கோலாலம்பூர்,மார்ச் 6-
கிள்ளான், மெரு காவல் நிலையத்தில் இடம்பெற்றதாக உள்ளூர் ஊடகங்களிலும் சமூக ஊடக தளங்களிலும் பரவி வரும் சண்டை சம்பவத்தை மஇகா பணிப்படை (Briged MIC) மிகவும் கவலைக்கிடமாக எடுத்துக்கொண்டுள்ளதாக அதன் தலைவர் எண்ட்ரு டேவிட் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தில் சிலர் காவல் நிலைய வளாகத்துக்குள் தகராறு ஏற்படுத்தி சண்டையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதன் தொடர்பில் ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தகவலின்படி, மூன்று பேர் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்தபோது, பின்னர் வந்த மற்றொரு குழுவினர் தகராறு ஏற்படுத்தி சண்டை தொடங்கியதாக கூறப்படுகிறது.
அந்தச் சண்டையில் ஒருவர் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டதுடன், காவல் நிலையத்தின் சில சொத்துகளும் சேதமடைந்துள்ளன.
காவல் நிலையம் போன்ற சட்ட அமலாக்க அமைப்புகளின் வளாகத்திலேயே வன்முறையில் ஈடுபடுவது மிகக் கடுமையான குற்றமாகும் என்று அவர் தெரிவித்தார்.
காவல் நிலையம் என்பது நாட்டின் சட்ட ஆட்சியின் மரியாதையையும் அதிகாரத்தையும் பிரதிபலிக்கும் முக்கியமான இடமாகும். அதனை சவாலுக்கு உட்படுத்தும் எந்தச் செயல்பாடும் பொதுச் சமாதானத்திற்கே அச்சுறுத்தலாகும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து நபர்களுக்கும் எந்தவித சமரசமும் இன்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று MIC பிரிகேட் கோருவதாக அவர் சொன்னார்.
இத்தகைய சம்பவங்கள் கட்டுப்படுத்தப்படாமல் விட்டால், சட்டத்தை வெளிப்படையாக சவால் செய்யலாம் என்ற தவறான செய்தியை சமூகத்திற்கு அளிக்கும் அபாயம் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், MIC பிரிகேட் தனது “குற்றத்துக்கு எதிரான தலைமுறை” (Generasi Anti Jenayah) முயற்சியின் மூலம் சட்டத்தை மதிக்கும் பண்பை சமூகத்தில் வலுப்படுத்தவும், இளைஞர்களை வன்முறை கலாச்சாரத்திலிருந்து விலக்கவும் தொடர்ந்து விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
0 Comments