loader

உள்ளூர் செய்திகள்

சமீபத்திய செய்திகள்


கோலாலம்பூர், மார்ச் 10-
 எஸ்பிஎம், எஸ்டிபிஎம், டிப்ளோமா அல்லது மெட்டிரிகுலேஷன் முடித்த மாணவர்களுக்கு மேற்படிப்பு தொடர்பான வழிகாட்டலை வழங்கும் நோக்கில் பினாங்கு மஇகா இளைஞர் பிரிவு “Jejak Menara Gading – மேற்படிப்பு பயணம்” என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.

பல மாணவர்கள் UPU விண்ணப்ப முறையைப் பற்றிய சரியான தகவல் இல்லாமல் உயர்கல்வி வாய்ப்புகளை இழக்க நேரிடுவதால், அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.

நிகழ்ச்சியில் UPU-க்கு எவ்வாறு விண்ணப்பிப்பது, எதிர்காலத்திற்கு ஏற்ற படிப்புகளை தேர்வு செய்வது எப்படி, பல்கலைக்கழகங்களை சரியாக தேர்வு செய்வது போன்ற முக்கிய அம்சங்கள் குறித்து விளக்கங்கள் வழங்கப்படவுள்ளன.

மேலும், உயர்கல்வி அமைச்சை சேர்ந்த அதிகாரியும் கல்வித்துறையில் பல ஆண்டுகள் அனுபவம் கொண்டவருமான பத்மராஜா செல்வராஜா மாணவர்களுக்கு நேரடியாக வழிகாட்ட உள்ளார்.

இந்த நிகழ்ச்சி இம்மாதம் மார்ச் 14ஆம் தேதி மாலை 3 மணி முதல் 6 மணி வரை செபராங் ஜெயாவில் அமைந்துள்ள அருள்மிகு கருமாரியம்மன் ஆலய வளாகத்தில் நடைபெறும்.

UPU தொடர்பான அனைத்து ஆவணங்களையும் மாணவர்கள் உடன் கொண்டு வருமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மாணவர்களின் உயர்கல்வி பயணத்தை சரியான பாதையில் தொடங்க உதவும் இந்த நிகழ்ச்சியில் மாணவர்களும் பெற்றோர்களும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேல் விவரஙகளுக்கு 014-6318183 (நித்தியராஜன்), 016-4900605 (மஹாதேவன்), 019-9901424 (ரூபன்ராஜ்) ஆகியோரை தொடர்புக் கொள்ளலாம்.


கோலாலம்பூர், மார்ச் 10-

அண்மையில் சமூக ஊடகங்கள் மற்றும் பொது இடங்களில் இன, மத உணர்வுகளைத் தூண்டும் நடவடிக்கைகள்  அதிகரித்து வருவது கவலை அளிக்கின்றது. அவை நாட்டின் ஒற்றுமைக்கும் சமூக அமைதிக்கும் பாதகம் விளைவிக்க கூடும் என்று தேசிய ஒருமைப்பாட்டு துணையமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் தெரிவித்துள்ளார்.

இத்தகைய தூண்டுதல் கருத்துகள் அல்லது உள்ளடக்கங்கள் மூலம் பொதுப் பாதுகாப்பை அச்சுறுத்தும் நபர்களுக்கு எதிராக அரச மலேசிய போலீஸ் துறை (PDRM) கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தீங்கிழைக்கும் நோக்கத்துடன் மக்களைப் பிரிக்க முயலும் எந்தவித தூண்டுதல்களையும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது. அதோடு நாட்டின் ஒற்றுமையை அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்துவது ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், சமூக ஒற்றுமையைப் பாதிக்கும் செயலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சட்ட்த்துறைத் தலைவர் முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். 

1948-ஆம் ஆண்டு தூண்டுதல் சட்டம், குற்றச் சட்டம் பிரிவு 298A, 1998 ஆம் ஆண்டின் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம் பிரிவு 233, 2012 ஆம் ஆண்டின் பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் (SOSMA) மற்றும் 1959 ஆம் ஆண்டின் குற்றத் தடுப்பு சட்டம் (POCA) உள்ளிட்ட நடைமுறையில் உள்ள சட்டங்களை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

சமூக ஊடகங்களில் வெளியாகும் உள்ளடக்கங்களைக் கண்காணிக்கும் பணியில் மலேசிய பல்லூடக ஆணையம் (SKMM) மேலும் தீவிரமாகவும் முனைப்புடனும் செயல்பட வேண்டும் என்றும், வெறுப்பைத் தூண்டும் உள்ளடக்கங்களுக்கு எதிராக நடவடிக்கைகளைத் தாமதமாக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.

இன அல்லது மத உணர்வுகளைத் தூண்டி நாட்டின் அமைதியைப் பாதிக்க முயலும் தரப்பினர்கள்,  அந்த நடவடிக்கைகள் தேசிய பாதுகாப்புக்கும் சமூக ஒற்றுமைக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்பதை உணர வேண்டும் என்றும் அவர் எச்சரித்தார்.

இதற்கிடையில், இன மற்றும் மத உணர்வுகள் தொடர்பான சிக்கல்களை முறையாகக் கையாள்வதற்காக தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு பல்வேறு அரசுத் துறைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருவதாக இன்று மேலவையில் உரையாற்றிய போது அவர் தெரிவித்தார்.

அத்துடன், சமூகத்தில் எழும் உணர்வுப்பூர்வமான சிக்கல்களை முறையாக கண்காணிக்க சமூக உணர்வுப்பூர்வ சிக்கல்கள் ஆய்வு மையம் (PRISMA) என்ற தேசிய அளவிலான செயல்பாட்டு மையம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

இந்த மையம் இ-செபாக்காட், ராக்கான் , தேசிய போலீஸ் படை மற்றும் தேசிய தொடர்பு பல்லூட ஆணையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தரவுகளை ஒருங்கிணைத்து, சமூகத்தில் உருவாகும் உணர்வுப்பூர்வமான பிரச்சனைகளை முன்கூட்டியே கண்டறிந்து அரசாங்கம் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க உதவும் என அவர் கூறினார்.

நாட்டின் ஒற்றுமை என்பது அனைவரின் பொறுப்பு. கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் வெறுப்பையும் பிளவையும் பரப்புவதற்கு இடமில்லை, என யுனேஸ்வரன் ராமராஜ் வலியுறுத்தினார்.


கோலாலம்பூர், மார்ச் 10-
பார்வையற்றோராகிய தங்களுக்கு தொலைநோக்குப் பார்வை இருக்கும்போது, ஒளிபடைத்த இரு விழிகள் கொண்டவர்களுக்கு அது இல்லாமல் போனது வருத்தமாக இருக்கிறது என்று மலேசிய பார்வையற்றோர் சங்கத்தின் முன்னாள் மாணவரும் இந்நாள் ஆதரவாளருமான மகேந்திரன் வருத்தம் தெரிவித்தார்.

நேற்று 'விஸ்மா எம்ஏபி'-இல், பல இன மக்களுடன் ஒற்றுமையை நோன்பு துறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தபின், செய்தியாளர்களிடம் பேசிய பொழுது நாங்கள் ஒற்றுமையாக இருக்கும்போது ஏன் உங்களால் முடியாது என்று தற்பொழுது சமய சமூக சலசலப்பில் சிக்கித் தவிப்போரை நோக்கி 'தர்மம் தலைகாக்கும்' சமூக நல இயக்கத்தின் 
தலைவருமான மகேந்திரன் கேள்வியை எழுப்பினார்.

இப்போது நாட்டில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் பல சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

இது எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது; நாம் அனைவரும் மலேசியர்கள்.  இத்துணைக் காலமும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தோம். ஆனால் இன்று நமக்குள் ஏகப்பட்ட பிரச்சனைகள்.

இதைக் கேட்கும் போது மனது வலிக்கிறது. கண் பார்வை இழந்த நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம்.

எங்களிடையே எந்த ஒரு பிரிவினை வாதமும் இல்லை. ஒருவருக்கு ஒருவர் அன்பாக இருக்கிறோம். அவரவர் மதத்தை மதிக்கிறோம். 

ஆனால் இன்று நாட்டில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் நடக்கும் சம்பவங்களைப் பார்த்தால் பெரும் வேதனையாக இருக்கிறது. 

தர்மம் தலைகாக்கும் சமூக நல இயக்கத்தின் ஏற்பாட்டில் நேற்று கண் பார்வையற்றோர் சங்கத்தின் மண்டபத்தில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி  எளிமையாகவும் அதேவேளை பொருள் பொதிந்ததாகவும் நடைபெற்றது.

மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 100க்கும் மேற்பட்ட பார்வையற்றோர் கலந்து கொண்டனர். 

மலாயர், சீனர்,  தமிழர் என பல இனங்களைச் சேர்ந்த  பார்வையற்றோர் ஒற்றுமையாக இந்த நிகழ்வில் கலந்து கொண்டு தங்களின் அன்பை பரிமாறிக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் கலைத்துறையைச் சேர்ந்த தண்டபாணியும் கலந்து கொண்டு இந்த ஒற்றுமையை நோன்பு துறப்பு நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பு சேர்த்தார்.


கோலாலம்பூர், மார்ச் 6– 
பல மதங்கள் மற்றும் பல இனங்கள் கொண்ட மலேசிய சமூகத்தில் அமைதி மற்றும் ஒற்றுமையை பாதுகாப்பதில் மடானி அரசாங்கம் தோல்வியடைந்து வருகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளார் மக்கள் முற்போக்கு கட்சி (பிபிபி) தலைவர் டத்தோ டாக்டர் லோகா பால மோகன்.

சமீபத்தில் சில பொறுப்பற்ற கும்பல் ஒரு இந்து கோவிலை இடிக்க பொதுவெளியில் மிரட்டல் விடுத்திருப்பது தேசிய அமைதிக்கும் ஒற்றுமைக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக அவர் கூறினார்.

இது ஒரு சாதாரண விஷயம் அல்ல. இது நமது அரசியலமைப்பு ஜனநாயகத்தின் அடித்தளத்தையே சவாலுக்கு உள்ளாக்கும் செயல். இத்தகைய கும்பல்களை கட்டுப்படுத்த அரசாங்கத்துக்கு முடியவில்லையா? அல்லது இது நடைபெறுவதற்கு அவர்களால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இந்தக் கும்பல் சமூக ஊடகங்கள் மற்றும் பொதுத் தளங்களில் மக்கள் ஒன்று கூடிக் கோவிலை இடிக்க தூண்டி வருவது, தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டத்தின் பிரிவு 233-ஐ வெளிப்படையாக மீறுவதாகவும், இதுவரை எந்தத் தெளிவான நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

அரசாங்கத்தின் இந்த மௌனமும் செயலற்ற தன்மையும், அதிகாரம் வாய்ந்த யாரோ இந்த குற்றவாளிகளை பாதுகாக்கிறார்கள் என்ற எண்ணத்தை உருவாக்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

சில நபர்கள் சட்டத்திற்கு மேலானவர்கள் போல காட்சியளிப்பது கவலைக்குரியதாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும், பல இந்து கோவில்கள் காலனித்துவ காலத்தில் பிரிட்டிஷ் மற்றும் பின்னர் ஜப்பான் நிர்வாகங்களின் அனுமதியுடன், மெர்டேகாவுக்கு முன்பே கட்டப்பட்டவை என்பதை அரசு நன்கு அறிந்திருக்கிறது என்றார்.

அந்த காலகட்டத்தில் நில ஆவணப்படுத்தும் முறைகள் இன்றையதைப்போல் இல்லாததால், நூற்றாண்டுக்கும் மேலாக வழிபாடு நடைபெற்று வரும் இடங்களை இப்போது ஆவணங்கள் இல்லை என்ற காரணத்தால் சட்டவிரோதம் எனக் கூறுவது வரலாற்று உண்மைகளை புறக்கணிப்பதாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்து கோவில்கள் மற்றும் நில உரிமைகள் தொடர்பான நீண்டகால பிரச்சினைகளை தீர்ப்பது தேர்தல் வாக்குறுதிகளின் ஒரு பகுதியாக இருந்தபோதிலும், மூன்று ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாதது ஏமாற்றமளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஒரு வழிபாட்டு இடத்தை இடிக்க மிரட்டுவது தண்டனைச் சட்டம் பிரிவு 295, 295A மற்றும் 506 ஆகியவற்றை தெளிவாக மீறும் குற்றச்செயலாகும் என்று அவர் தெரிவித்தார்.

ஆனால் சில நபர்களுக்கு சட்டம் பொருந்தாதது போல தோன்றுவது இரட்டை தரநிலை அல்லது தெரிவு செய்யப்பட்ட சட்ட அமலாக்கம் என்ற சந்தேகத்தை எழுப்புவதாகவும் அவர் கூறினார்.

சட்டத்தை உறுதியாக அமல்படுத்த வேண்டிய நிலையில், சில தலைவர்கள் சட்டம் மீறுபவர்களை ஊடகங்களின் மூலம் கூட்டத்தை ரத்து செய்யுமாறு வேண்டிக் கொள்வது வெட்கக்கேடானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

“தலைமை என்பது சட்டம் மீறுபவர்களை வேண்டிக் கொள்வது அல்ல; பயமோ பேதமோ இல்லாமல் சட்டத்தை அமல்படுத்துவதே உண்மையான தலைமை,” என்றார்.

அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசியல் கண்ணாமூச்சி ஆட்டம் போதும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

2007 ஆம் ஆண்டு போல மீண்டும் தெருக்களில் இறங்கி நீதியை கோர இந்திய சமூகம் விரும்பவில்லை என்றாலும், பொறுமையை பலவீனமாக கருதக் கூடாது என்றும் அவர் எச்சரித்தார்.

நாட்டின் அமைதி, ஒற்றுமை மற்றும் தேசிய பாதுகாப்பை அச்சுறுத்தும் சம்ரி வினோத், ஃபிர்தௌஸ் வோங், தமீம், சந்திரா உள்ளிட்ட அனைவர் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் PPP வலியுறுத்துவதாக டத்தோ டாக்டர் லோகா பாலா மோகன் தெரிவித்தார்.

இந்து சமூகத்தினர் சமத்துவமான சட்ட பாதுகாப்பை கோரி தெருக்களில் இறங்க வேண்டிய நிலை உருவாகும் முன்பே அதிகாரிகள் கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


கோலாலம்பூர்,மார்ச் 6-
கிள்ளான், மெரு காவல் நிலையத்தில் இடம்பெற்றதாக உள்ளூர் ஊடகங்களிலும் சமூக ஊடக தளங்களிலும் பரவி வரும் சண்டை சம்பவத்தை மஇகா பணிப்படை (Briged MIC) மிகவும் கவலைக்கிடமாக எடுத்துக்கொண்டுள்ளதாக அதன் தலைவர் எண்ட்ரு டேவிட் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தில் சிலர் காவல் நிலைய வளாகத்துக்குள் தகராறு ஏற்படுத்தி சண்டையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதன் தொடர்பில் ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தகவலின்படி, மூன்று பேர் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்தபோது, பின்னர் வந்த மற்றொரு குழுவினர் தகராறு ஏற்படுத்தி சண்டை தொடங்கியதாக கூறப்படுகிறது.

அந்தச் சண்டையில் ஒருவர் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டதுடன், காவல் நிலையத்தின் சில சொத்துகளும் சேதமடைந்துள்ளன.

காவல் நிலையம் போன்ற சட்ட அமலாக்க அமைப்புகளின் வளாகத்திலேயே வன்முறையில் ஈடுபடுவது மிகக் கடுமையான குற்றமாகும் என்று அவர் தெரிவித்தார். 

காவல் நிலையம் என்பது நாட்டின் சட்ட ஆட்சியின் மரியாதையையும் அதிகாரத்தையும் பிரதிபலிக்கும் முக்கியமான இடமாகும். அதனை சவாலுக்கு உட்படுத்தும் எந்தச் செயல்பாடும் பொதுச் சமாதானத்திற்கே அச்சுறுத்தலாகும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து நபர்களுக்கும் எந்தவித சமரசமும் இன்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று MIC பிரிகேட் கோருவதாக அவர் சொன்னார்.

இத்தகைய சம்பவங்கள் கட்டுப்படுத்தப்படாமல் விட்டால், சட்டத்தை வெளிப்படையாக சவால் செய்யலாம் என்ற தவறான செய்தியை சமூகத்திற்கு அளிக்கும் அபாயம் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், MIC பிரிகேட் தனது “குற்றத்துக்கு எதிரான தலைமுறை” (Generasi Anti Jenayah) முயற்சியின் மூலம் சட்டத்தை மதிக்கும் பண்பை சமூகத்தில் வலுப்படுத்தவும், இளைஞர்களை வன்முறை கலாச்சாரத்திலிருந்து விலக்கவும் தொடர்ந்து விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.