loader

உள்ளூர் செய்திகள்

சமீபத்திய செய்திகள்

கோலாலம்பூர், ஜூன் 25-
இயற்கையுடன் கலந்த இசை அனுபவத்தை வழங்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘நியோன் நிலவு 2.0’ இசை நிகழ்ச்சி, வரும் சனிக்கிழமை (27ஆம் தேதி) மோரிப் கடற்கரையில் சிறப்பாக நடைபெறவுள்ளது.

முன்னதாக இந்த நிகழ்ச்சியின் முதல் பதிப்பான நியோன் நிலவு அருவி ஓரத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட நிலையில், இம்முறை கடற்கரைச் சூழலில் இசை ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்க ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

மாலை 2 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் இசை நிகழ்ச்சிகளுடன், புதையல் தேடும் போட்டி உள்ளிட்ட பல்வேறு சுவாரஸ்யமான போட்டிகளும் இடம்பெறவுள்ளன.

மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் லாபம் முழுமையாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு குழந்தையின் சிகிச்சைக்காக வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இசை நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் பிரபல பாடகர்களான வேல்முருகன் மற்றும் அருள் பிரகாசம் ஆகியோர் தங்களது கலைப் படைப்புகளை வழங்கவுள்ளனர். அதேவேளையில் உள்ளூர் கலைஞர்களான சந்தேஷ், குமரேஷ் மற்றும் புவனேஸ்வரி ஆகியோரும் கலந்து கொண்டு பார்வையாளர்களை மகிழ்விக்கவுள்ளனர்.

நியோன் நிலவு 2.0 இசை நிகழ்ச்சியின் ஏற்பாட்டு நிறுவனமான ஜெனிராவின் இயக்குநர் ரூபன், மேற்கண்ட தகவல்களை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

செந்தூலிலுள்ள ரூட்ஸ் 88 ஸ்போர்ட் பாரில் இந்த நிகழ்ச்சியின் செய்தியாளர் சந்திப்புக் கூட்டம் நடைப்பெற்றது. இந்த பார் இந்த நிகழ்ச்சியின் ஆதரவாளர்களில் ஒன்றாகும்.

இதற்கிடையில் இந்த நிகழ்ச்சியின் முதன்மை ஆதரவாளர்களான எசான் குரூப், புளு பிரதர்ஸ் என அனைத்து நிறுவனங்களுக்கும் ஜெனிரா நிறுவனத்தின் சார்பில் ரூபன் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

கோலாலம்பூர், ஜூன் 25-
ஜொகூர் மாநிலத்தில் வசிக்கும் இந்திய சமூகத்தின் சமூக, கல்வி, பொருளாதார மற்றும் தலைமைத்துவ முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் டிரா மலேசியா 10 முக்கிய பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

கடந்த சில தசாப்தங்களில் தோட்டப்புறங்களில் வாழ்ந்த பெரும்பாலான இந்தியர்கள் நகர்ப்புற மற்றும் புறநகர் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்ததன் மூலம் கல்வி, தொழில்நுட்பம், வணிகம், தொழில்முனைவு, பொது சேவை மற்றும் அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனையாளர்கள் உருவாகியுள்ளதாக டிரா மலேசியா தெரிவித்துள்ளது.

எனினும், சமூகத்தின் ஒரு பகுதியினர் இன்னும் நகர்ப்புற வறுமை, கல்வி இடைநிறுத்தம், வேலைவாய்ப்பின்மை, குடியுரிமை மற்றும் அடையாள ஆவணப் பிரச்சினைகள், போதைப்பழக்கம், சமூகச் சீர்கேடுகள் மற்றும் பொருளாதார வாய்ப்புகளின் பற்றாக்குறை போன்ற சவால்களை எதிர்கொண்டு வருவதாக அது சுட்டிக்காட்டியுள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு, ஜொகூரில் 4 மக்கள் சேவை மையங்களை உருவாக்குதல், தொழில்முனைவோர் மற்றும் வணிக வளர்ச்சிக்கான வாய்ப்புகளை அதிகரித்தல், வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்திறன் பயிற்சிகளை விரிவுபடுத்துதல், மலிவு விலை வீட்டு வசதி மற்றும் வீட்டுரிமைத் திட்டங்களை மேம்படுத்துதல் ஆகிய பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், அனைவருக்கும் தரமான கல்வியை உறுதிப்படுத்துவதோடு தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு கூடுதல் கவனம் செலுத்துதல், குடியுரிமை மற்றும் அடையாள ஆவணப் பிரச்சினைகளுக்குத் துரித தீர்வு காணுதல், அரசாங்கக் குழுக்கள், அரசாங்க இணை நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி மன்றங்களில் இந்தியர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரித்தல் போன்ற அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

மேலும், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சமூக அமைப்புகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை வழங்குதல், இளைஞர்கள், பெண்கள் மற்றும் குடும்பங்களின் நலனை மேம்படுத்தும் திட்டங்களை செயல்படுத்துதல், மாநில அளவில் சமூக மேம்பாட்டு குழுவொன்றை அமைத்து அனைத்து முன்னெடுப்புகளையும் ஒருங்கிணைத்து கண்காணித்தல் ஆகிய பரிந்துரைகளையும் டிரா மலேசியா வலியுறுத்தியுள்ளது.

இந்த பரிந்துரைகள் வெறும் வாக்குறுதிகளாக அல்லாமல், நடைமுறைப்படுத்தக்கூடிய சமூக மேம்பாட்டுத் திட்டங்களாக உருவாக்கப்பட்டுள்ளதாக டிரா மலேசியா தெரிவித்துள்ளது.

அதேவேளை, இத்திட்டங்கள் வெற்றிபெற மக்களின் பங்களிப்பும் அவசியம் எனக் குறிப்பிட்டுள்ள டிரா மலேசியாவின் தலைவர் டத்தோ சரவணன், குறிப்பாக இளைஞர்கள், பெண்கள் மற்றும் முதல் முறையாக வாக்களிப்பவர்கள் தங்களது வாக்குரிமையின் சக்தியைப் பயன்படுத்தி சமூக தேவைகளை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

கோலாலம்பூர், ஜூன் 25-
சமூக வலைத்தளங்களில் மஇகா குறித்து பரப்பப்படும் அவதூறுகளையும் பொய்யான தகவல்களையும் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று மஇகாவின் தேசிய  உதவித் தலைவர் டத்தோ முருகையா கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக, ஜொகூரில் உள்ள மஇகா கட்டடம் விற்கப்பட்டுவிட்டதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல் முற்றிலும் பொய்யானது என்றும் அவர் தெரிவித்தார்.

“மஇகாவைப் பற்றிய தவறான தகவல்களையும் அவதூறுகளையும் பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை எட்டு பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

மஇகாவின் 80ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் எட்டு முக்கிய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதன்படி, கூட்டுப் பிரார்த்தனை, குடும்ப தின விழா மற்றும் விளையாட்டுப் போட்டிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.

அடுத்ததாக, சுகாதார அமைச்சின் ஒத்துழைப்புடன் வரும் ஜூன் 28ஆம் தேதி காலை முதல் மாலை வரை 152 தொகுதிகளிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படவுள்ளன என்றார்.

இந்த மருத்துவ முகாம்களில் அனைத்து இன மக்களும் பங்கேற்று பயனடையலாம் என்றும், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

மேலும், ஜூலை 4ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த பேச்சுப் போட்டி, இரு மாநிலங்களின் இடைத்தேர்தல் காரணமாக ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாவது வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, ஜூலை 26ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள அனைத்து மஇகா தொகுதிகளிலும் நெடுஓட்ட நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளதாகவும், அதற்கு எஸ்.எம். முத்து தலைமை தாங்குவார் என்றும் கூறினார்.

வரவிருக்கும் ஜொகூர் மாநில இடைத்தேர்தலை முன்னிட்டு, 56 பகுதிகளில் மஇகா பிரதிநிதிகள் களமிறங்கி தேசிய முன்னணிக்கு ஆதரவாக வாக்குச் சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

“ஜொகூர் மாநிலம் தேசிய முன்னணியின் முக்கியமான கோட்டையாகும். இம்முறையும் இந்தியர்கள் தேசிய முன்னணிக்கு ஆதரவு வழங்குவார்கள் என்று நம்புகிறோம். தேசிய முன்னணி 50 இடங்களை வெல்லும் இலக்குடன் களமிறங்கியுள்ளது,” என்றும் டத்தோ முருகையா கூறினார்.

கோலாலம்பூர்,ஜூன் 20-
பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் தலைமைத்துவ மாற்றம் ஏற்படாத வரை அந்த கூட்டணியுடன் எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தப் போவதில்லை என மலேசிய முன்னேற்ற கட்சியின் தலைவர் பி. வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், தற்போது பாரிசான் நேஷனல் மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் தலைமைகளுடன் மட்டுமே பேச்சுவார்த்தைகள் நடத்த தயாராக இருப்பதாக கூறினார்.

எனினும், பெரிக்காத்தான் நேஷனலில் சில உள்பிரச்சினைகள் நிலவுவதால், இரண்டு மாநிலங்களில் நடைபெறும் இடைத்தேர்தல்களில் தங்களது இயக்கம் கவனம் செலுத்தவில்லை என்றும், தங்களது முக்கிய இலக்கு அடுத்த பொதுத் தேர்தலே என்றும் கூறினார்.

இந்திய சமுதாயத்தின் முன்னேற்றம் குறித்து கருத்து தெரிவித்த அவர், இந்தியர்களை தேசிய பொருளாதாரத்தின் பிரதான நீரோட்டத்தில் இணைக்க வேண்டிய அவசியம் இருப்பதாக வலியுறுத்தினார். “மருத்துவ சேவை மட்டுமே அனைவருக்கும் சமமாக கிடைக்கிறது. அதற்கு அப்பாற்பட்ட பல துறைகளில் இந்திய சமுதாயம் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியர்களுக்கு வழங்க வேண்டிய உரிமைகளையும் வாய்ப்புகளையும் வழங்குவோம் என அரசாங்கம் கூறுகிறது. ஆனால் அவற்றை உறுதியாகக் கேட்டு பெறக்கூடிய தலைமைத்துவம் தற்போது இல்லை,” என்றார்.

மேலும், அனைத்து இந்திய அடிப்படையிலான அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து இந்திய சமுதாயத்தின் குரலாக செயல்பட வேண்டும் என தாம் முன்மொழிந்ததாகவும், மூத்த இந்திய அரசியல் கட்சியான மஇகா இதற்கு தலைமை தாங்க வேண்டும் என்று ஆர்எம்13 பட்ஜெட் தொடர்பான விவாதங்களின் போது அழைப்பு விடுத்ததாகவும் தெரிவித்தார். ஆனால் இதுவரை அதற்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றும், எந்த முன்னெடுப்பும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறினார்.

“பொய்களை நம்பிக்கொண்டிருக்கும் வரை நமது சமுதாயம் தொடர்ந்து ஏமாற்றமடைந்து கொண்டே இருக்கும். மாயையான அரசியல் வாக்குறுதிகளிலிருந்து மக்கள் வெளியே வர வேண்டும்.

இந்தியர்களின் உரிமைகளை வலியுறுத்திக் கேட்க எந்த அரசியல் கட்சிக்கும் துணிச்சல் இல்லை. இந்திய சமுதாயம் அடிமை மனப்பான்மை கொண்ட தலைவர்களை வைத்திருக்கும் வரை, சமூகமும் அடிமைகளாகவே பார்க்கப்படும்,” என்றும் வேதமூர்த்தி கடுமையாக விமர்சித்தார்.

கோலாலம்பூர், ஜூன் 19-
மலேசியாவின் திறமையான பாடகர்கள் மற்றும் நடனக் கலைஞர்களை கண்டறிந்து ஊக்குவிக்கும் நோக்கில், சினிஃபெஸ்ட் மலேசியா (Cinefest Malaysia) “தி கிராண்ட் ஸ்டேஜ்: தி அல்டிமேட் சிங்கிங் & டான்ஸ் பேட்டில்” என்ற புதிய நாடளாவிய திறமையாளர் போட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது.

மொத்தம் வெ.120,000 பரிசுத் தொகையுடன் நடைபெறும் இந்தப் போட்டி, பாடல் மற்றும் நடனம் என இரண்டு பிரிவுகளில் நடத்தப்படவுள்ளதாக சினிபெஸ்ட் நிறுவனத்தின் இயக்குநர் லியோன் நெல்சன் தெரிவித்தார்.

இறுதிப் போட்டியில் “கிராண்ட் ஸ்டேஜ் அல்டிமேட் பாடல் சாம்பியன்” மற்றும் “அல்டிமேட் நடன சாம்பியன்” ஆகிய இரு வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.

“Where Stars Are Born” (நட்சத்திரங்கள் பிறக்கும் இடம்) என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறும் சினிஃபெஸ்ட் மலேசியாவின் விரிவான கலைப் பயணத்தின் முக்கிய அங்கமாக இந்தப் போட்டி அமைகிறது.

கடந்த ஒரு தசாப்த காலமாக சினிஃபெஸ்ட் மலேசியா ஏழு திரைப்பட விழாக்களையும், 2019ஆம் ஆண்டு நடைபெற்ற சினிஃபெஸ்ட் மலேசியா திரைப்பட விருதுகளையும் வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

அந்த நிகழ்வில் 2,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றதுடன், 33 விருதுகள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

தி கிராண்ட் ஸ்டேஜ் போட்டியில் தனிநபர் கலைஞர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். போட்டி அறிமுகப்படுத்தப்பட்ட நாளிலிருந்து 21 நாட்களுக்குள் போட்டியாளர்கள் தங்களது ஒத்திகை (Audition) காணொளிகளை அதிகாரப்பூர்வ சமர்ப்பிப்பு வழிகள் மூலம் அனுப்ப வேண்டும்.

போட்டியாளர்களின் திறமைகள் 70 சதவீதம்  நடுவர்களின் மதிப்பீடு மற்றும் 30 சதவீதம் பொதுமக்கள் வாக்கெடுப்பு அடிப்படையில் கணக்கிடப்படும்.

இதற்காக நடுவர்கள் குழு நியமிக்கப்படும்.
தேர்வு செய்யப்பட்ட போட்டியாளர்கள் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெறும் காலிறுதி (Quarter-Final) மற்றும் அரையிறுதி (Semi-Final) சுற்றுகளில் நேரடியாகப் பங்கேற்பர் என நெல்சன் தெரிவித்தார்.

பின்னர் சிறந்த 10 பாடகர்கள் மற்றும் 10 நடனக் கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, மொத்தம் 20 இறுதிப் போட்டியாளர்கள் இறுதிச் சுற்றில் களம் காண்பார்கள்.

மலேசியாவின் அடுத்த தலைமுறை கலை நட்சத்திரங்களை உருவாக்கும் நோக்கில் நடத்தப்படும் இந்தப் போட்டி, நாட்டின் பாடல் மற்றும் நடனத் துறைகளுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த போட்டிக்கான அறிமுக விழா மற்றும் செய்தியாளர் சந்திப்புக் கூட்டம் இன்று தலைநகரிலுள்ள பிரசித்திப்பெற்ற தங்கு விடுதியில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் நாட்டின் முன்னணி கலைஞர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.