loader

உள்ளூர் செய்திகள்

சமீபத்திய செய்திகள்

 

கோலாலம்பூர், பிப்.5-
உலகின் முதல் ஃபின்டெக் சக்தியூட்டப்பட்ட தங்க ATM தொழில்நுட்பத்தை உருவாக்கிய மலேசிய நிறுவனமான பப்ளிக் கோல்ட் ATM, துபாயைச் சேர்ந்த MAH Gold and Jewellery LLC மற்றும் ComTech Gold ஆகிய நிறுவனங்களுடன் மூலோபாய கூட்டாண்மையை ஏற்படுத்தி, உலகளவில் தங்க ATM-களை பெருமளவில் நிறுவும் திட்டத்தை தொடங்கியுள்ளது.

இந்த ஒப்பந்தங்கள் கோலாலம்பூரில் உள்ள மேனாரா பப்ளிக் கோல்டில் கையெழுத்திடப்பட்டன. 24 மணி நேரமும் செயல்படும் தங்க ATM மூலம் இ-வாலட், கிரெடிட் கார்டு வழியாக தங்கம் வாங்குதல், டிஜிட்டல் தங்க மீட்பு, கிரிப்டோவை தங்கமாக மாற்றுதல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன.

2023ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பப்ளிக் கோல்ட் ATM, இதுவரை மலேசியா, இந்தோனேசியா மற்றும் துபாயில் 155 தங்க ATM-களை நிறுவி, “அதிக எண்ணிக்கையிலான தங்க ATM நிறுவல்கள்” என்ற பிரிவில் GUINNESS WORLD RECORDS™ சாதனையை பெற்றுள்ளது.

இந்த புதிய கூட்டாண்மை, துபாய், மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவில் பப்ளிக் கோல்ட் ATM நிறுவனத்தின் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாயைத் தலைமையிடமாகக் கொண்ட ComTech Gold நிறுவனத்துடன் பப்ளிக் கோல்ட் ஏடிஎம் இணைந்து செயல்படுவது, அதன் முதல் டிஜிட்டல் தங்க ஒருங்கிணைப்பு ஆகும். இதன் மூலம் காம்‌டெக் வாடிக்கையாளர்கள் தங்களுடைய டிஜிட்டல் தங்கத்தை, பப்ளிக் கோல்ட் ஏடிஎம் வழியாக உடல் தங்கமாக மீட்டெடுக்க முடியும்.

பப்ளிக் கோல்ட் குழுமத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாகத் தலைவர் டத்தோ ஸ்ரீ லூயிஸ் எங், இந்த கூட்டாண்மை உலகளாவிய நிதி மற்றும் மதிப்புமிக்க உலோகத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என தெரிவித்தார்.

இந்த ஒத்துழைப்புகள், நிதி உட்சேர்க்கையை மேம்படுத்தி, நாடுகளின் தங்க சூழலை வலுப்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

இதன் மூலம் மலேசியா, டிஜிட்டல்–உடல் தங்க தொழில்நுட்பத்தில் உலகளாவிய முன்னணியில் தன்னை நிலைநிறுத்துகிறது.
ஒழுங்குமுறை அனுமதி கிடைத்தவுடன், இந்த ஆண்டு ஏடிஎம் நிறுவல் தொடங்கப்படும்.

 2026ஆம் ஆண்டில் 5 ஏடிஎம்கள், அடுத்த ஆண்டில் 50 ஏடிஎம்கள் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது என அவர் சொன்னார்.

பத்துமலை, பிப் 4-
பத்துமலை முருகன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தைப்பூசத் திருவிழாவின் போது, பல ஆண்டுகளாக இடைவிடாது தன்னார்வ சேவையில் ஈடுபட்டு வரும் 5 பேருக்கு திருக்கோயில் நிர்வாகம் சார்பில் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

அவர்களில், நீண்ட காலமாக அர்ப்பணிப்புடன் சேவை செய்து வரும் திருமதி பரிமளா கிருஷ்ணா அவர்களின் பங்களிப்பை பாராட்டும் வகையில், சிறப்பு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்தப் பாராட்டை ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தின் தலைவர் டத்தோ சுரேஷ் மற்றும் டத்தோஸ்ரீ நடராஜா ஆகியோர் வழங்கினர்.

ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழாவின் போது பத்துமலையில் திரளாக கூடும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு வழிகாட்டுதல், உதவி மற்றும் சேவை வழங்குவதில் திருமதி பரிமளா கிருஷ்ணா முக்கிய பங்காற்றி வருகிறார். பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட அவரது தன்னார்வ சேவை, சமூக சேவையின் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய திருமதி பரிமளா கிருஷ்ணா,
“பக்தர்களுக்கு சேவை செய்வதே எனக்கு கிடைக்கும் மிகப் பெரிய பலன். இருப்பினும், இந்த பாராட்டு என் சேவைக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக உள்ளது” என தனது நன்றியை தெரிவித்தார்.

தைப்பூசம் போன்ற மகத்தான சமய விழாக்களில் தன்னார்வலர்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்றும், திருமதி பரிமளா கிருஷ்ணா போன்ற சேவை மனப்பான்மை கொண்டவர்கள் சமுதாயத்திற்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள் என்றும் நிகழ்வில் கலந்து கொண்டோர் தெரிவித்தனர்.

இந்தப் பாராட்டைப் பெற்றவர்களில்,
கோலாலம்பூரைச் சேர்ந்த திருமதி பத்மாவதி,
பிரீக்ஃபீல்ட்ஸைச் சேர்ந்த திருமதி எம்.எஸ். ராணி,
திரு. மகேந்திரன்
மற்றும் திரு. கோவிந்தன் ஆகியோரும் இடம்பெற்றனர்.

 

கோலாலம்பூர், ஜன.27-
பிரதமராக செயல்படுவதற்கு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிற்கு தகுதி இருக்கிறதா எனக் கேட்டு சட்ட வல்லுனர் பொன். வேதமூர்த்தி தொடுத்துள்ள வழக்கு, அடுத்த மாதம் பிப்ரவரி 25ஆம் நாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

அரசியல் சாசன விதி 42-இன்படி, அன்வார் பெற்ற முழு பொது மன்னிப்பு, தண்டனையிலிருந்து விலக்கு பெறுவதற்குத்தானே தவிர,  அரசியல் சாசனம் 48 (1) (e) மற்றும் 48 (3) ஆகிய பிரிவுகளின்படி மாட்சிமைக்குரிய மாமன்னரிடமிருந்து தேர்தலில் போட்டியிடுவதற்கான அனுமதியை அன்வார்  பெறவில்லை. 

அதன்படி தேர்தலில் போட்டியிடுவதற்கான 5 ஆண்டு காலத் தடை நீடித்தது. 

இந்த சூழ்நிலையில் 2022 நவம்பர் 19-இல் நடைபெற்ற 15வது பொதுத் தேர்தலில் பேராக் மாநில தம்பூன் தொகுதியில் போட்டியிடுவதற்கான தகுதியை அன்வார் பெற்றிருக்கவில்லை. 

அதன்படி, அவர் தேர்தலில் போட்டியிட்டு மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டது அரசியல் சாசன  விதிகளின்படி செல்லாது என்ற நிலையில் அவர் நாட்டின் பத்தாவது பிரதமராக தொடரலாமா என்ற வினாவை  முன்வைத்து மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி  தலைவருமான பொன். வேதமூர்த்தி  ஏற்கெனவே வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று ஜனவரி 27ஆம் நாள் விசாரணைக்கு வந்த நிலையில் பிரதிவாதி  அன்வாரின் தரப்பு மூத்த வழக்கறிஞர் ரஞ்சித் சிங் 
உடல் நலக் குறைவு காரணமாக நீதிமன்றத்திற்கு வராத நிலையில் வழக்கு, அடுத்த மாதம் பிப்ரவரி 25ஆம் நாள் பிற்பகல் 2:30 மணிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக நீதிபதி Alice Loke தெரிவித்தார். 

அதேவேளை, 
வழக்கறிஞர் டேனியல் ஆல்பெர்ட், சட்டத்துறை அலுவலகத்தில் இருந்து சலாகுடின் ஆகியோர் அன்வார் சார்பில் முன்னிலை ஆகினர்.

இந்த வழக்கில், எம்ஏபி சட்ட ஆலோசகர் கார்த்திக், தன்னுடைய கார்த்திக் ஷான் நிறுவனத்தின் சார்பில் வழக்காடி வந்த நிலையில், இந்த வழக்கின் வாதியாகிய பொன். வேதமூர்த்தி, தானும் இந்த வழக்கில் வாதாடுவதற்காக  முன்வைத்த கோரிக்கையை நீதிமன்றம் இன்று ஏற்றுக் கொண்டது. 

இனி இந்த வழக்கில் பொன். வேதமூர்த்தியும் இணைந்து வழக்காடுவார்.


கோலாலம்பூர், ஜன.27-
எச்ஆர்டி கோர்ப்பின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமனம் செய்யப்பட்ட டத்தோ முகமது ஷாமிர் அப்துல் அஸிஸ் அவர்களுக்கு மிம்காய்ன் தலைவரும் ஏசான் குருப் தோற்றுநருமான டத்தோ ஹாஜி அப்துல் அமிட் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

முகமது ஷாமிர் முன்பு அமானா இக்தியார் மலேசியாவின் நிர்வாக இயக்குநராக பணியாற்றியுள்ளார். அந்த காலக்கட்டத்தில் அமானா இக்தியார் கிட்டத்தட்ட 99.98 விழுக்காடு சரியான திருப்பிச் செலுத்தும் விகிதத்தை அடைந்திருந்தது. அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு அதன் விகிதம் 100-ஆக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

ஆகையால் முகமது ஷாமிர் அவரது புதிய பதவிக்கு ஏராளமான அனுபவங்களுடன் வந்துள்ளார்.

திறன் மேம்பாடு, பணியாளர் பயிற்சி, மனித மூலதன நிலைத்தன்மை ஆகியவற்றில் எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் கவனத்தை மேம்படுத்துவதற்கான ஒரு முன்னோட்ட நடவடிக்கையாக அவரது நியமனம் பார்க்கப்படுவதாக டத்தோ ஹாஜி அப்துல் அமிட் தன் வாழ்த்து அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 

கோலாலம்பூர், ஜன.24-
பத்துமலை தைப்பூசத்தை முன்னிட்டு சாலை ஓரங்களில் அமைக்கப்படும் எம்பிஎஸ் கடைகளை வாடகை இம்முறை ஏல முறையில் வழங்கப்படுவது ஏன் என்றும் உடனடியாக இந்த முறையை ரத்து செய்ய வேண்டும் என தமிழர் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்ரீரமேஷ் தெரிவித்தார்.

பல ஆண்டுகளாக இங்கு கடைகளை குறைந்த வாடகைக்கு எடுத்து வியாபாரம் செய்துவரும் சிறு வியாபாரிகளின் வயிற்றில் அடிக்கும் இந்த செயலை அவர் கடுமையாக சாடினார்.

கடந்த ஆண்டு இந்த கடைகளை வெ.400-500 வரை வாடகைக்கு எடுத்த சிறு வியாபாரிகளுக்கு இந்த முறை பெரிய ஏமாற்றம்தான். தற்போது இந்த கடைகள் ஏல முறையில் வெ.4,000 முதல் வெ.18,000 வரை வாடகைக்கு விடுப்படுகிறது.

இங்கு கடைகளை வாடகைக்கு எடுத்து சுமார் வெ.2 ஆயிரம் வரை லாபம் பெற்ற சிறு வியாபாரிகள் வாடகைக்கே குறந்தது வெ.4 ஆயிரம் வரை செலுத்த சொல்வதில் எந்த நியாயமும் இல்லை என ஸ்ரீ ரமேஷ் தெரிவித்தார்.

இந்த தொகுதியில் மூன்று இந்திய நகராண்மைக் கழக உறுப்பினர்கள் உள்ளனர். இந்த விவகாரம் குறித்து அம்மூவரும் வாய் மூடி இருப்பது ஏன்?

இந்த ஏல முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். சிலாங்கூர் மாநில மந்திரி புசார் இந்த விவகாரத்தில் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்று பத்துமலையில் கூடிய சிறு வியாபாரிகள் கேட்டுக் கொண்டனர்.

செய்தி: காளிதாசன் தியாகராஜன்