loader

உள்ளூர் செய்திகள்

சமீபத்திய செய்திகள்

செண்டாயான், ஜூலை 27 –
இந்திய சமூகத்தின் ஆதரவு மீண்டும் தேசிய முன்னணி பக்கம் வலுவாக திரும்பி வருவதாகவும், கடந்த காலத்தில் சில தரப்பினர் அளித்த பொய்யான வாக்குறுதிகளை நம்பி ஏற்பட்ட அரசியல் மாற்றத்தை இந்திய மக்கள் தற்போது தெளிவாக உணர்ந்துள்ளதாகவும் ரந்தாவ் சட்டமன்றத் தொகுதி தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் தெரிவித்தார்.

ரந்தாவ் தொகுதியில் நடைபெற்ற மக்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், ஜொகூர் மாநிலத் தேர்தல் முடிவுகள் இந்திய மக்களின் அரசியல் மனநிலையில் ஏற்பட்ட மாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.

"இந்திய மக்கள் பாரம்பரியமாக தேசிய முன்னணிக்கு ஆதரவளித்து வந்தவர்கள். சில அரசியல் கட்சிகள் அளித்த பொய்யான வாக்குறுதிகளையும், தேசிய முன்னணி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளையும் நம்பி ஒரு கட்டத்தில் அவர்கள் வேறு விதமாக வாக்களித்தது உண்மை. ஆனால் அந்த முடிவு அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை என்பதை இன்று அவர்கள் தெளிவாக உணர்ந்துள்ளனர். அதனால் மீண்டும் தேசிய முன்னணிக்கு ஆதரவு பெருகி வருகிறது," என்று அவர் கூறினார்.

ரந்தாவ் தொகுதியில் இந்திய சமூகத்துடன் தனக்கு நீண்டகால நெருக்கமான உறவு இருப்பதாகக் கூறிய முகமட் ஹசான், "இந்த தொகுதியில் உள்ள இந்திய மக்கள் என்னை ஒரு அரசியல்வாதியாக மட்டுமல்ல, தங்கள் குடும்ப உறுப்பினராகவே பார்க்கிறார்கள். அவர்களின் குடும்பத்தில் நானும் ஒருவன் என்ற அளவுக்கு எங்களுக்குள் நெருக்கமான உறவு உள்ளது. அது தேர்தல் காலத்திற்காக உருவாக்கப்பட்ட உறவு அல்ல; பல ஆண்டுகளாக வளர்ந்த நம்பிக்கையின் வெளிப்பாடு," என்றார்.

தான் ரந்தாவ் தொகுதியில் பிறந்து வளர்ந்தவர் என்பதால், அப்பகுதி மக்களின் வாழ்க்கை, தேவைகள் மற்றும் சவால்களை நன்கு அறிந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

"நான் இங்கே பிறந்தவன். இங்குள்ள மக்களோடு வளர்ந்தவன். எனவே, இந்த மண்ணின் தேவைகளும், மக்களின் எதிர்பார்ப்புகளும் எனக்கு நன்றாக தெரியும். அதனால்தான் மக்கள் எந்த நேரத்திலும் என்னை நேரடியாக அணுகி தங்களது பிரச்சினைகளை பகிர்ந்து கொள்கிறார்கள்," என்று அவர் தெரிவித்தார்.

தொகுதியில் நீண்டகாலமாக நிலவி வந்த பல நில உரிமைப் பிரச்சினைகளுக்கு தேசிய முன்னணி ஆட்சிக் காலத்தில் தீர்வு காணப்பட்டதாகவும் அவர் நினைவூட்டினார்.

அதேபோல், நாட்டின் மிக நவீன வசதிகளைக் கொண்ட தமிழ்ப்பள்ளிகளில் ஒன்றாக திகழும் செண்டாயான் தமிழ்ப்பள்ளி தேசிய முன்னணி ஆட்சிக் காலத்திலேயே கட்டப்பட்டதாக அவர் கூறினார்.

"இந்த தொகுதியில் வாழும் இந்திய மக்களின் குழந்தைகள் தரமான கல்வியைப் பெற வேண்டும் என்பதே எங்களின் நோக்கமாக இருந்தது. அதற்காக அனைத்து வசதிகளும் கொண்ட புதிய தமிழ்ப்பள்ளி கட்டும் முயற்சியை முன்னெடுத்தோம். இன்று அந்தப் பள்ளி நாட்டிலேயே முன்னுதாரணமாக திகழ்கிறது," என்றார்.

மேலும், பண்டார் செண்டாயான் பகுதி கடந்த சில ஆண்டுகளில் வேகமான வளர்ச்சியை கண்டுள்ளதாகவும், பல புதிய குடியிருப்புத் திட்டங்கள், வர்த்தக வளாகங்கள் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடுகள் அங்கு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

"பண்டார் செண்டாயான் தற்போது மிகவும் வேகமாக வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது. தலைநகர் கோலாலம்பூரில் வசிக்கும் பலரும் இங்கு வீடுகளை வாங்கி குடியேறி வருகின்றனர். இது இப்பகுதியின் வளர்ச்சிக்கும் எதிர்கால பொருளாதார வாய்ப்புகளுக்கும் சான்றாகும்," என்று அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், தேசிய முன்னணி தலைவர் அறிவித்தபடி மஇகா சார்பில் போட்டியிடும் இரு வேட்பாளர்களும் வெற்றி பெற்றால் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பதவிகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், தற்போதைய முக்கிய இலக்கு தேர்தல் வெற்றிதான் எனக் குறிப்பிட்டார்.

"இப்போது எங்களின் முழு கவனமும் தேர்தலில் வெற்றி பெறுவதில்தான் உள்ளது. முதலில் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் தேசிய முன்னணி ஆட்சியை அமைக்க வேண்டும். அதன் பின்னர் அனைத்து இன மக்களுக்கும் சமமான பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் மாநில நிர்வாகத்தில் தகுதியானவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும். இந்திய சமூகத்தின் பங்களிப்பும் உரிய முறையில் மதிக்கப்படும்," என்று டத்தோஸ்ரீ முகமட் ஹசான் தெரிவித்தார்.

சிரம்பான், ஜூலை 27-
சிரம்பான் ஜெயா சட்டமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி வெற்றிபெற்று ஆட்சியை அமைக்கும் சூழல் உருவாகி வருவதாக மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன் தெரிவித்தார்.

சிரம்பான் ஜெயா தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ ஆர். தினாளனுக்கு ஆதரவாக மலேசிய மக்கள் சக்தி கட்சி ஏற்பாடு செய்திருந்த மக்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், இத்தேர்தல் மக்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கியமானதாகும் என்றார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பக்காத்தான் ஹராப்பான் அரசு, குறிப்பாக சிரம்பான் ஜெயா மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் குறிப்பிடத்தக்க சாதனைகளை செய்யவில்லை என அவர் குற்றம்சாட்டினார்.

"மக்கள் தற்போது மாற்றத்தை விரும்புகின்றனர். அந்த மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய திறனும் அனுபவமும் தேசிய முன்னணியிடம் உள்ளது. எனவே இந்தத் தேர்தலில் தேசிய முன்னணிக்கு மக்கள் வலுவான ஆதரவை வழங்க வேண்டும்," என்று அவர் கேட்டுக்கொண்டார்.

சிரம்பான் ஜெயாவில் நீண்டகாலமாக நிலவி வரும் அடிப்படை வசதி குறைபாடுகளையும் அவர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, இவ்வளவு பெரிய மக்கள் தொகையைக் கொண்ட சிரம்பான் ஜெயா பகுதியில் இதுவரை ஒரு போலீஸ் நிலையம் கூட இல்லாதது வருத்தமளிப்பதாகவும், இந்த பிரச்சினையை தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ ஆர். தினாளன் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்வைத்திருப்பது மக்களின் உண்மையான தேவைகளை பிரதிபலிப்பதாகவும் கூறினார்.

மேலும், பொதுமக்களின் பிரச்சினைகளை விரைவாக அறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும் நோக்கில் டத்தோ ஆர். தினாளன் உருவாக்கியுள்ள செயலியை அவர் பாராட்டினார்.

அந்த செயலி மூலம் மக்கள் தங்களது குறைகள், தேவைகள் மற்றும் உதவிக்கான கோரிக்கைகளை நேரடியாக பதிவு செய்ய முடியும் என்றும், அதனடிப்படையில் தினாளன் சம்பந்தப்பட்ட மக்களை நேரில் சந்தித்து பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் செயல்படுவது பாராட்டத்தக்க மக்கள் சேவையாகும் என்றும் தனேந்திரன் குறிப்பிட்டார்.

இறுதியாக, அண்மையில் ஜொகூர் மாநிலத்தில் தேசிய முன்னணிக்கு கிடைத்த மகத்தான மக்கள் ஆதரவைப் போலவே, நெகிரி செம்பிலான் மாநிலத்திலும் "நீல அலை" எழுச்சி உருவாக வேண்டும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மக்கள் நல்லாட்சி, வளர்ச்சி மற்றும் பயனுள்ள சேவையை கருத்தில் கொண்டு தேசிய முன்னணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும், அதன் மூலம் சிரம்பான் ஜெயாவில் புதிய மாற்றத்தை உருவாக்க முடியும் என்றும் டத்தோஸ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன் வலியுறுத்தினார்.

சிரம்பான்:
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது தேசியக் கூட்டணி தேர்தல் அமைப்பின் தலைவர் முகமட் சனுசி முகமட் நோர் வெளியிட்ட இனவாத கருத்து தொடர்பில் போலிஸ் படையும் சட்டத்துறை தலைவர் அலுவலகமும் உடனடியாக முழுமையான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிலாங்கூர் மாநில கெஅடிலான் தேர்தல் அமைப்பின் தலைவர் டாக்டர் சத்யபிரகாஷ் நடராஜன் இதனை வலியுறுத்தினார்.

சனுசி தனது தேர்தல் பிரச்சார உரையின்போது, இந்தியர்களுக்கு இந்தியாவும், சீனர்களுக்கு சீனாவும் இருக்கிறது; மலாய்க்காரர்களுக்கு தானா மெலாயு மட்டுமே உள்ளது என்ற வகையிலான கருத்தை வெளியிட்டார்.

இந்தச் சூழலில் சனுசியின் கருத்து நாட்டின் பல்லின ஒற்றுமை உணர்வுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன், குறிப்பாக முஸ்லிம் அல்லாத சமூகங்களிடையே கடும் அதிருப்தியையும் கவலையையும் உருவாக்கியுள்ளதாக டாக்டர் சத்யபிரகாஷ் தெரிவித்தார்.

இது தொடர்பாக தாம் போலிசில் அதிகாரப்பூர்வ புகார் அளித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், 3ஆர் (இனம், மதம், அரச குடும்பம்) தொடர்பான உணர்வுபூர்வ விவகாரங்களில் சட்டம் அனைவருக்கும் சமமாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றார்.

நாட்டின் அமைதியும் சமூக நல்லிணக்கமும் பாதுகாக்கப்பட வேண்டுமெனில், இத்தகைய இனவாத கருத்துகளுக்கு எதிராக எந்தத் தயக்கமும் இன்றி சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அரச மலேசிய போலிஸ், சட்டத்துறை தலைவர் மீது முழு நம்பிக்கை வைத்தே இந்தப் புகாரை அளித்துள்ளேன் என்று அவர் கூறினார்.

மேலும், தேர்தல் காலங்களில் அரசியல் ஆதாயத்திற்காக இன உணர்வுகளைத் தூண்டும் வகையிலான பேச்சுகள் சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் அபாயம் இருப்பதாகவும், அனைத்து அரசியல் தலைவர்களும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நாடு பல இன, பல மத மக்களின் ஒற்றுமையால் கட்டியெழுப்பப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட டாக்டர் சத்யபிரகாஷ், தேர்தல் பிரச்சாரங்களிலும் அந்த ஒற்றுமையைப் பாதுகாக்கும் வகையிலான கருத்துகளே முன்வைக்கப்பட வேண்டும் என இன்று சிரம்பான் போலீஸ் தலைமையகத்திற்கு நேரில் சென்று விளக்கமளித்த பின்னர் பேசிய டாக்டர் சத்யபிரகாஷ் கூறினார்.

நெகிரி செம்பிலான், ஜூலை 25 –
நெகிரி செம்பிலானில் தேசிய முன்னணி ஆட்சியை அமைத்தால், வெற்றி பெறும் இரு இந்திய சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மாநில ஆட்சிக்குழு (எக்ஸ்கோ) உறுப்பினர் பதவி வழங்கப்படும் என தேசிய முன்னணித் தலைவரும் துணைப் பிரதமருமான டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி உறுதியளித்தார்.

நெகிரி செம்பிலானில் நடைபெற்ற நெகிரி செம்பிலான் இந்திய சமூக ஒற்றுமை சந்திப்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், இந்திய சமூகத்தின் பங்களிப்பை தேசிய முன்னணி ஒருபோதும் புறக்கணிக்காது என்றும், மாநிலத்தின் வளர்ச்சியில் இந்தியர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

நெகிரி செம்பிலானில் இந்தியர்கள் மொத்த வாக்காளர்களில் 15.4 விழுக்காட்டினராக உள்ளனர். இந்த வாக்கு வலிமையை இந்திய சமூகம் நல்ல நிர்வாகத்தை உருவாக்க பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தேசிய முன்னணி மீண்டும் ஆட்சியைப் பிடித்தால், மாநிலத்தில் 50,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும், அந்த வேலைகளில் பணிபுரிபவர்களுக்கு தற்போதைய நிலையை விட கூடுதல் சம்பளம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜாஹிட் அறிவித்தார்.

மேலும், இந்திய மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக சீனாவில் Tvet தொழிற்கல்வி பயில 20,000 கல்வி வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதில் 20 விழுக்காடு அதாகவது 1,200 இடங்கள் இந்திய மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இது இந்திய இளைஞர்களுக்கு உலகத் தரமான கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியாகும் என்றார்.

இதற்கு முன்னர் இந்த வாய்ப்பு 500 இந்திய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட நிலையில் கூடுதல் மாணவர்களின் தேவைகளை கருதி கூடுதலாக 1,000 இந்திய மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தேசிய முன்னணி கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்து பங்காளிக் கட்சிகளும் சமமான மரியாதையுடன் நடத்தப்படுவதாக குறிப்பிட்ட ஜாஹிட், தனது தலைமையில் எந்தக் கட்சியும் புறக்கணிக்கப்படாது என உறுதியளித்தார்.

"கடந்த காலங்களில் நமக்குள் கருத்து வேறுபாடுகளும் பிரச்சினைகளும் இருந்திருக்கலாம். ஆனால் அவற்றை எல்லாம் மறந்து, ஒற்றுமையுடன் செயல்பட்டால்தான் இந்திய சமூகத்தின் எதிர்காலத்தை வலுப்படுத்த முடியும்," என்று அவர் வலியுறுத்தினார்.

இந்திய சமூகத்தின் ஆதரவைப் பெறும் நோக்கில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், தேசிய முன்னணி வேட்பாளர்களுக்கு முழு ஆதரவு வழங்குமாறும், நெகிரி செம்பிலானின் வளர்ச்சிக்கும் இந்திய சமூக முன்னேற்றத்திற்கும் தேசிய முன்னணிக்கு வெற்றியை உறுதி செய்யுமாறும் ஜாஹிட் அமிடி அழைப்பு விடுத்தார்.

ஜெம்போல், ஜூலை 25 –

அரசியல் கட்சி வேறுபாடுகளைத் தாண்டி, கொள்கை உறுதி, மிதவாத அணுகுமுறை மற்றும் தேசிய ஒற்றுமையைப் பாதுகாக்கும் துணிச்சலை அனைத்து அரசியல் தலைவர்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்று சிலாங்கூர் பிகேஆர் தேர்தல் பிரிவு இயக்குநர் டாக்டர் சத்தியா பிரகாஷ் நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.

அனைத்து மலேசியர்களின் உரிமைகளை உறுதி காக்கும் நிலைப்பாட்டை எடுத்துள்ள மஇகா தலைவர் டான் ஸ்ரீ  விக்னேஸ்வரனின் கருத்தை அவர் வரவேற்றார்.

பாஸ் கட்சித் தலைவர்களின் பொறுப்பற்ற பேச்சை விக்னேஸ்வரன் கண்டித்திருப்பது, இனவாத அரசியலை நிராகரித்து, நாட்டில் நல்லிணக்கத்தை விரும்பும் பெரும்பான்மை மலேசியர்களின் உணர்வை பிரதிபலிப்பதாக அவர் கூறினார்.

மேலும், பெரிக்காத்தான் நேஷனல் (பிஎன்) தேர்தல் இயக்குநர் டத்தோ ஸ்ரீ முகமது சனுசி முகமட் நோர், மலேசிய சீன மற்றும் இந்திய சமூகங்களின் நாட்டுப்பற்றை கேள்விக்குள்ளாக்கும் வகையில் கருத்து தெரிவித்திருப்பது மிகவும் பொறுப்பற்ற செயலாகும் என்றும், அது தேசிய ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தியரும் சீனரும் இந்நாட்டில் "வந்தேறிகள்" அல்ல என்றும், மலேசியாவில் பிறந்து, நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களித்து, மாமன்னருக்கும் நாட்டிற்கும் முழுமையான விசுவாசத்துடன் வாழும் உண்மையான மலேசியர்கள் என்றும் டாக்டர் சத்தியா பிரகாஷ் வலியுறுத்தினார்.

அரசியல் கட்சி வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்டு ஒருவரின் கொள்கை நிலைப்பாட்டை மதிப்பிடக் கூடாது என்றும், தற்போதைய அரசியல் சூழலில் எளிதல்லாத நிலையிலும் தாம் நம்பும் கொள்கையை வெளிப்படையாக முன்வைத்த விக்னேஸ்வரனின் துணிச்சலை பாராட்டுவதாகவும் அவர் கூறினார்.

"அவர் மஇகாவைச் சேர்ந்தவர்; நான் பிகேஆரைச் சேர்ந்தவன். ஆனால் சரியான விஷயத்தை யார் சொன்னாலும் அதை பாராட்ட வேண்டும். கொள்கையைப் பாதுகாக்கும் துணிச்சல், மிதவாதம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய மலேசிய உணர்வை மதிக்க வேண்டும்," என்றார்.

மலேசியா பல இன மக்களின் ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நாடு என்றும், மலேசிய குடியுரிமை கொண்ட ஒவ்வொருவரும் இந்த நாட்டின் அங்கம்தான் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் நலன் மற்றும் மக்களின் ஒற்றுமை தொடர்பான விடயங்களில், எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், தங்களது கொள்கை நிலைப்பாட்டை தைரியமாக வெளிப்படுத்தும் தலைவர்கள் அதிகரிக்க வேண்டும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

"இந்தக் கருத்து யாரையும் புகழ்வதற்கோ அல்லது எந்தக் கட்சிக்கும் ஆதரவாகப் பேசுவதற்கோ அல்ல. மலேசிய மக்கள் முதிர்ச்சியான அரசியலையே விரும்புகிறார்கள் என்ற நம்பிக்கையால்தான் இதை கூறுகிறேன்," என்று டாக்டர் சத்தியா பிரகாஷ் நடராஜன் தெரிவித்தார்.