loader

உள்ளூர் செய்திகள்

சமீபத்திய செய்திகள்


கோலாலம்பூர், மார்ச் 31-
இவ்வாண்டு எஸ்பிஎம் தேர்வு முடிவுகளை பெற்ற மாணவர்களுக்காக மஇகா இளைஞர் பிரிவு உயர்க்கல்வி குறித்த வழிக்காட்டி கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளது.

கடந்த ஆண்டில் 4 லட்சம் மாணவர்கள் எஸ்பிஎம் தேர்வை எழுதியுள்ளனர். இவ்வாண்டு அதன் முடிவுகள் வெளிடப்பட்ட வேளையில் 14 ஆயிரம் மாணவர் அனைத்து பாடங்களிலும் ஏ-க்கள் பெற்றுள்ளனர்.

ஆகையால் அவர்களின் மேற்கல்வி குறித்த விளக்கத்தை மாணவர்களுக்கு வழங்கவே உயர்க்ல்வி இலட்சியப் பயணம் எனும் வழிக்காட்டி கருத்தரங்கை மஇகா இளைஞர் பிரிவு நாடு முழுவதிலும் நடத்தவுள்ளதாக தேசிய ரீதியிலான ஏற்பாட்டுக் குழுத் தலைவர் எல்.சத்திஸ்குமார் தெரிவித்தார்.

கடந்த ஆண்டுகளிலும் இந்த உயர்க்கல்வி மாணவர்களுக்கான வழிக்காட்டி கருத்தரங்கு நடத்தப்பட்டது. கடந்த ஆண்டில் மட்டும் நாடு தழுவிய அளவில் 1,500 மாணவர்கள் இதில் கலந்து கொண்டதாகவும் அவர் சொன்னார்.

நாளை ஏப்ரல் 1ஆம் தேதி மலாக்காவிலும் ஏப்ரல் 4ஆம் தேதி பகாங்கிலும் ஏப்ரல் 5ஆம் தேதி கெடா, பேரா, சிலாங்கூர், கூட்டரசு பிரதேசம், நெகிரி, ஜொகூர் ஆகிய மாநிலங்களிலும் இந்த வழிக்காட்டி கருத்தரங்கு நடைப்பெறவுள்ளது.

எஸ்பிஎம் முடித்த மாணவர்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும், எந்த துறையை தேர்ந்தெடுத்தால் சிறப்பாக இருக்கும் என பல விளக்கங்கள் இந்த கருத்தரங்கில் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளன.

மேலும் மாணவர்களுக்கு நேருக்கு நேர் (1 to 1) விளக்கமும் அளிக்கப்படும் என அவர் மேலும் சொன்னார்.

உயர்க்கல்வி பற்றிய விளக்கத்தை போலிடெக்னிக், உயர்க்கல்வி அமைச்சு, போன்றவையை சேர்ந்த அதிகாரிகளால் வழங்கப்படும்.

ஆகையால் இந்த வழிக்காட்டி கருத்தரங்கு தொடர்பில் விவரங்களை பெற 019-4860087 என்ற எண்ணுடன் சத்திஸ்குமாரை தொடர்புக் கொள்ளலாம்.


கோலாலம்பூர், மார்ச் 31-
மது போதையில் வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட சாலை விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றைத் தடுக்கும் வகையில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் அவசியம் என மஇகா பிரிகேட் வலியுறுத்தியுள்ளது.

சமீபத்தில், பள்ளிக்கான புத்தகங்களை வாங்கி வீடு திரும்பிக் கொண்டிருந்த அமிருல் ஹபிஸ் ஒமர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவரது மறைவால் மனைவியும் மூன்று பிள்ளைகளும் தந்தையை இழந்துள்ள நிலையில், “இதற்குப் பொறுப்பேற்க வேண்டியது யார்?” என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தச் சம்பவம் போன்றவை அலட்சியம் மற்றும் பொறுப்பின்மை காரணமாக நிகழும் துயரமான நிகழ்வுகளாகும். மது போதையில் வாகனம் ஓட்டும் பழக்கம் நாட்டில் அதிகரித்து வருவது மிகுந்த கவலைக்குரியது என மஇகா பிரிகேட் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, மஇகா பிரிகேட் தேசியத் தலைவர் ஆண்ட்ரூ டேவிட், அரசாங்கம், குறிப்பாக போக்குவரத்து அமைச்சும், காவல்துறையும் சாலைப் போக்குவரத்து துறையும் மது போதையில் வாகனம் ஓட்டும் குற்றச்சாட்டுகளுக்கான சட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும், தடுப்புச் செயல்திறன் கொண்ட கடுமையான தண்டனைகள், கட்டாய சிறைத் தண்டனை மற்றும் அதிகபட்ச அபராதங்கள் விதிக்கப்பட வேண்டும் என்றும்  அவர் கூறினார்.

அதேபோல், “போர்ட் பானாஸ்” என வகைப்படுத்தப்பட்ட பகுதிகளில் முறையான சோதனைச்சாவடிகள் அமைத்து, தீவிரமான மற்றும் தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கு முன்னர், தேசிய கயாக் வீராங்கனை சிதி நுருல் மசியிதா மது போதையில் இருந்த ஓட்டுநரால் மோதி கடுமையாக காயமடைந்த சம்பவமும் நினைவுகூரப்பட்டது. இத்தகைய சம்பவங்கள் உயிரிழப்புகளையே அல்லாமல், பாதிக்கப்பட்டவர்களின் எதிர்காலத்தையும் அழித்து விடுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், மீண்டும் மீண்டும் குற்றம் புரியும் ஓட்டுநர்களுக்கு நீண்டகாலம் அல்லது வாழ்நாள் முழுவதும் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வது போன்ற கூடுதல் நடவடிக்கைகளையும் அரசு பரிசீலிக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

“#GenANTIjenayah” என்ற இயக்கத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சிகளை மஇகா பிரிகேட் விரிவுபடுத்தப்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கூலிம்: தமிழ் செய்தி இணையதளமான தினத்தந்தியை சார்ந்த செய்தியாளர் காளிதாஸ் சுப்பிரமணியம், அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் இன்று கூலிம் மாவட்ட காவல் தலைமையகத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இந்த கைது தொடர்பாக, அந்த இணையதளத்தின் இயக்குநர் பவளசெல்வன் மாரிமுத்து உறுதிப்படுத்தினார். இன்று பிற்பகல் சுமார் 3 மணியளவில் இதுகுறித்த தகவல் தமக்கு கிடைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

பவளசெல்வன் கூறுகையில், கடந்த மார்ச் 26ஆம் தேதி காளிதாஸ் மற்ற ஊடகவியலாளர்களுடனுன் சில அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் சேர்ந்து கூலிம் ஹைடெக் பார்க் (KHTP) பகுதிக்கு சென்றிருந்தார்.

அங்கு 300க்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேறிகள் பணியாற்றுவதாக வந்த குற்றச்சாட்டை குறித்து செய்தி சேகரிக்கவே அவர்கள் சென்றதாக பவளசெல்வன் விளக்கினார்.

நாங்கள் தகவல் துறையில் பதிவு செய்யப்பட்டவர்கள்; அதிகாரப்பூர்வ ஊடக அட்டை எங்களிடம் உள்ளது. இப்படியான கைது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது என அவர் கூறினார்.

மேலும், இதற்கு முன்பே காளிதாஸை  கூலிம் போலீசார் விசாரணைக்காக வருமாறு அழைத்திருந்தனர்.

இதற்கு முன்னர் அவரை போலீசார் அழைத்து விசாரணைக்கு வரச் சொன்னார்கள். அது அத்துமீறல் குற்றச்சாட்டுடன் தொடர்புடையது என தெரிவித்தனர்.

ஆனால் இன்று அவர் காவல் நிலையத்துக்கு சென்றபோது மேலதிக விசாரணைக்காக கைது செய்ததாக கூறப்பட்டது என பவளசெல்வன் மேலும் கூறினார்.

இதே குற்றச்சாட்டில் மேலும் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

*உடனடி விடுதலை கோரிக்கை*

இதற்கிடையில், மலேசியத் தமிழ்ப்பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் எஸ். முத்தமிழ் மன்னன், இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் அதிருப்தி வெளியிட்டார்.

ஒரு செய்தியாளர் தனது கடமையை செய்ததற்காக கைது செய்யப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது. அவரிடம் அதிகாரப்பூர்வ ஊடக அட்டை உள்ளது. அவரை கைது செய்யாமல் வாக்குமூலம் பதிவு செய்திருந்தாலே போதுமானது என அவர் தெரிவித்தார்.

மேலும், காளிதாஸை உடனடியாக எந்த தாமதமும் இன்றி விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த விவகாரம் தொடர்பாக தொடர்புடைய அமைச்சர் ஃபாமி பட்சில் அவர்களிடம் எடுத்துச் செல்லப்படும் என்றும் அவர் கூறினார்.

இதுகுறித்து உள்துறை அமைச்சகத்திடமும் (KDN) கருத்து கோரப்பட்டுள்ளது.


போர்ட்டிக்சன்,மார்ச் 29-

ம.இ.கா-வும் மக்கள் சக்தியும் ஒரே குடும்பமாக இந்திய சமுதாயத்திற்காக களத்தில் நிற்கும் என ம.இ.காவின் தேசியத் தலைவர் டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நானும் டத்தோஸ்ரீ தனேந்திரன்  அவர்களும் ஒருமித்த குரலாக இந்திய சமுதாயம் சார்ந்த முடிவுகள் எடுத்து வருகிறோம்.

அந்த வகையில் தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த இரு கட்சிகளின் உறுப்பினர்களும் இணைந்து  பயணக்க வேண்டும் என இன்று நடைப்பெற்ற மக்கள் சக்தியின் தேர்தல் பணிப்படை பயிற்சி நிகழ்ச்சியில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இன்று 50 பேர்களாக சிறிய அளவில் நடந்தப்பட்ட இந்த பயிற்ச்சியை 500 பேராக உருமாற்றுங்கள் நான் அதன் முழு செயலவை ஏற்கிறேன் என டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இந்த  நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

மக்கள் சக்தி கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களுக்கு என்னிடம் ஏதாவது கேள்விகள் உள்ளதா என டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் ஒரு தளத்தை அவர்களுக்கு வழங்கினார்.

அப்போது பெருவாரியான உறுப்பினர்கள் எழுப்பிய கேள்வி என்னவென்றால்  டான்ஸ்ரீ இந்த ஒற்றுமை எல்லா நிலையிலும் ம.இ.கா - மக்கள் சக்தியிடம் இருக்க வேண்டும். அந்த ஒத்துழைப்பு இருக்கிறாதா? என்றால் ஒற்றுமை சற்று குறைவாக உள்ளதாக தெரிவித்தனர்.

அனைத்தையும் கேட்டு அறிந்த டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் 
கவலை வேண்டாம் நானும் டத்தோஸ்ரீ தனேந்திரன் அவர்களும் மாநிலம் மாநிலமாக இரு தரப்பு கட்சி உறுப்பினர்களை சந்திக்க வருகின்றோம். அனைவரும் தயாராக இருங்கள் என தெரிவித்தார்.

இந்த தேர்தலை இந்திய சமுதாயம் ஒற்றுமையாக ஒரு மித்த குரலாக சந்திக்க வேண்டும்.

அதற்கு நமது பணிப்படை தயாராக இருக்க வேண்டும் என டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்  தெரிவித்தார்.

ஒற்றுமையான ஒரு சமுதாயமாக தேர்தலை நிர்ணயம் செய்யும் சக்தியாக மீண்டும்  உருவெடுப்போம் என டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

 

போர்ட்டிக்சன், மார்ச் 29-
மக்கள் சக்தி தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன் தலைமையில் போர்ட்டிக்சனில் நடைபெற்ற நிகழ்வில், வரவிருக்கும் 16ஆவது பொதுத் தேர்தலை முன்னிட்டு கட்சி தீவிரமாகத் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டது.

அவர் தனது தலைமை உரையில், தேர்தலை முன்னிட்டு ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒரு முறை “Retreat” நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாக கூறினார். 

கடந்த பொதுத் தேர்தலில் ஏற்பட்ட ஏமாற்றத்தை சரிசெய்யும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அடுத்த தேர்தலுக்காக 300 பேர் கொண்ட பணிப்படை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

“ஒன்றாய் வெல்வோம்” என்பது இந்த நிகழ்ச்சியின் கருப்பொருளாக இருந்ததாகவும், மஇகாவுடன் கட்சியுடன் இணைந்து செயல்பட்டு, அடுத்த பொதுத் தேர்தலிலும் கூட்டாக பயணிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், மக்கள் சக்தி கட்சி தொடங்கப்பட்டு 18 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், எந்த சவாலையும் எதிர்கொள்ள கட்சி தயாராக இருப்பதாகவும், உறுப்பினர்களுக்கு தொடர்ந்து பயிற்சிகள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு கட்சியின் ஆதரவு தொடரும் என்றும், கடந்த ஐந்து ஆண்டுகளில் மூன்று பிரதமர்கள் பதவி வகித்திருப்பது அரசியல் நிலையற்ற தன்மையை காட்டுவதாகவும், பதவிக்கு வரும் சிலர் பழிவாங்கும் நோக்கில் செயல்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

நாட்டின் வளர்ச்சியில் மஇகாவின் பங்கு முக்கியமானது என்றும், அதை யாராலும் மறுக்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

வரவிருக்கும் பொதுத் தேர்தலில் மஇகா போட்டியிடும் தொகுதிகளில் மக்கள் சக்தி கட்சி முழு ஆதரவை வழங்கும் என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சமூக வலைத்தளங்கள் மூலம் இளைஞர்களின் ஆதரவை பெறும் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் கலந்து கொண்டார்.