loader

உள்ளூர் செய்திகள்

சமீபத்திய செய்திகள்

கோலாலம்பூர், மே 20 –
சமையல் துறையில் மலேசியாவின் பெயரை சர்வதேச அரங்கில் உயர்த்தும் வகையில், மாஸ்டர் செஃப் மற்றும் சிறந்த சமையல் கலைக்கான விருதைப் பெற்று தங்கப்பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார் “செஃப் மன்னன்” என்று அழைக்கப்படும் 35 வயதுடைய லெட்சுமணன் புலேன்ரன்.

உழைப்பு, ஒழுக்கம் மற்றும் புதுமையான சமையல் கலைத்திறன் ஆகியவற்றின் மூலம் சர்வதேச அளவில் தனக்கென ஒரு முத்திரையை பதித்துள்ள செஃப் மன்னன், மலேசிய சமையல் பாரம்பரியத்தை உலக நாடுகளுக்கு எடுத்துச் செல்லும் பணியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

2025ஆம் ஆண்டு எகிப்தில் நடைபெற்ற Creative Chefs Forum Season 3 சர்வதேச சமையல் போட்டியில் மலேசியாவை பிரதிநிதித்துவப்படுத்திய அவர், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த புகழ்பெற்ற சமையல் கலைஞர்களுடன் போட்டியிட்டு, " Heritage Cuisine – Hot Cooking" பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.

அவர் தயாரித்த மலேசிய மக்களின் விருப்பமான உணவான பிரியாணியின்
பாரம்பரிய முறையிலான தயாரிப்பும்,
தனித்துவமான சுவையும் மற்றும்   அணுகுமுறையும்  நடுவர் குழுவினர்களின்  சிறந்த பாராட்டுகளை பெற்றதோடு, சுவை, அலங்காரம் மற்றும் படைப்பாற்றலில் சிறந்து விளங்கிய அவரது திறமை அனைவரையும் கவர்ந்தும் உள்ளது.

இதனைத் தொடர்ந்து, 2026ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற Indian Culinary Premier League போட்டியிலும் செஃப் மன்னன் மலேசியாவை பெருமையுடன் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

இப்போட்டியில் அவர் “Honorary Award – Diploma in Culinary” விருதைப் பெற்றதுடன், அதிகாரப்பூர்வமாக Culinary Gold Winner சமையல் கலைக்கான
தங்கப் பதக்கத்தையும் வென்றார்.

Royal Bengal Master Chef Organization (RBMCO) வழங்கிய இந்த அங்கீகாரம், செஃப் மன்னனின் சர்வதேச தரமான சமையல் திறனை உலகுக்கு மீண்டும் நிரூபித்துள்ளது.

“Chicken Rendang உடன் Ghee Rice” என்ற அவரது சிறப்பு உணவு, மலேசியாவின் உண்மையான பாரம்பரிய சுவையை உலக அரங்கில் சிறப்பாக எடுத்துக்காட்டியது.
சுவை சமநிலை, தொழில்நுட்ப திறன், புதுமை மற்றும் கலைநயமிக்க அலங்காரம் ஆகியவற்றிற்காக அவர் நடுவர்களின் உயர்ந்த பாராட்டுகளைப் பெற்றார்.

சமையல் துறையில் கொடி கட்டிப் பறக்கும் செஃப் மன்னனின் இந்த சாதனைகள், இளம் சமையல் கலைஞர்களுக்கு ஒரு மிகப்பெரிய ஊக்கமாக அமைந்துள்ளதுடன், மலேசிய சமையல் கலையின் பெருமையையும் உலகளவில் உயர்த்தியுள்ளது.
அவரின் இந்த மகத்தான சாதனைகளுக்காக சமூகத்தின் பல தரப்பினரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

கோலாலம்பூர்,மே 18-
மலேசிய இந்திய வர்த்தக மற்றும் தொழில் சங்கத்தின் (MAICCI) தலைவர் டத்தோ ஸ்ரீ கோபாலகிருஷ்ணன், “MAICCI – MUDRA Roadshow 2026” என்ற திட்டத்தை நாடு முழுவதும் நடத்தப்படவுள்ளதாக அறிவித்தார்.

இந்த திட்டம், தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சின் (KUSKOP) கீழ் செயல்படுத்தப்படும் MUDRA 2026 பொருளாதார ஊக்கத் திட்டத்தின் ஓர் முக்கிய முயற்சியாகும்.

இந்த திட்டத்தின் கீழ் இதுவரை வெ.220 மில்லியன் மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை மைக்கி முழுமையாக வரவேற்பதாக அவர் மேலும் கூறினார்.

இந்த ரோட்ஷோ மூலம் நாடு முழுவதும் உள்ள 3,000-க்கும் மேற்பட்ட இந்திய தொழில்முனைவோர்களுக்கு நிதி உதவி, பயிற்சி, தொழில் வளர்ச்சி வாய்ப்புகள் மற்றும் வணிக வலையமைப்பு தொடர்பான தகவல்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், இளைஞர் தொழில்முனைவோர், பெண்கள் தொழில்முனைவோர் மற்றும் இந்திய கூட்டுறவுச் சங்கங்களை அணுகும் முக்கிய தளமாக இந்த திட்டம் அமையும் எனவும் டத்தோ ஸ்ரீ கோபாலகிருஷ்ணன் கூறினார்.

இந்த திட்டத்தின் முதல் நிகழ்ச்சி கடந்த மே 10ஆம் தேதி புக்கிட் மெர்தாஜாம், பினாங்கில் நடைபெற்றது. தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் ஸ்டீவன் சிம் நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு உள்ளூர் தொழில்முனைவோர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததாகவும், MUDRA திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி மற்றும் தொழில் மேம்பாட்டு வாய்ப்புகள் குறித்து பலர் ஆர்வம் காட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள வெ.220 மில்லியனில் இதுவரை வெ.70 மில்லியன் தொழில் முனைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த மானியத்திற்கு விண்ணப்பம் செய்வதற்கு தொழில் முனைவர்களுக்கு மைக்கி உதவி செய்யவும் தயாராக உள்ளதாக அவர் சொன்னார்.

கோலாலம்பூர், மே 18-
அந்நியத் தொழிலாளர்கள் பற்றாகுறையால் தொழில்முனைவர் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக இந்திய வியாபாரிகள் அதிக அளவில் பாதிகப்பட்டு வருகின்றனர் என மைக்கி தலைவர் டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் கவலையாக தெரிவித்தார்.

கேட்டு கேட்டு கையேந்தி மனம் உடைந்து போச்சு, அமைச்சகம் அமைச்சகமாக நடந்து கால்கள் ஓய்ந்து போச்சு. ஆனால் எங்களுக்கான தீர்வும் பிறக்கவில்லை கதவும் திறக்கவில்லை என்றார் அவர்.

உள்துறை அமைச்சு மற்றும் மனிதவள அமைச்சின்  தொடச்சியான மௌனத்தில் தொழில்முனைவர்கள் எங்களை தெருவில் விட்டு விடாதீர்கள் என டத்தோ கோபாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தார்.

நாளுக்கு நாள் நிலைமை மோசமாக போய் கொண்டிருக்கிறது. வியாபாரத்தை நடத்த முடியாமல் பல கடைகள் மூடப்பட்டு  வியாபாரிகள் கடன் தொல்லையில் சிக்கி தவிக்கிறார்கள்.

இந்த இரண்டு அமைச்சின் மௌனம் நீடிக்குமானால் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேரடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு எங்களுக்கு ஒரு விடியல் கொடுக்க வேண்டும். அதையும் விரைந்து கொடுக்க காரணம் நிலைமை அதிக மோசமாக உள்ளது.

வாழ்வாதாரம் பாதிப்பு மற்றும் இது நாட்டின் பொருளாதாரத்தை  பாதிக்கும் என்றார் அவர்.

உடனே பிரதமர் தலையிட வேண்டும், இல்லையேல் வெள்ளம் வந்த பிறகு அனைப்போட்டு ஒரு புண்ணியம் இல்லை. அனைவருக்கும் அது பெரிய அளவில் பாதிப்பை கொடுக்கும் என்றார் டத்தோ ஸ்ரீ கோபாலகிருஷ்ணன்.

சிரம்பான், மே 16 —

நாடு முழுவதிலிருந்தும் வந்த சுமார் 300 மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் கலந்து கொண்ட “ஸ்மார்ட் ரைடர்ஸ்” தேசிய ஒன்று கூடல் நேற்று இரவு சிரம்பானில் கோலாகலமாக நடைபெற்றது.

ஸ்மார்ட் ரைடர்ஸ் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வு, சிரம்பான் காடோங் ஜெயாவில் உள்ள பெட்ரோன் பெட்ரோல் நிலையத்தில் தொடங்கியது. அங்கு ஒன்று திரண்ட பைக்கர்கள் அணிவகுத்து ஊர்வலமாக பயணித்து, பின்னர் View Park Restaurant-இல் “தேநீர் ஒன்று கூடல்” நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட மஇகாவின் தேசிய விளையாட்டுப் பிரிவின் தலைவர் எண்ட்ரு, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களின் பொறுப்பு, கட்டுப்பாடு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து உரையாற்றியதுடன், பங்கேற்ற அனைவரையும் வரவேற்றார்.

டத்தோ பாலன் நாயர் தலைமையில் நடைபெற்ற இந்த ஒன்று கூடல், மாநில மற்றும் வட்டார அளவுகளில் செயல்பட்டு வரும் சிறு பைக்கர் குழுக்களை தேசிய ரீதியில் ஒன்றிணைக்கும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டதாக எண்ட்ரு தெரிவித்தார்.

மேலும், உறுப்பினர்கள் தங்களது பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், எதிர்காலத்தில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளில் ஈடுபடவும் இந்த நிகழ்வு வழிவகுத்ததாக அவர் கூறினார்.

ஒரே இடத்தில் 300-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் ஒன்று கூடிய இந்த நிகழ்வு மலேசிய சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்வின் சிறப்பம்சமாக, சு. கதிரவன் கௌரவிக்கப்பட்டார். அவர் 109 நாடுகளில் 2,08,941 கிலோமீட்டர் தூரம் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து சாதனை படைத்துள்ளார்.

புவி வெப்பமாதல் மற்றும் வன பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், தனது 62-ஆவது வயதில் 2023 ஜனவரி 2ஆம் தேதி தொடங்கிய இந்த உலகப் பயணத்தை, 65 வயதில் இந்த ஆண்டு மே 9ஆம் தேதி வெற்றிகரமாக நிறைவு செய்தார். பயணத்தின் போது பல்வேறு நாடுகளில் 190 மரங்களை நட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் அவர் பங்களித்துள்ளார்.

கோல சிலாங்கூர், மே 16 -
கெஅடிலான் கட்சியின் கோல சிலாங்கூர் கிளையின் ஆண்டு பொதுக்கூட்டத்தில், கிளைத் தலைவர் எம். சிவபாலனை எதிர்த்து கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக ஏற்ப்பட்ட சர்ச்சையை தொடர்ந்து அங்கு சலசலப்பு ஏற்ப்பட்டது.

கூட்டம் முடிந்து சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு குழுவினர் மீண்டும் மண்டபத்திற்குள் நுழைந்து, சிவபாலனை எதிர்த்த நம்பிக்கையில்லா தீர்மானம் ஏன் விவாதிக்கப்படவில்லை அல்லது வாக்கெடுப்புக்கு விடப்படவில்லை என விளக்கம் கோரியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கிளைத் தலைவர் எம். சிவபாலன் கூறுகையில், அந்த தீர்மானம் ஏற்கப்பட்டாலும், அது கட்சியின் மத்திய தலைமையிடம் பரிசீலனைக்காக அனுப்பப்படும் என முன்மொழிந்தவர்களிடம் தெரிவிக்கப்பட்டதாக கூறினார்.

அவர்கள் அதைப் பற்றி விவாதிக்க வேண்டும் என்றனர். ஆனால் இது ஒரு தீர்மானம் மட்டுமே. அதனை வாக்கெடுப்புக்கு விட முடியாது. அது கட்சியின் உயர்மட்ட தலைமையிடம் கொண்டு செல்லப்பட வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.

அந்த தீர்மானத்தில் இரண்டு அம்சங்கள் இடம்பெற்றிருந்ததாகவும், ஒன்று தனக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மற்றும் மற்றொன்று கிராமத் தலைவர்களின் நியமனம் தொடர்பானதாகவும் அவர் கூறினார்.

“இந்த இரண்டு விவகாரங்களும் கிளை மட்டத்தில் முடிவு செய்யக்கூடியவை அல்ல. நம்பிக்கையில்லா தீர்மானம் கட்சியின் உயர்மட்ட தலைமையிடம் அனுப்பப்பட வேண்டும். கிராமத் தலைவர்களை நியமிப்பதும் எங்கள் அதிகார வரம்பிற்குள் இல்லை,” என்றார்.

இந்த பரபரப்பில் மூன்று பெண் உறுப்பினர்கள் காயமடைந்ததாகவும், சம்பவம் தொடர்பாக போலீஸ் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் சிவபாலன் தெரிவித்தார்.

மேலும், ஆண்டு பொதுக்கூட்டத்திற்கு முன்பாக தமக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், அதுதொடர்பாக நேற்று தனியாக போலீஸ் புகார் செய்ததாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையில், கெஅடிலான் பொதுச் செயலாளர் ஃபுசியா சாலே சம்பவத்தை உறுதிப்படுத்தியதுடன், “கோல சிலாங்கூர் கிளை கூட்டம் கட்சியின் அரசியலமைப்புக்கு ஏற்ப சுமூகமாகவும் சட்டபூர்வமாகவும் நடைபெற்றது” என்றார்.

கடந்த சில வாரங்களாக, கிளைத் தேர்தலைத் தொடர்ந்து ஏற்பட்ட உள்கட்சி பதற்றங்களால் கெஅடிலான் கோல சிலாங்கூர் கவனத்தை ஈர்த்திருந்தது.