loader

உள்ளூர் செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிரம்பான் ஜெயா, ஜூலை 20 – சிரம்பான் ஜெயா சட்டமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி வேட்பாளராக எண் 1-இல் போட்டியிடும் ஆர். தினாளன், இன்னும் இரண்டு நாட்களுக்குள் தனது தேர்தல் பிரச்சார அறிக்கையை வெளியிடவுள்ளதாக தெரிவித்தார்.

அந்த அறிக்கையில் மக்களின் தேவைகளை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் இடம்பெறும் என்றும், சிரம்பான் ஜெயா மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையிலான வாக்குறுதிகள் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

தாம் அரசியலுக்கு புதிதானவர் அல்ல என்றும், தனது தந்தை ராஜகோபாலின் வழிகாட்டுதலைப் பின்பற்றி நீண்ட காலமாக அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தினாளன் குறிப்பிட்டார்.

சிரம்பான் ஜெயா மக்களை சந்தித்தபோது, விளையாட்டுத் திடல்கள் இல்லாதது, தெருவிளக்குகள் போதுமான அளவில் இல்லாதது, கல்வி வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டியது உள்ளிட்ட பல்வேறு குறைகளை மக்கள் முன்வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறிப்பாக, மேற்கல்வி தொடர விரும்பும் இளைஞர்களுக்கு அதிகமான கல்வி வாய்ப்புகளையும் தேவையான ஆதரவுகளையும் ஏற்படுத்துவதற்கு தேசிய முன்னணியுடன் இணைந்து மஇகா பாடுபடும் என்றும் அவர் உறுதியளித்தார்.

வரவிருக்கும் தேர்தலில் சிரம்பான் ஜெயாவில் நீல அலை எழுச்சி ஏற்படும் என்ற நம்பிக்கை இருப்பதாகக் கூறிய ஆர். தினாளன், தொகுதி மக்களிடம் தேசிய முன்னணிக்கு ஆதரவு அளித்து எண் 1-க்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

புரோட்டோன் வாகன விற்பனை நிலையம் இன்று ஜூலை 19, ஞாயிற்றுக்கிழமை பகல்வேளையில் புதிதாக தொடக்கம் கண்டது.

புரோத்தோன் குடும்பத்தின் அனைத்து ரக வாகனங்களும் விற்பனை செய்யப்படும் ஓரிட விற்பனை மையமாக Cahaya Automotif Sdn Bhd வடிவமைக்கப்பட்டு இன்று இந்நிறுவனத்தின் தொடக்க விழா நடத்தப்பட்டது.

கோத்தா டாமண்சாரா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முகமட் இஸுவான் பின் அகமட் காசிம், புரோத்தோன் பொதுத் தொடர்பு இயக்குனர் திருமதி சுலாவாத்தி முகமட் யூசுஃப் உள்ளிட்டோர் இந்த வாகன விற்பனை மைய தொடக்க விழாவில் கலந்து கொண்டனர்.

சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயா, 47810 கோத்தா டாமன் சாரா, 27 Jalan PJU   5/20E THE STRAND என்னும் இடத்தில் இந்த புரோத்தோன் குழும விற்பனை நிலையம் அமைந்துள்ளது.

சிரம்பான், ஜூலை 20 –
"Ini Kali Lah" என்ற தேர்தல் முழக்கம் தற்போது தேசிய முன்னணி (பிஎன்) பக்கம் திரும்பியுள்ளதாகவும், மக்களின் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ அசோஜன் தெரிவித்தார்.

சிரம்பான் ஜெயா தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ தினாளன் ராஜகோபாலுக்கு ஆதரவு தெரிவித்து பேசிய அவர், நெகிரி மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை 36 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்த நிலையில், அவற்றில் 25 தொகுதிகளில் தேசிய முன்னணி களமிறங்கியுள்ளதாக கூறினார். இதில் இரண்டு தொகுதிகளில் மஇகா வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்றார்.

நான்கு தவணைகளாக ஜனநாயக செயல் கட்சியின் (ஜசெக) வசம் இருந்து வந்த சிரம்பான் ஜெயா தொகுதியில், இம்முறை மஇகா வேட்பாளர் டத்தோ தினாளன் ராஜகோபால் போட்டியிடுவது மக்களிடையே புதிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தத் தொகுதியில் சுமார் 27 விழுக்காடு இந்திய வாக்காளர்களும், 45 விழுக்காடு சீன வாக்காளர்களும் உள்ளனர். வேட்பாளர் தினாளன் ராஜகோபால் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அம்னோ மற்றும் மசீச கட்சியினரும் இணைந்து களப்பணியை முன்னெடுத்து வருகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

பிரச்சாரத்தின் போது மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கும் மனநிலையிலேயே இருப்பது தெளிவாகத் தெரிகிறது என்றும், குறிப்பாக சீன வாக்காளர்களிடமிருந்தும் மீண்டும் தேசிய முன்னணிக்கு ஆதரவு அதிகரித்து வருவதை உணர முடிகிறது என்றும் டத்தோ அசோஜன் கூறினார்.

சிரம்பான் ஜெயா தொகுதியில் கடுமையான போட்டி நிலவினாலும், மக்களிடமிருந்து கிடைத்து வரும் வரவேற்பு தேசிய முன்னணிக்கு புதிய நம்பிக்கையையும் தைரியத்தையும் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

சிரம்பான், ஜூலை 20 –
சிரம்பான் ஜெயா சட்டமன்றத் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் எண் 3-இல் போட்டியிடும் வேட்பாளர் சு.முகந்தன், வெற்றி பெற்றால் இளைஞர்கள், மகளிர் மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளித்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதாக உறுதியளித்தார்.

"நான் இந்த மண்ணின் மைந்தன். கடந்த 14 ஆண்டுகளாக அரசியலில் மக்களுக்காக சேவை செய்து வருகிறேன். மக்களின் தேவைகளையும் பிரச்சினைகளையும் நன்கு அறிந்துள்ளேன்," என்று அவர் தெரிவித்தார்.

2012ஆம் ஆண்டு முதல் ஜசெகாவில் இணைந்து அரசியல் பணியில் ஈடுபட்டு வருவதாகக் கூறிய அவர், 2012 முதல் 2018 வரை கம்போங் பாசிர் பகுதி மக்களின் பிரச்சினைகளை ரஹாங் சட்டமன்றம் மற்றும் ராசா நாடாளுமன்றம் வரை கொண்டு சென்று பல தீர்வுகளைப் பெற்றுத் தந்ததாக குறிப்பிட்டார்.

மேலும், 2019ஆம் ஆண்டு சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி. குணசேகரனின் சிறப்பு அதிகாரியாகவும், 2022ஆம் ஆண்டு துணை கவுன்சிலராகவும் பணியாற்றிய அனுபவம் தமக்கு இருப்பதாக தெரிவித்தார்.

கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் தொகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளையும், மக்களுக்கு அத்தியாவசிய உதவிப் பொருட்கள் வழங்கும் சேவைகளையும் முன்னெடுத்ததாகவும், வெள்ளப் பாதிப்புகளுக்குப் பிறகு தூய்மைப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டதாகவும் அவர் கூறினார்.

அதேபோல், பாலடைந்த நிலையில் வசித்து வந்த ஐந்து குடும்பங்களின் வீடுகளைச் சீரமைப்பதற்காக மாநில அரசின் நிதி உதவியை பெற்றுத் தந்ததாகவும், தீபாவளி சந்தைகளை ஏற்பாடு செய்து சிறு வியாபாரிகளுக்கு வணிக வாய்ப்புகளை உருவாக்கி வருவதாகவும் தெரிவித்தார்.

தேர்தலில் வெற்றி பெற்றால், இளைஞர்களுக்கு TVET தொழில்திறன் பயிற்சித் திட்டங்களை விரிவுபடுத்தி வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதோடு, சுற்றுச்சூழல் மேம்பாட்டுத் திட்டங்கள், மகளிருக்கு தொழில்திறன் பயிற்சிகள், அரசு உதவித் திட்டங்களைப் பெற்றுத் தருதல் உள்ளிட்ட முயற்சிகளும் முன்னெடுக்கப்படும் என உறுதியளித்தார்.

"மக்களின் பிரச்சினைகளை உடனுக்குடன் கண்டறிந்து தீர்வு காண்பேன். அரசு துறைகளுடன் நேரடியாக இணைந்து பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்கும் பணியை தொடர்ந்து மேற்கொள்வேன்," என்று சு.முகந்தன் தெரிவித்தார்.

நீலாய், ஜூலை 20 –
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் கடந்த எட்டு ஆண்டுகளாக எந்த ஆலயமும் உடைபடவில்லை என்றும், மாநில மேம்பாட்டிற்காக தொடங்கப்பட்டுள்ள அனைத்து திட்டங்களும் முழுமை பெற மக்கள் பக்காத்தான் ஹராப்பானுக்கு மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் நீலாய் சட்டமன்றத் தொகுதியின் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் ஜெ. அருள்குமார் வலியுறுத்தினார்.

மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை மாநில ஆட்சிக்குழு உறுப்பினராகவும் பணியாற்றிய அனுபவம் தனக்கு இருப்பதாகக் கூறிய அவர், இம்முறை நீலாய் தொகுதியில் ஐம்முனைப் போட்டி நிலவுவதாக தெரிவித்தார்.

ஆலயங்கள் தொடர்பாக முழுமையான தகவல்களைப் பெற்ற பிறகே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதுவரை சுமார் 30 ஆலயங்களுக்கு நிலப்பட்டா பெற்றுத் தருவதில் தாம் உதவியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், மாநிலத்தில் ஆலயங்கள் தொடர்பாக எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டுமானால் அது மாநில ஆட்சிக்குழு கூட்டத்தின் ஒப்புதலைப் பெற வேண்டிய நடைமுறை இருப்பதால், ஆலயங்கள் இடிக்கப்படும் சம்பவங்கள் பெருமளவில் தவிர்க்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தாம் உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவின் பொறுப்பில் இருந்தபோது ஆலயங்களுக்கும் தமிழ்ப்பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கும் முன்னுரிமை வழங்கியதாகவும், கடந்த எட்டு ஆண்டுகளில் மேம்பாட்டு நிறுவனங்களால் ஆலயங்கள் இடிக்கப்பட்டதாக எந்தப் புகாரும் பதிவாகவில்லை என்றும் அவர் கூறினார்.

வீடமைப்புத் திட்டங்கள் குறித்து பேசிய அவர், நெகிரி மாநில வீடமைப்புத் திட்டங்களில் 50 விழுக்காடு வீடுகள் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட மக்களின் வாங்கும் திறனுக்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட வேண்டும் என்ற கொள்கை பின்பற்றப்படுவதாக தெரிவித்தார்.

குறைந்த வருமானம் பெறுபவர்களும் சொந்த வீடு வாங்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்றும், அரசின் வழியாக விண்ணப்பித்து இந்த வாய்ப்பைப் பெறலாம் என்றும் கூறினார்.

அதேவேளை, RRM@N9 கடன் வழங்கும் திட்டத்தின் மூலம் பலர் சொந்த வீடுகளை வாங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பிபிஆர் (PPR) வீடமைப்புத் திட்டத்தின் கீழ் அடுத்த ஆண்டில் நீலாயில் 400 அடுக்குமாடி வீடுகள் கட்டப்படவுள்ளதாகவும், பாஜாமிலிருந்து நீலாய் செல்லும் சாலை ஏற்கனவே விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அடுத்தாண்டு மாநில வரவு செலவுத் திட்டத்தில் அந்தச் சாலை விரிவாக்கப் பணிகளுக்கான கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்றும் கூறினார்.

மேலும், நீலாயில் புதிய பொதுச் சந்தை அமைப்பதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மீண்டும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், தற்போது தொடங்கப்பட்டுள்ள அனைத்து மேம்பாட்டுத் திட்டங்களையும் முழுமையாக நிறைவேற்ற பாடுபடுவேன் என்று அவர் உறுதியளித்தார்.

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் அனைவரும் சமமானவர்கள்; பெரியவர், சிறியவர் என்ற பாகுபாடு இல்லாமல் ஒற்றுமையுடன் செயல்படுவதாக அவர் கூறினார்.

தேசிய முன்னணியும் பாஸ் கட்சியும் குறிப்பிட்ட ஒரு இனத்தின் வாக்குகளைப் பெறும் நோக்கில் இணைந்து செயல்படுவதாக குற்றம்சாட்டிய அவர், மாநிலத்தின் தொடர்ச்சியான வளர்ச்சிக்காக இந்தியர்கள் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.