loader

உள்ளூர் செய்திகள்

சமீபத்திய செய்திகள்

கோலாலம்பூர், ஜூன் 2 –

எஸ்.பி.எம் தேர்வில் விருப்பப் பாடமாக தமிழ்மொழியைத் தேர்வு செய்ய விரும்பும் மாணவர்கள் எதிர்கொள்ளும் தடைகள் குறித்து கல்வி அமைச்சு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிகேஆர் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் மத்திய தலைமைக் குழு உறுப்பினருமான சிவமலர் கணபதி வலியுறுத்தியுள்ளார்.

அண்மையில் ஸ்ரீ முருகன் நிலையத்தின் நிர்வாகி சுரேன் கந்தா அவர்கள் வெளியிட்ட செய்தி அறிக்கையின் மூலம் அவர் முன்வைத்துள்ள பிரச்சினைகள் கவலைக்குரியவை என்றும், மாணவர்களின் மொழிக் கல்வி உரிமை மற்றும் பண்பாட்டு அடையாளத்தைப் பாதுகாக்கும் விவகாரமாக இதனை அணுக வேண்டும் என்றும் சிவமலர்  தெரிவித்துள்ளார்.

2014ஆம் ஆண்டு நாடு முழுவதும் தமிழ்ப்பள்ளிகளில் முதலாம் ஆண்டில் சேர்ந்த 13,688 மாணவர்களில், 2024ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் தமிழ்மொழிப் பாடத்தை எழுதியவர்கள் வெறும் 7,609 பேர் மட்டுமே எனக் குறிப்பிட்ட அவர், இது சுமார் 45 விழுக்காடு வீழ்ச்சியைக் காட்டுவதாகச் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டினார்.

இந்த வீழ்ச்சி பள்ளி மட்டத்திலான அமலாக்கம், நிர்வாக நடைமுறைகள் குறித்தும் பெற்றோர் மற்றும் மாணவர்களிடையே உள்ள  விழிப்புணர்வு உட்பட மேலும் மேல்நிலைப் பள்ளிகளில் தமிழ்மொழிக் கல்விக்கு வழங்கப்படும் ஆதரவு போன்ற அம்சங்கள் குறித்து பல கேள்விகளை எழுப்புவதாக அவர் கூறினார்.

2023ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தமிழ்மொழிக் கல்விக்கான அணுகலை எளிதாக்கும் வகையில் நடைமுறைகளை மறுஆய்வு செய்ய கல்வி அமைச்சுக்கு உத்தரவிட்டதை நினைவுகூர்ந்த சிவமலர், அது சமூகத்தின் நீண்டகால கோரிக்கைகளுக்கு சாதகமான நடவடிக்கையாக அமைந்ததாக தெரிவித்தார்.

அதேபோல், மலாயா பல்கலைக்கழகத்தில் 2024ஆம் ஆண்டு திருவள்ளுவர் இருக்கை நிறுவப்பட்டதும், தமிழ்மொழி, இலக்கியம் மற்றும் ஆய்வுகளை மேம்படுத்தும் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், தேவையற்ற நிர்வாகத் தடைகள் இன்னும் தொடர்வதாகக் கூறிய அவர், கடந்த ஆண்டு பாங்கியில் நான்கு மாணவர்கள் தமிழ்மொழி எஸ்.பி.எம். பாடத்திற்குப் பதிவு செய்யத் தடுக்கப்பட்ட சம்பவத்தை எடுத்துக்காட்டினார்.

பொதுமக்கள் மற்றும் பல தரப்பினரின் தலையீட்டிற்குப் பிறகே அந்த முடிவு மாற்றப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழ்மொழி போன்ற அங்கீகரிக்கப்பட்ட பாடத்தைப் படிக்கவும் தேர்வெழுதவும் மாணவர்கள் தேவையற்ற அலுவலகச் சிக்கல்களையும் முரண்பட்ட விதிமுறை விளக்கங்களையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை இருக்கக்கூடாது. கல்வி மற்றும் மொழி உரிமைகள் நிர்வாகச் சிக்கல்களால் பாதிக்கப்படக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.

எனவே, தமிழ்மொழிப் பாடத்தில் மாணவர்கள் பங்கேற்பு குறைந்து வருவதற்கான காரணங்களை கல்வி அமைச்சு முழுமையாக ஆய்வு செய்து, தகுதியுள்ள அனைத்து மாணவர்களும் எந்தத் தடையும் இன்றி தமிழ்மொழிக் கல்வியையும் தேர்வையும் அணுகக்கூடிய வகையில் நாடு தழுவிய தெளிவான கொள்கையை அமல்படுத்த வேண்டும் என சிவமலர் கணபதி கேட்டுக்கொண்டார்.

தமிழ்மொழிக் கல்வியின் எதிர்காலம் ஒவ்வொரு பிரச்சினையும் எழும் போதும் தனித்தனியான தலையீடுகளின் அடிப்படையில் அமையக் கூடாது என்றும், நிலையான, வெளிப்படையான மற்றும் மாணவர் நலனை மையமாகக் கொண்ட தீர்வு அவசரமாக தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை:
ஒரு நாட்டின் வரலாறு, பண்பாடு, மொழி மற்றும் அடையாளத்தைப் புரிந்துகொள்வதற்கு பழஞ்சுவடி காப்பகங்கள் முக்கிய தளங்களாக விளங்குகின்றன என்று தேசிய ஒருமைப்பாட்டு துணையமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் கூறினார்.

சென்னைக்கான தனது அலுவலக் பயணத்தின் போது, எழும்பூரில் அமைந்துள்ள தமிழ்நாட்டின்பழஞ்சுவடி காப்பகம் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தை அவர் பார்வையிட்டார்.

தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வப் பழஞ்சுவடி காப்பகமாக செயல்பட்டு வரும் இந்த மையம், வரலாற்றுப் பதிவுகள், அரசாங்க ஆவணங்கள், கையெழுத்துப் பிரதிகள், நிலப் பதிவுகள், அரசிதழ்கள் மற்றும் தமிழ்நாடு, முன்னாள் மெட்ராஸ் தொடர்பான ஆய்வுப் பொருட்களைப் பாதுகாத்து வருவதாக அவர் கூறினார்.

1805ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தக் காப்பகம் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளதாகவும், 1909-ஆம் ஆண்டு மெட்ராஸ் பதிவகமாகச் செயல்பட்ட பின்னர், 1973ஆம் ஆண்டு தமிழ்நாடு பழஞ்சுவடி காப்பகம் மற்றும் வரலாற்று ஆய்வு மையம் என மறுபெயரிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இங்கு 1670 முதல் 1857 வரையிலான கிழக்கிந்திய கம்பெனி ஆவணங்கள், டச்சு, டேனிஷ் மற்றும் பாரசீக மொழிப் பதிவுகள், போர்ட் செயின்ட் ஜார்ஜ் அரசிதழ்கள் உள்ளிட்ட பல அரிய ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

இந்தப் பயணம் தனக்கு மிகவும் அர்த்தமுள்ளதாக அமைந்ததாகக் கூறிய அவர், மலேசிய தேசிய பழஞ்சுவடி காப்பகமும் தேசிய ஒருமைப்பாட்டு மைப்பாட்டு அமைச்சின் கீழ் இயங்கி வருவதைச் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் வரலாற்றுப் பதிவுகள், அரசாங்க ஆவணங்கள் மற்றும் எழுத்து வடிவிலான பாரம்பரியச் செல்வங்களைப் பாதுகாத்து, இன்றைய மற்றும் எதிர்கால தலைமுறைகளுக்கான முக்கிய ஆதாரமாக விளங்குவது அதன் மிகப்பெரிய பொறுப்பாகும் என்று அவர் கூறினார்.

பழஞ்சுவடி காப்பகம் என்பது பழைய ஆவணங்களைப் பாதுகாக்கும் இடம் மட்டுமல்ல; அஃது அறிவின் மையமாகவும், ஒரு நாட்டின் நினைவகமாகவும், சமூகத்தின் வரலாறு மற்றும் அடையாளத்தைப் புரிந்துகொள்ள உதவும் முக்கிய தளமாகவும் திகழ்கிறது என்று அவர் தெரிவித்தார்.

இளைஞர்கள் வரலாற்றை வெறும் கடந்தகாலக் கதையாகப் பார்க்காமல், எதிர்காலத்தை நம்பிக்கையுடனும் தெளிவுடனும் கட்டியெழுப்ப உதவும் வழிகாட்டியாகக் காண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், இந்தப் பயணம் மலேசியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான அறிவுப் பரிமாற்றம், பண்பாட்டு ஒத்துழைப்பு மற்றும் மக்களுக்கிடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளியிட்டார்.

கோலாலம்பூர், மே 26–

சுங்கை பெட்டாணி எஸ்.ஜி டிவிசன் பகுதியில் செயலில் இருந்த “கேங் ரமேஸ்” எனப்படும் திட்டமிட்ட குற்றக் குழுவின் தலைவர் என சந்தேகிக்கப்படும் நபரை மலேசிய அரச போலீஸ் ( PDRM) கைது செய்துள்ளது.

குற்றச்செயல்களுக்கு எதிராக நடத்தப்பட்ட  “ஒப் திகா” நடவடிக்கையின் கீழ் கடந்த மே 22ஆம் தேதி அன்று இந்தியா மற்றும் தாய்லாந்து அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் அந்த  சந்தேகநபர் கைது செய்யப்பட்டார் என புக்கிட் அமான் குற்றப்புலனாய்வு துறை இயக்குநர் டத்தோ எம். குமார் தெரிவித்துள்ளார்.

தாய்லாந்தின் பெங்காக்கிலிருந்து இந்தியாவின் ஹைதராபாத் நோக்கி சென்ற விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது அவர் கைது செய்யப்பட்டதாகவும், பின்னர் மலேசியாவிற்கு அழைத்து வரப்பட்டதாகவும் அவர் கூறினார்.

சுங்கை பெட்டாணி மஜிஸ்திரேட் நீதிமன்றம் பிறப்பித்த கைது வாரண்டின் அடிப்படையிலும், உளவுத்துறையின் (இன்டர்போல்) சிவப்பு அறிவிப்பு (Red Notice) இருந்ததாலும் அந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

இதனிடையே கைது செய்யப்பட்ட நபர் திட்டமிட்ட குற்றக் குழுவில் உறுப்பினராக செயல்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறார். இதுகுறித்து குற்றவியல் சட்டம் பிரிவு 130V கீழ் விசாரணை நடத்தப்படுகிறது என்று இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறைந்தது ஐந்து ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.

மேலும், வரும் மே 29ஆம் தேதி வரை தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள  சந்தேகநபர் மீது, 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் கெடா மாநிலத்தின் படாங் செராய் மற்றும் பெடோங் பகுதிகளில் இடம்பெற்ற இரண்டு தனித்தனி கொலை வழக்குகள் தொடர்பாக குற்றவியல் சட்டம் பிரிவு 302 கீழும் விசாரணை நடைபெற்று வருகிறது.

சம்பந்தப்பட்ட சந்தேகநபரை கண்டறிந்து கைது செய்ய இந்தியா மற்றும் தாய்லாந்து அதிகாரிகள் வழங்கிய நெருங்கிய ஒத்துழைப்புக்கு நாங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என டத்தோ எம். குமார் கூறினார்.

கோலாலம்பூர், மே 22 –
Pertubuhan Bitara Wawasan இயக்கத்தின் ஏற்பாட்டில், தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான நினைவாற்றல் மற்றும் தன்னம்பிக்கை மேம்பாட்டு பயிலரங்கம் இரண்டு நாட்கள் குயில் ஜெயபக்தி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த பயிலரங்கில் பல தமிழ்ப்பள்ளிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 62 மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

ரவாஙைச் சேர்ந்த Achievers Mind Academy மற்றும் அதன் அரசு சாரா இயக்க குழுவினர் இந்த நிகழ்ச்சியை திறம்பட வழிநடத்தினர்.

மாணவர்களின் தன்னம்பிக்கை வளர்ச்சி, மேடைப் பேச்சுத் திறன், பயமின்றி கருத்துகளை வெளிப்படுத்தும் திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில் இந்த பயிற்சி நடத்தப்பட்டது.

தெளிவான கருத்தமைப்பு, பேச்சை ஒழுங்குபடுத்துதல், கதை சொல்லும் திறன், நம்பிக்கையுடன் உரையாற்றுதல் போன்ற பல அம்சங்கள் பயிற்சியில் கற்பிக்கப்பட்டன.

பயிலரங்கின் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் குயில் பத்திரிகை ஆசிரியரும் ஜெய பக்தி நிறுவன இயக்குநருமான டத்தோ டாக்டர் கு.செல்வராஜு தலைமை ஏற்று உரையாற்றி, மாணவர்களுக்கு பயிற்சி சான்றிதழ்களை வழங்கினார்.

மேலும் செந்தூல் முத்தக படிபகம் தலைவர் பி. இராமன், பிந்தாரா வாவாசன் இயக்கத் தலைவர் ஆசிரியர் சுப்ரமணியம், Achievers Mind Academy நிறுவனர் மாஸ்டர் அழகன் கோவிந்தன், டத்தோ டாக்டர் சமரான் ரத்தினம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

நிறைவு நிகழ்வில் மாணவர்கள் தாங்கள் கற்றுக்கொண்ட பேச்சுத் திறன்களை மேடையில் வெளிப்படுத்தி, பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றனர்.

கோலாலம்பூர், மே 25 –
மஇகாவின் 80ஆம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, பல்வேறு நிகழ்ச்சிகள் தேசிய அளவில் நடைபெற்று வருவதாக மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ முருகையா தெரிவித்தார்.

இம்மாதம் 21ஆம் தேதி மஇகாவின் 80ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நாடு தழுவிய அளவில் கூட்டு பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றதாகவும், அதில் கலந்து கொண்ட அனைவருக்கும் அவர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

மேலும், இம்மாதம் 31ஆம் தேதி மஇகாவின் மாபெரும் குடும்ப தின விழா நாடு முழுவதும் உள்ள 150 தொகுதிகளில் நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த விழாவிற்கான பரிசுப் பொருட்கள் அனைத்தும் நேற்று சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டதாகவும்
மூவின மக்களும் இணைந்து கலந்து கொள்ளும் வகையில் இந்த குடும்ப தின விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இது கட்சியின் அடிப்படையில் நடத்தப்படும் நிகழ்ச்சி அல்ல என்றும், கட்சி பாராமல் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம் என்றும் அழைப்பு விடுத்தார்.

இந்த குடும்ப தின விழா மூலம் மக்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளவும், ஒற்றுமை உணர்வை வலுப்படுத்தவும் வாய்ப்பு உருவாகும் என அவர் குறிப்பிட்டார்.

விழாவில் இசை நாற்காலி, பூர்வகுடி மக்களின் “சும்பிட்”, சீனர்களின் “சும்பா” விளையாட்டு, கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, வரும் ஜூன் 7ஆம் தேதி மஇகா சார்பில் நாடு தழுவிய அளவில் மருத்துவ முகாம் நடத்தப்படவுள்ளதாகவும், அது 150 மஇகா தொகுதிகளிலும் நடைபெறும் என்றும் கூறினார்.

மக்களின் உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை முன்னிறுத்தியே இந்த மருத்துவ முகாம் நடத்தப்படுவதாக அவர் விளக்கமளித்தார்.

மஇகாவின் 80ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடைபெறும் ஏழு முக்கிய நிகழ்ச்சிகளிலும் மூவின மக்களும் கலந்து கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, குடும்ப தின விழா பொறுப்பாளர் டத்தோ மோகனா கூறுகையில், மஇகாவின் 80ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

வரும் மே 31ஆம் தேதி காலை 7.30 மணி முதல் குடும்ப தின விழா நடைபெறும் என்றும், இது மிகப்பெரிய அளவில் நடத்தப்படும் நிகழ்வாக அமையும் என்றும் அவர் கூறினார்.

மஇகா தொடர்ந்து மக்களுடன் இணைந்து செயல்பட்டு வருவதை இந்த விழா எடுத்துக்காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.