loader

உள்ளூர் செய்திகள்

சமீபத்திய செய்திகள்

கோலாலம்பூர்,மார்ச் 12-

எசான் வர்த்தக குழுமத்தின் ரமலான் உதவிகள் 32ஆவது ஆண்டாக தொடர்வதாக அதன் தலைவர் டத்தோ பிவி அப்துல் ஹமிட் கூறினார்.

அவ்வகையில் இன்று சிகாம்புட்டில் 200 பேருக்கு கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஹன்னா இயோ தலைமையில் உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன.

நோன்பு பெருநாளை முன்னிட்டு எசான் வர்த்தக குழுமம் ரமலான் உதவிகளை வழங்கி வருகிறது.

இவ்வாண்டும் கிட்டத்தட்ட 5,000 பேருக்கு இந்த உதவிகளை எசான் வழங்கியுள்ளது.

வசதிக் குறைந்தவர்கள், ஆதரவற்றவர்கள் என பல தரப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டது.

அமைச்சர் இவ்விழாவில் கலந்துக் கொண்டதில் மகிழ்ச்சி என டத்தோ அப்துல் அமிட் தெரிவித்தார்.

குறிப்பாக இவ்விழா கூட்டரசுப் பிரதேச அறவாரியம் உட்பட பல அமைப்புகளுடன் நடத்தப்பட்டது.

அமைச்சர் ஹன்னா இயோ துடிப்புமிக்க அமைச்சராக உள்ளார்.

அவரின் வருகை கூட்டரசுப் பிரதேசத்திற்கு மேலும் உருமாற்றத்தை கொண்டு வரும் என தாம் நம்புவதாக அவர் கூறினார்.

பாங்கி, மார்ச் 12 - 

மலேசிய தேசிய பல்கலைக்கழகம் (UKM) இந்திய மாணவர் பிரதிநிதி மன்றம் (PMI UKM) மற்றும் UKM கபடி கழகம் இணைந்து “மாவீரன் 3.0” எனப்படும் இடையக பல்கலைக்கழக விளையாட்டு போட்டியை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த விளையாட்டு போட்டி 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி மலேசிய தேசிய பல்கலைக்கழகம் (UKM) வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் கபடி, கால்பந்து, பூப்பந்து போன்ற முக்கிய விளையாட்டுகள் நடைப்பெறவுள்ளதாக இந்திய மாணவர் பிரதிநதி மன்றத்தின் தலைவர் கீர்த்திகன் மகாலிஙகம் தெரிவித்தார்.

பல்கலைக்கழக மாணவர்களிடையே ஒற்றுமை உணர்வை வலுப்படுத்துவதுடன், விளையாட்டு மனப்பான்மை மற்றும் ஆரோக்கியமான போட்டி உணர்வை வளர்ப்பதே இவ்விளையாட்டு போட்டியின் முக்கிய நோக்கமாகும்.

மலேசியாவின் பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்க உள்ள இந்த பெரிய அளவிலான விளையாட்டு நிகழ்வை சிறப்பாக நடத்த நிதி ஆதரவும் அனுசரணையும் மிகவும் அவசியமாக உள்ளது.

எனவே, எங்கள் முயற்சிக்கு தங்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்வதாக அவர் சொன்னார்.

மேல்விவரங்களுக்கு 014-6070331 என்ற எண்ணுடன் தொடர்புக் கொள்ளலாம்.


கோலாலம்பூர், மார்ச் 12-
மலேசியா ரிசைக்ளர்ஸ் அசோசியேஷன் (MRA), நாட்டின் மறுசுழற்சி (recycling) துறை எதிர்கொண்டு வரும் பல்வேறு சவால்கள் குறித்து விவாதிக்கத் தொழில் துறை பிரதிநிதிகளைச் சந்திக்க நேரம் ஒதுக்கியதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ  அன்வார் இப்ராஹிம் அவர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளது.

MRA தலைவர் டத்தோ ஜோ சரவணன் கூறுகையில், அந்தச் சந்திப்பு தொழில் துறையினருக்கு முக்கியமான பல பிரச்சினைகளை நேரடியாக முன்வைக்க ஒரு வாய்ப்பாக அமைந்தது.

 குறிப்பாக சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழையும் ஸ்கிராப் பொருட்கள் மற்றும் மின்னணு கழிவுகள் (e-waste) தொடர்பான பிரச்சினைகள், சட்டப்படி செயல்படும் நிறுவனங்களின் நடவடிக்கைகளை பாதித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவரின் கூற்றுப்படி, இந்த பிரச்சினை நீண்ட காலமாகவே சட்டப்படி வணிகம் செய்து வரும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

“சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் ஸ்கிராப் பொருட்கள் மற்றும் e-waste பிரச்சினையை கையாள அரசாங்கம் உறுதி எடுத்திருப்பதை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம்.

 இது விதிமுறைகளை பின்பற்றி செயல்படும் தொழில் துறை நிறுவனங்களுக்கு பெரிய நிம்மதியை அளிக்கும்,” என்று அவர்  தெரிவித்தார்.

மேலும், இந்த பிரச்சினையை அரசு ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பது, பொறுப்புடன் வணிகம் நடத்தும் நிறுவனங்களைப் பாதுகாப்பதோடு, மலேசியாவின் மறுசுழற்சி துறை நிலையான முறையில் வளர உதவும் என்றும் அவர் கூறினார்.

அதுடன், தொழில் துறையினரின் கருத்துகளை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேரடியாகக் கேட்க முனைந்திருப்பது, மறுசுழற்சி துறை வெளிப்படைத்தன்மையுடனும் நம்பகத்தன்மையுடனும் நிர்வகிக்கப்படும் என்ற நம்பிக்கையை துறையில் செயல்படும் அனைவருக்கும் அளிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.


கோலாலம்பூர், மார்ச் 11-
பள்ளிவாசல்கள் வழிபாட்டு தலங்களாக மட்டும் இல்லாமல் சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் பயிற்சி மையங்களாகவும் மாற வேண்டும் என்று முக்மின் அமைப்பின் தலைவர் டத்தோ ஷாஹுல் அமிட் வலியுறுத்தினார்.

தொடர்ந்து வழங்கப்படும் பயிற்சிகள் வாழ்க்கையில் முன்னேற்றம் பெற உதவும் என்றார்.

உதாரணத்திற்கு இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான பயிற்சிகளும், பெண்களுக்கு தையல் பயிற்சி போன்ற திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் வழங்கப்பட வேண்டும் என்று அவர் இன்று கம்போங் பண்டான் பள்ளிவாசலில் நடைப்பெற்ற நோன்பு துறப்பு நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.

இன்றைய நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் மட்டும் சுமார் 450 பேர் கலந்து கொண்டு நோன்பு துறந்தனர்.

முக்மின் அமைப்பின் ஏற்பாட்டில் நாடு தழுவிய அளவில் சுமார் 3,500 குடும்பங்களுக்கு நோன்புப் பெருநாள்  உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்த கம்போங் பண்டான் பள்ளிவாசலுக்கு தனி சிறப்பு இருப்பதாகவும், இங்கு தினமும் சுமார் 1,000 பேருக்கு உணவு வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


கோலாலம்பூர், மார்ச் 10-
 எஸ்பிஎம், எஸ்டிபிஎம், டிப்ளோமா அல்லது மெட்டிரிகுலேஷன் முடித்த மாணவர்களுக்கு மேற்படிப்பு தொடர்பான வழிகாட்டலை வழங்கும் நோக்கில் பினாங்கு மஇகா இளைஞர் பிரிவு “Jejak Menara Gading – மேற்படிப்பு பயணம்” என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.

பல மாணவர்கள் UPU விண்ணப்ப முறையைப் பற்றிய சரியான தகவல் இல்லாமல் உயர்கல்வி வாய்ப்புகளை இழக்க நேரிடுவதால், அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.

நிகழ்ச்சியில் UPU-க்கு எவ்வாறு விண்ணப்பிப்பது, எதிர்காலத்திற்கு ஏற்ற படிப்புகளை தேர்வு செய்வது எப்படி, பல்கலைக்கழகங்களை சரியாக தேர்வு செய்வது போன்ற முக்கிய அம்சங்கள் குறித்து விளக்கங்கள் வழங்கப்படவுள்ளன.

மேலும், உயர்கல்வி அமைச்சை சேர்ந்த அதிகாரியும் கல்வித்துறையில் பல ஆண்டுகள் அனுபவம் கொண்டவருமான பத்மராஜா செல்வராஜா மாணவர்களுக்கு நேரடியாக வழிகாட்ட உள்ளார்.

இந்த நிகழ்ச்சி இம்மாதம் மார்ச் 14ஆம் தேதி மாலை 3 மணி முதல் 6 மணி வரை செபராங் ஜெயாவில் அமைந்துள்ள அருள்மிகு கருமாரியம்மன் ஆலய வளாகத்தில் நடைபெறும்.

UPU தொடர்பான அனைத்து ஆவணங்களையும் மாணவர்கள் உடன் கொண்டு வருமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மாணவர்களின் உயர்கல்வி பயணத்தை சரியான பாதையில் தொடங்க உதவும் இந்த நிகழ்ச்சியில் மாணவர்களும் பெற்றோர்களும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேல் விவரஙகளுக்கு 014-6318183 (நித்தியராஜன்), 016-4900605 (மஹாதேவன்), 019-9901424 (ரூபன்ராஜ்) ஆகியோரை தொடர்புக் கொள்ளலாம்.