கோலாலம்பூர், மார்ச் 16-
நாட்டிலுள்ள அனைத்து படைப்பாளர்களும் சக படைப்பாளர்களுக்கு முழு ஆதரவு வழங்க வேண்டும். படைப்பாளர்கள் மத்தியில் ஆதரவு வழங்கிக்கொண்டால் மட்டுமே அந்த படைப்புகள் வாழும் என மஇகாவின் தேசிய துணைத் தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ டாக்டர் எம்.சர்வணன் தெரிவித்தார்.
இன்று தலைநகரில் மஇகா தலைமையகம் நேதாஜி மண்டபத்தில் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற தமிழ் வாழ்த்து காணொளி அறிமுக விழா மற்றும் சிறுகதை நூல் வெளியீட்டு விழாவை தலைமையேற்று பேசிய அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தொடர்ந்து நாட்டில் பல உள்ளூர் படைப்புகள் வெளியாகி வருகிறது. அது எழுத்துபூர்வமாகவும் திரைப்படமாகவும் இருக்கலாம். எதுவாக இருந்தாலும் அந்த முயற்ச்சிக்கு சக கலைஞர்கள் முதலில் ஆதரவை வழங்க முன் வர வேண்டும். குறிப்பாக ஒரு எழுத்தாளன் தனது கடின முயற்ச்சியில் ஒரு புத்தகத்தை வெளியிடும்போது அதற்கு அனைத்து எழுத்தாளர்களும் ஆதரவு வழங்கி அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
இதை நாம் கட்டாயமாக பின் பற்றினால் மட்டுமே படைப்பாளிகளையும் அவர்கள் வெளியிடும் படைப்புகளையும் நாம் காப்பாற்ற முடியும். அதே போல்தான் நம் நாட்டில் வெளியிடப்படும் திரைப்படங்களும், அதற்கும் சக கலைஞர்கள் அத்திரைப்படங்களை திரையரங்குகளில் கண்டு அவர்களுக்கு முழு ஆதரவு வழங்க வேண்டும் என டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.
மேலும் நாட்டில் தற்பொழுது நமது மொழி சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு ஆதரவு வழங்குவோர் ஒரு சிலர் மட்டுமே உள்ளனர். அவ்வகையில் மஇகா மற்றும் தேசிய நில நிதி கூட்டுறவு கழகம் இது போன்ற மொழி சார்ந்த நிகழ்வுகளுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகிறது.
தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கத்தின் நிர்வாக இயக்குனர் டத்தோ பா.சகாதேவன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அதன் ஏற்பாட்டாளர் மலேசிய எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் ஞான சைமன், மலேசிய எழுத்தாளர் சங்கத்தின் அயலக தலைவர் பெ.இராஜெந்திரன் உட்பட பல பிரமுகர்கள் கலந்துக்கொண்டனர்.
0 Comments