அலோர்ஸ்டார், மார்ச் 25-
கடந்த ஜனவரி மாதம் தனது பேத்தியின் குடியுரிமை விண்ணப்பத்திற்கு உள்துறை அமைச்சு ஒப்புதல் அளித்த பிறகும், பள்ளிப்படிப்புக்கு வெளிநாட்டு மாணவர் கட்டணத்தை செலுத்த வேண்டிய சூழல் இருப்பதாக அவரின் தாத்தா சதநாதன் (வயது 73) வருத்தப்பட்டார்.
தனது பேத்தி மதுமிதா தீவாகரன் (வயது 15), கெடா அலோர்ஸ்டாரில் உள்ள துங்கு சோபியா தேசிய இடைநிலைப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு மாணவியாக பயின்று வருகிறார்.
அவரது தாய் ஓர் இந்தோனேசிய பிரஜை மற்றும் அவரது தந்தை ஒரு மலேசிய குடிமகன்.
இதனால் எனது இரு பேரப்பிள்ளைகளுக்கும் குடியுரிமை கிடைக்கவில்லை மற்றும் இந்தோனேசிய பாஸ்போர்ட் மட்டுமே இருந்தது. இத்தனை காலம் இருவரும் தலா RM240 செலுத்தி மாணவர் அனுமதிச்சீட்டைப் பயன்படுத்தி பள்ளியில் படித்தனர்.
இந்த ஆண்டு ஜனவரி 15ஆம் திகதி அன்று, என் பேத்தியின் குடியுரிமை விண்ணப்பத்தை உள்துறை அமைச்சு அங்கீகரித்துள்ளது. பிறகு நாங்கள் அலோர்ஸ்டார் மாநில பதிவுத் துறைக்கு பிறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கச் சென்றோம்.
நாங்கள் ஏழு முதல் எட்டு மாதங்களுக்குள் பிறப்புச் சான்றிதழைப் பெற காத்திருக்க வேண்டும் என்று அங்குள்ள ஜேபிஎன் அதிகாரி கூறியதாக சதநாதன் கூறினார்.
இருப்பினும், தனது பேரப்பிள்ளைகள் பள்ளிக்குச் செல்ல விரும்பினால் வெளிநாட்டு மாணவர்களுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று பள்ளி தங்களுக்குத் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
குடியுரிமைக்கான விண்ணப்ப ஒப்புதல் கடிதம் மற்றும் பிறப்புச் சான்றிதழ் கட்டணம் செலுத்திய சீட்டை அவர்கள் ஏற்கவில்லை. பள்ளியின் முடிவால் நாங்கள் ஏமாற்றமும் வருத்தமும் அடைந்துள்ளோம் என்று அவர் கூறினார்.
மேலும் அவர் அலோர் ஸ்டாரில் உள்ள ஓர் உணவகத்தில் உதவியாளராகப் பணிபுரிவதாகவும் அங்கு பெறும் சம்பளத்தைக்கொண்டு
தற்போதைய குடும்ப சூழ்நிலையில் பள்ளி கட்டணத்தை ஈடுகட்ட முடியாது எனவும் வருத்தத்துடன் தெரிவித்தார்.
எனது தினசரி சம்பளம் 40 ரிங்கிட் மட்டுமே. எனது இரண்டு பேரக்குழந்தைகளையும் குறைந்த சம்பளத்தில்தான் நான் வளர்க்க வேண்டும். இன்னும் குடியுரிமை பெறாத மதுமிதாவின் தம்பிக்கு இன்னும் வெளிநாட்டு மாணவர் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
ஆகவே இவ்வாறான சூழ்நிலையில் நாங்கள் எங்களது அன்றாட வாழ்க்கையில் நடத்தி வருகிறோம்.நாங்கள் எதிர்நோக்கும் இப்பிரச்சனைக்கு கல்வி அமைச்சு உதவும் என்று நம்புகிறோம்.
இதற்கிடையில் மலேசியா ஒற்றுமை சமூக நல இயக்கத்தின் தலைவர் பி. மணிவாணன் இந்த விஷயத்தை கல்வி அமைச்சிற்கும் மற்றும் உள்துறை அமைச்சிற்கும் கொண்டு சென்று உதவியதாக கூறினார்.
கல்வி அமைச்சு உடனடியாக மாநில கல்வி இலாகாவுக்கு உத்தரவிட வேண்டும், மதுமிதாவை பள்ளிக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.
0 Comments