவில் 7 கிளைகள், மேலும் சிங்கப்பூர், துபாய் (ஐக்கிய அரபு எமிரேட்ஸ்) மற்றும் சமீபத்தில் ஐக்கிய இராச்சியத்தின் லண்டன் ஆகிய இடங்களில் சர்வதேச அலுவலகங்களுடன் நிறுவனம் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்தியுள்ளது.

தற்போது, 2.3 மில்லியனுக்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுடன், மதிப்புமிக்க உலோகத் துறையில் பிராந்திய அளவில் முன்னணி இடத்தை Public Gold உறுதியாக தக்க வைத்துள்ளது.
புதுமையை அடிப்படையாகக் கொண்ட பிராண்டாக விளங்கும் Public Gold, 2023ஆம் ஆண்டு முதல் மலேசியா முழுவதும் உலகின் முதல் ஃபின்டெக் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட Gold ATM-ஐ அறிமுகப்படுத்தி வரலாறு படைத்துள்ளது.

அதன் சமீபத்திய முன்னேற்றமாக, Emirates Gold நிறுவனத்துடன் மேற்கொண்ட மூலோபாய கூட்டாண்மையின் மூலம், Dubai Precious Metals Conference (DPMC) 2025-இல் இந்த ஃபின்டெக் Gold ATM-ஐ அறிமுகப்படுத்தியது. இந்த முயற்சி தங்கத்தை எளிதில் அணுகக்கூடிய புதிய காலகட்டத்தைத் தொடங்குவதோடு, மலேசியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸை முக்கியமான ஃபின்டெக் புதுமை மையங்களாகவும் நிலைநிறுத்துகிறது.

2008ஆம் ஆண்டு தொடக்கம் முதல், Public Gold RM23.5 பில்லியன் மொத்த விற்பனை வருவாயை ஈட்டியுள்ளதுடன், தொடர்ந்து வலுவான வளர்ச்சி பாதையில் பயணித்து வருகிறது. இதுவரை 88 டன் தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன், 52 டன் தங்கம் மீள வாங்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் மேற்கொண்ட சமீபத்திய வணிக விரிவாக்கங்களின் மூலம், Public Gold ஒரு நம்பகமான பிராந்திய பிராண்டாக மட்டுமல்லாது, உலகளாவிய நிறுவனமாகவும் தன்னை நிலைநிறுத்தியுள்ளது.
இன்றைய Public Gold-இன் வெற்றிக்கு, அதன் Public Gold Business Owners (PGBOs)-இன் அசாதாரண அர்ப்பணிப்பும், விசுவாசமான வாடிக்கையாளர்களின் உறுதியான ஆதரவுமே முக்கிய காரணங்களாகும்.

அவர்களின் உறுதி, அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சி ஆகியவை நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் சாதனைகளுக்கும் வலுவான அடித்தளமாக அமைந்துள்ளன.

இந்த மதிப்புமிக்க பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில், ‘From Vision to Legendary Leadership’ என்ற கருப்பொருளின் கீழ் இவ்வாண்டின் Triple Diamond Recognition Ceremony நடத்தப்பட்டு, சிறந்த சாதனைகளும் தலைமைத்துவ திறமைகளும் வெளிச்சமிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.