ஷா அலாம், மார்ச் 5-
சிலாங்கூர் மாநிலத்தில் பி40 வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மாநில அரசு சார்பில் இலவச பேருந்து கட்டணம் வழங்கப்படுவதாக ஆட்சிக் குழு உறுப்பினர் வீ.பாப்பாராயுடு இன்று தெரிவித்தார்.
இந்த 300 வெள்ளி இலவச பேருந்து கட்டணம் வசதி குறைந்த தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று அவர் சொன்னார்.
கடந்த 2013 இல் வசதி குறைந்த தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து கட்டணம் வழங்கும் திட்டத்தை சிலாங்கூர் மாநில அரசு அறிமுகப்படுத்தியது.
2013 முதல் தொடர்ந்து இந்த இலவச பேருந்து கட்டணம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டில் 3,594 மாணவர்களுக்கு 11 லட்சத்து 78 ஆயிரம் வெள்ளி வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு விண்ணப்பம் செய்யும் மாணவர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு அதற்கு ஏற்ப இலவச பேருந்து கட்டணம் வழங்கப்படும்.
இதைத் தவிர்த்து பி40 இந்திய மாணவர்களுக்கான உயர் கல்வி திட்டங்களுக்கும் மாணவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
இளங்கலை பட்டப்படிப்புக்கு 5 ஆயிரம் ரிங்கிட்டும் டிப்ளோமா படிப்புக்கு 3 ஆயிரம் ரிங்கிட்டும் வழங்கப்படவுள்ளது.
இவ்விரு திட்டங்களுக்கும் மார்ச் 1ஆம் தேதி முதல் ஏப்ரல் 30 ஆம் தேதி பிற்பகல் 12.00 மணிக்குள் முறையாக விண்ணப்பம் செய்ய வேண்டும்.
இத்திட்டம் நிச்சயம் வசதிக் குறைந்த மாணவர்களுக்கு பெரும் பயனாக இருக்கும் என்று பாப்பாராயுடு கூறினார்.
இத்திட்டம் குறித்த மேல்விவரங்களுக்கு 03-55447307 என்ற எண்களுடன் தொடர்பு கொள்ளலாம்.
-செய்தி: காளிதாசன் இளங்கோவன்
0 Comments