செனாவாங், மே 24-
தேர்தல் காலத்தில் கூறப்படும் பொய் வாக்குறுதிகளை நம்பி இந்திய சமுதாயம் ஏமாறக்கூடாது என மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.
அண்மையில் பிகேஆர் கட்சியை சேர்ந்த ரஃபிசி ரம்லி அக்கட்சியிலிருந்து வெளியேறி புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.
அன்றைய சூழ்நிலையில் பிகேஆர் கட்சிதான் சிறந்த கட்சி என ப்ற்சிய அவர் கட்சியின் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்விக் கண்டதை தொடர்ந்து, தற்போது அக்கட்சியை விட்டு வெளியேறி புதிய கட்சியை தொடங்கி அதற்கு ஆதரவு தேடி வருகிறார்.
ஆகையால் இந்திய சமுதாயம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
செனாவாங்கில் நடைப்பெற்ற மலேசிய மக்கள் சக்தி கட்சியின் பச்சபா கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் இதனை தெரிவித்தார்.
அரசியலில் நம்பிக்கை மிகவும் முக்கியமானது.
மஇகா மற்றும் மலேசிய மக்கள் சக்தி கட்சி இணைந்து செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
கட்சிகள் வேறுபட்டாலும், இந்திய சமூக நலனுக்காக ஒற்றுமையுடன் செயல்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார்.
கட்சிகளில் கருத்து வேறுபாடுகள் இருப்பது இயல்பானது என்ற அவர், பொதுநலனை முன்னிறுத்தியே மஇகா மக்கள் சக்தி கட்சியுடன் இணைந்து செயல்படுகிறது என விளக்கினார்.
மேலும், இந்திய சமுதாயத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும், “எங்களின் பலத்தை நீங்களும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
இந்திய சமுதாயத்திற்கு பாதுகாப்பாகவும் வலுவான ஆதரவாகவும் மஇகா மற்றும் மக்கள் சக்தி கட்சிகள் இரண்டும் இருக்க வேண்டும் என்றும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தனது உரையில் தெரிவித்தார்.
0 Comments