கோலாலம்பூர் ஏப்ரல் -19
சமீபகாலமாக ஜாதி அரசியல் ம.இ.காவில் ஊடுருவி வருவதாகவும் சிலர் ம.இ.கா உயர்மட்ட தலைவர்களிடையே சிண்டு முடித்து விடும் வேலையை செய்வதாக தகவல் வெளிவந்தது.
ம.இ.காவின் கட்சி தேர்தல் நேரத்தில் தங்களது நாரதர் வேலையை தொடங்கி டத்தோ டி. மோகன் துணை தலைவருக்கு போட்டி போட வேண்டும் என ம.இ.காவின் வெளிவட்டார நபர்கள் பேசி கொண்டு வந்தனர்.
இந்த ஆருடங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் ம.இ.காவின் தேசிய உதவி தலைவர் டத்தோ டி.மோகன் இன்று பதில் அடி கொடுத்தார்.
ம.இ.கா-வில் நான் நீண்டகாலமாக சேவை செய்து வருகிறேன். என்னை பொறுத்தவரை கட்சியின் ஒற்றுமைதான் முக்கியம். டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் ,டத்தோ ஸ்ரீ சரவணன் நான், எங்கள் மூவருக்கு இடையில் நீண்டகால நட்பு உள்ளது.
வெளியில் ஆயிரம் பேர் ஆயிரம் பேசுவார்கள், அது அவர்களின் கருத்து. அது என் கருத்தாகாது. என்னை பொறுத்தவரை பதவிக்காக நான் கட்சியையும் உறவையும் இழக்க மாட்டேன் ,கட்சியைப் பிளவு படுத்தவும் மாட்டேன்.
நான் இந்த முறையும் எனது உதவி தலைவர் பதவியைத் தற்காக்க போட்டி போடுவேன். மற்றவர்கள் சொல்வது போல் நான் துணை தலைவர் பதவிக்கு போட்டி போட ஆயத்தமாக இருப்பது எல்லாம் சுத்த பொய் என டத்தோ டி .மோகன் தெரிவித்தார்.
எங்கள் மூவருக்குள் நல்ல புரிந்துணர்வு உண்டு. எப்போது தலைமைக்கு வரவேண்டும் என்று எங்களுக்கு நன்றாக தெரியும் ,சிலர் சொல்வதை கேட்டு அவசரமான முடிவுகளை எடுக்கும் பழக்கம் எங்களுக்கிடையே இல்லை.
ம.இ.கா இப்போதுதான் உட்கட்சி சண்டை இல்லாமல் வலுவாக உள்ளது . பதவிற்காகஎங்கள் மூவர் மத்தியில் பிளவு ஒருபோதும் நிலவாது என டத்தோ டி. மோகன் வெளிப்படையாக தெரிவித்தார்.
செய்தி: வெற்றி விக்டர் / இ.எஸ் .காளிதாசன்
0 Comments