loader

உள்ளூர் செய்திகள்

சமீபத்திய செய்திகள்

மலேசியாவில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) தொழில்நுட்பத்தை பாதுகாப்பாகவும் பொறுப்புடனும் பயன்படுத்துவதற்கான புதிய சட்டத்தை உருவாக்கும் பணியில் இலக்கவியல் அமைச்சு முக்கியமான அடுத்த கட்டத்தைத் தொடங்கியுள்ளது.


தேசிய செயற்கை நுண்ணறிவு அலுவலகம் (NAIO) வழி, 2026 ஜூலை மாதம் முழுவதும் பல்வேறு தரப்பினருடன் கலந்தாய்வு அமர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த அமர்வுகளின் நோக்கம், முன்மொழியப்பட்ட AI சட்டம் குறித்து விளக்குவதோடு, அரசு அமைப்புகள், தொழில்துறையினர், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளையும் கேட்பதாகும்.


சர்வதேச மதிப்பீட்டு அளவுகோல்கள் அடிப்படையிலும், தொழில்நுட்ப ஆய்வுகள் மற்றும் முக்கிய பங்குதாரர்களுடன் முன்னதாக நடைபெற்ற கலந்துரையாடல்களின் அடிப்படையிலும், இந்தக் கலந்தாய்வு அமர்வுகள் கொள்கை உருவாக்கத்தின் முக்கிய கட்டமாக அமைந்துள்ளன.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் தொடர்ச்சியான வளர்ச்சியையும், பல்வேறு துறைகளின் தேவைகளையும் கருத்தில் கொண்டு, அனைவரின் கருத்துகளையும் உள்ளடக்கிய முழுமையான சட்டத்தை உருவாக்க இந்தச் செயல்முறை உதவும்.
AI தொழில்நுட்பம் இன்று கல்வி, சுகாதாரம், வணிகம், அரசுச் சேவைகள் உள்ளிட்ட பல துறைகளில் வேகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் நன்மைகள் அதிகமாக இருந்தாலும், தவறான பயன்பாடு, பாதுகாப்பு, தனியுரிமை மற்றும் பொறுப்புணர்வு போன்ற அம்சங்களும் முக்கியமானவை. அதனால்தான், AI-ஐ பாதுகாப்பாகவும் நம்பகத்தன்மையுடனும் பயன்படுத்த உதவும் சட்டம் ஒன்றை இலக்கவியல் அமைச்சு உருவாக்கி வருகிறது.

இந்தச் சட்டம், AI தொடர்பாக மலேசியாவில் உருவாக்கப்படும் முதல் பொதுவான சட்டக் கட்டமைப்பாக இருக்கும். இது தற்போதுள்ள சட்டங்களை மாற்றுவதற்காக அல்ல. மாறாக, பல்வேறு துறைகளில் AI-ஐ பயன்படுத்துவதற்கான ஒரே மாதிரியான அடிப்படை வழிகாட்டுதல்களை வழங்கும்.


இந்தச் சட்டத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று, இடர்-அடிப்படையிலான (Risk-Based) அணுகுமுறையாகும். அதாவது, ஒரு AI அமைப்பு ஏற்படுத்தக்கூடிய அபாயத்தின் அளவைப் பொறுத்து, அதற்கான பொறுப்புகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் நிர்ணயிக்கப்படும்.

அதோடு, AI பயன்பாட்டில் ஏற்படும் பிரச்சினைகளைப் பதிவு செய்யும் முறை, பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் புதிய AI தொழில்நுட்பங்களை பாதுகாப்பாகச் சோதிக்க உதவும் AI Sandboxes போன்ற ஏற்பாடுகளும் இதில் இடம்பெறும்.


2026 ஜூன் 24 அன்று நாடாளுமன்றத்தில் பேசிய இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெளிவுபடுத்தியதுபோல், இந்தச் சட்டம் AI வழி உருவாக்கப்படும் உள்ளடக்கங்களை நேரடியாகக் கட்டுப்படுத்துவதற்காக அல்ல. சட்டவிரோதமான அல்லது தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்கள் தொடர்பான நடவடிக்கைகள் தற்போதுள்ள சட்டங்களின் கீழ் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.


2026 ஜூலை 10 முதல், Unified Public Consultation: (UPC) https://upc.mpc.gov.my/ இணையத் தளத்தின் வழி நாடு முழுவதும் பொதுமக்கள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் தங்களது கருத்துகள் மற்றும் பரிந்துரைகளைப் பகிர்ந்து கொள்ளலாம். பெறப்படும் அனைத்து கருத்துகளும் சட்ட முன்வரைவு இறுதிப்படுத்தப்படும் முன் பரிசீலிக்கப்படும்.


AI சட்டம் அனைவருக்கும் பயனுள்ளதாகவும், நடைமுறையில் செயல்படுத்தக்கூடியதாகவும் இருப்பதை உறுதிசெய்ய, மக்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்று இலக்கவியல் அமைச்சு வலியுறுத்துகிறது. அனைவரின் கருத்துகளையும் மதித்து, வெளிப்படையான முறையில் இந்தச் சட்டம் உருவாக்கப்படும்.

பொறுப்பான AI பயன்பாட்டை ஊக்குவிப்பதன் வழி, மலேசியாவை பாதுகாப்பான, நம்பகத்தன்மை வாய்ந்த மற்றும் உலகளவில் போட்டியிடக்கூடிய AI நாடாக உருவாக்கும் "2030-ஐ நோக்கிய AI நாடு" என்ற தேசிய இலக்கை நோக்கி அரசாங்கம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் பள்ளிகளை மூடுவதற்கு பாஸ் (PAS) மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் (PN) திட்டமிட்டுள்ளதாக பரப்பப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்ற அரசியல் அவதூறு வாக்கு சேகரிக்க டி.ஏ.பி மற்றும் பக்காத்தான் ஹாராப்பான்  செய்யும்   குறுக்கு புத்தி என சிலாங்கூர் பாஸ் ஆதரவு பேரவையின் (DHPP) தலைவர் ஸ்ரீ ஜலராமன் சுலியாராஜு தெரிவித்துள்ளார். இப்படி தான் தேசிய முன்னணி வெற்றி அடைந்தால் நஜீப் வெளியே வருவார் என அவதூறு பரப்பினார்கள். இப்போது வாக்கு சேகரிக்க இப்படி ஒரு அவதூறை  இப்போது ஜொகூர் மாநிலத்தில் சொல்கின்றனர்.

இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு எந்தவிதமான உண்மைத் தகவலும், கட்சிக் கொள்கையும் அல்லது தேர்தல் அறிக்கையும் ஆதாரமாக இல்லை என்றும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள், பாஸ் அல்லது பெரிக்காத்தான் நேஷனல் தமிழ் பள்ளிகளை மூட திட்டமிட்டுள்ளதாகக் கூறும் அதிகாரப்பூர்வ ஆவணம், கட்சிக் கொள்கை அல்லது தேர்தல் அறிக்கையை வெளியிட வேண்டும் என்று அவர் சவால் விடுத்துள்ளார்.

அவ்வாறு ஆதாரங்களை சமர்ப்பிக்கத் தவறினால், அந்த குற்றச்சாட்டுகளை உடனடியாகத் திரும்பப் பெற்று, குறிப்பாக இந்திய சமூகத்தினரிடமும், மலேசிய மக்களிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அரசியலமைப்பின் கீழ் அனைத்து இன மக்களுக்கும் கல்வி பெறும் உரிமையை பாஸ் மதிக்கிறது என்றும், தமிழ்ப்பள்ளிகள் உட்பட எந்த மொழிவழிப் பள்ளியையும் மூடுவதற்கான அதிகாரப்பூர்வ கொள்கையோ முடிவோ பாஸ் கட்சியிடம் ஒருபோதும் இருந்ததில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

அரசியல் லாபத்திற்காக பொய்யான தகவல்களைப் பரப்புவது பொறுப்பற்ற செயல் மட்டுமல்லாமல், நாட்டின் பல்லின ஒற்றுமைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், மக்கள் உண்மையான தகவல்களைப் பெற வேண்டுமே தவிர, அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலான பொய்ப் பிரச்சாரங்களை அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நீதியையும், பரஸ்பர மரியாதையையும், உண்மையையும் அடிப்படையாகக் கொண்டு அனைத்து சமூகங்களின் உரிமைகளையும் பாதுகாத்து, தேசிய ஒற்றுமையை வலுப்படுத்துவதில் சிலாங்கூர் டிஎச்பிபி தொடர்ந்து உறுதியாக செயல்படும் என்று
ஸ்ரீ ஜலராமன் சுலியாராஜு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஜொகூர், ஜூலை 7 –
ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் ம.இ.கா போட்டியிடும் நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும் ம.இ.கா  வெற்றி பெற வேண்டும் என்று மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஷ்வரன் வலியுறுத்தினார்.

ஜொகூரில் வாழும் இந்திய மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, மாநில ஆட்சியில் ம.இ.கா இந்திய சட்டமன்ற உறுப்பினர்கள் அவசியம் என்று அவர் தெரிவித்தார்.

இந்திய சமுதாயத்தின் தேவைகளையும் பிரச்சினைகளையும் நன்கு அறிந்த இந்தியத் தலைவர்களே அவற்றுக்கு சிறந்த தீர்வுகளை முன்வைக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

எனவே, ம.இ.கா-வை பிரதிநிதித்து ஜொகூரில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களித்து தேர்வு செய்யுங்கள் .

மக்கள், சமூகத்தின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு தங்களது வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்தக் கருத்தினை அவர், பெர்லிங் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மஇகாவின் முன்னாள் மூத்த தலைவர்கள், இளைஞர் மற்றும் மகளிர் பொறுப்பாளர்களுடனான கலந்துரையாடல் கூட்டத்தின் போது தெரிவித்தார்.

எதிர்வரும் தேர்தலில் தேசிய முன்னணிக்கு (பாரிசான் நேஷனல்) ஆதரவை வலுப்படுத்துவதையும், மஇகா வேட்பாளரான சகோதரர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவைத் திரட்டுவதையும் நோக்கமாகக் கொண்டு நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், வேட்பாளர் பன்னீர்செல்வமும் நேரில் கலந்துகொண்டார்.

மேலும், மஇகா தேசிய மகளிர் பிரிவுத் தலைவி திருமதி சரஸ் நல்லதம்பி, மஇகா மூத்த மகளிர் தலைவிகளின் பொறுப்பாளர் திருமதி ஆர். விக்னேஸ்வரி பாபுஜி மற்றும் மத்திய செயற்குழு உறுப்பினர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

பெர்லிங் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட இளைஞர் மற்றும் மகளிர் பொறுப்பாளர்கள் இக்கூட்டத்தில் திரளாகக் கலந்துகொண்டனர். தேசியத் தலைவர் மேற்கொண்ட சூறாவளிப் பயணத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக இந்தக் கலந்துரையாடல் அமைந்தது.

கூட்டத்தில், ஜொகூர் மாநிலத்தில் வாழும் இந்தியர்களின் நலனுக்காக மஇகாவும் தேசிய முன்னணியும் முன்னெடுத்து வரும் திட்டங்கள், அவற்றின் செயல்பாடுகள் மற்றும் மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நடவடிக்கைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

-காளிதாசன் இளங்கோவன்

கோலாலம்பூர், ஜூலை 6-
இளம் பெண்களும் பல்வேறு துறைகளில் சாதிக்க முடியும் என்பதை உலகிற்கு நிரூபித்துள்ளார் 15 வயதான கேப்டன் தனுஶ்ரீ அன்பரசன். தனது துடிப்பும் திறமையும் கொண்டு கால்பந்து அரங்கில் புதிய வரலாறு படைத்துள்ளார்.

கிளானா ஜெயா PKNS அரங்கில் ஜூன் 28 ஆம் நாள் நடைபெற்ற 16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான FAM Liga Puteri Cup Final இறுதிப்போட்டியில், Penang Indian FC அணி வீரத்துடன் விளையாடி, Perlima United FC அணியை 3–2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் கிடைத்த வாய்ப்புகளைச் சரியாக பயன்படுத்திய பினாங்கு இந்தியன் FC, உறுதியான மனநிலையுடன் ஆட்டத்தின் போக்கையே தம் பக்கம் மாற்றிக்கொண்டது.

இதன் விளைவாக, வெற்றிக் கிண்ணத்துடன் 5,000 வெள்ளி ரொக்கப் பரிசும் அணிக்கு வழங்கப்பட்டது.

இந்தத் தொடரில் கேப்டன் தனுஶ்ரீ அன்பரசன் 7 போட்டிகளில் 15 கோல்கள் அடித்து, லீகாவின் சிறந்த கோல் வீராங்கனையாகத் திகழ்ந்தார்.

கெடா மாநிலம் கூலிம் பகுதியில் உள்ள கலாடி இடைநிலைப் பள்ளியில் கல்வி பயிலும் மாணவியாவார் இவர்.

அணித் தலைவர் ஸ்ரீ சங்கர் கூறுகையில், “இது நீண்ட கால உழைப்பின் பயனும் அர்ப்பணிப்பின் வெளிப்பாடும் ஆகும். தனுஶ்ரீ வெறும் கோல் அடிக்கும் வீராங்கனை அல்ல; முக்கிய தருணங்களில் ஆட்டத்தை மாற்றும் ஆற்றல் கொண்டவர்,” எனப் பெருமிதம் தெரிவித்தார்.

இவ்வாறு, தன் இளமைப் பருவத்திலேயே திறமையால் விளையாட்டு உலகில் முத்திரை பதித்து, பினாங்கு இந்தியன் FC அணிக்கு மகுடம் சூட்டியுள்ளார் கேப்டன் தனுஶ்ரீ அன்பரசன்.

கோலாலம்பூர், ஜூலை 6-
பகாங் மாநிலம், ரவூப்பில் அமைந்துள்ள ஸ்ரீ சிவ சுப்பிரமணியர் ஆலயத்தின் புதிதாகக் கட்டப்பட்டு புதுப்பொலிவு பெற்ற ராஜகோபுரத்தின் அஷ்டபந்தன பஞ்சகுண்ட மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் ஜூலை 12, 2026 (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.45 மணி முதல் 10.45 மணி வரை சிறப்பாக நடைபெறவுள்ளது.

பல ஆண்டுகளாக பக்தர்களின் ஆதரவுடனும், ஆலய நிர்வாகத்தின் முயற்சியுடனும் எழுப்பப்பட்டுள்ள இந்த பிரமாண்டமான ராஜகோபுரம், ஆலயத்தின் ஆன்மிகப் பெருமையையும், திராவிடக் கோயில் கட்டிடக்கலையின் சிறப்பையும் பிரதிபலிக்கும் புதிய அடையாளமாக விளங்குகிறது.

இந்த ராஜகோபுர கும்பாபிஷேகம், ரவூப் மற்றும் சுற்றுவட்டார இந்து மக்களுக்கான முக்கிய ஆன்மிக நிகழ்வாகக் கருதப்படுகிறது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜூலை 11, 2026 (சனிக்கிழமை) இரவு 9.30 மணிக்கு, வாணவேடிக்கை மற்றும் வான ஒளிக்காட்சி (Sky Display) நடைபெறவுள்ளது.

குடும்பத்தினருடன் திரளாகக் கலந்து கொண்டு இந்த அரிய ஆன்மிக நிகழ்வைக் கண்டு இறையருள் பெறுமாறு ஆலய நிர்வாகம் பக்தர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மஇகாவின் தேசியத் தலைவர் டான் ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் கலந்துகொள்ள உள்ளார். மேலும், கவுரவ விருந்தினராக மசீச தேசிய பொதுச் செயலாளரும் பகாங் மாநில மசீச தலைவருமான டத்தோக் சோங் சின் வூன் பங்கேற்கவுள்ளார்.

இந்த மகா கும்பாபிஷேக ஏற்பாடுகளை ஆலயத் தலைவர் டத்தோ கே. தமிழ்செல்வன் தலைமையில், ரவூப் இந்து ஆலய சபா  மற்றும் அதன் நிர்வாகக் குழுவினர் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த மகா கும்பாபிஷேகம், புதிய ராஜகோபுரத்தின் திருப்பணியை நிறைவு செய்யும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக மட்டுமன்றி, பக்தர்களின் ஒற்றுமையையும் இறைநம்பிக்கையையும் வெளிப்படுத்தும் ஆன்மிக விழாவாகவும் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது