சுபாங் ஜெயா,மார்ச் 30-
கடந்த இரண்டு ஆண்டுகளில் கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றி 50க்கும் மேற்பட்ட ஆயுதமேந்திய கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஐவரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
நேற்று இரவு 11.30 மணியளவில் இங்குள்ள புத்ரா ஹைட்ஸ் பெர்சியாரன் ஹார்மோனி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது பெரோடுவா அக்சியா ரக வாகனத்தில் பயணித்த ஐவரின் செயல் சந்தேகம் எழும் வகையில் இருந்ததால் போலீசார் அந்த வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொள்ள முயற்சித்தனர்.
வாகனத்தை நிறுத்தும்படி போலீசார் பலமுறை எச்சரித்தும் அந்த வாகனம் நிறுத்தாமல் அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சித்துள்ளது.
அப்போது போலீசார் அந்த வாகனத்தைச் சுற்றி வளைத்து நிறுத்தியபோது அந்த சந்தேக நபர்கள் போலீசாரை நோக்கி பலமுறை துப்பாக்கி சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது.
தங்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள போலீசார் அந்த வாகனத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியதில் உள் நாட்டைச் சேர்ந்த 25 முதல் 30 வயதிற்குட்பட்ட ஐவர் கொல்லப்பட்டதாக போலீஸ் தரப்பு தெரிவித்தது.
அந்த ஐவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை போலீசார் உறுதி செய்ததோடு அந்த கும்பல் பயன்படுத்திய இரண்டு துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களையும் போலீசார் கைப்பற்றினர்.
0 Comments