loader
ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு தடை கோரும் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு!

ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு தடை கோரும் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு!

டெல்லி, மே 18.
தமிழகத்தின் பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுக்கான சட்டத்துக்கு தடை கோரி பீட்டா உள்ளிட்டவை தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்க உள்ளது.

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக 2017-ம் ஆண்டு உலகை திரும்பிப் பார்க்க வைத்த தமிழர் புரட்சி நிகழ்ந்தது. இதனையடுத்து ஜல்லிக்கட்டுப் நிகழ்வுகள் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. ஆனாலும் பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் ஜல்லிக்கட்டு போட்டியை தடை செய்ய தொடர்ந்து முயற்சிக்கின்றன.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுக்கு காரணமான சட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்பது பீட்டா உள்ளிட்ட பல அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு. உச்சநீதிமன்ற நீதிபதி கேஎம் ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்து வந்தது. இந்த வழக்கில் தமிழக அரசுடன் அதிமுக தரப்பில் விஜயபாஸ்கர், ஓ.பன்னீர்செல்வம், ரவீந்தரநாத் உள்ளிட்டோரும் இணைந்து கொண்டனர்.

உச்சநீதிமன்றத்தில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன. ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி பீட்டா உள்ளிட்ட அமைப்பினர் முன்வைத்த பல வாதங்களை நீதிபதிகள் நிராகரித்தனர். உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதி வாதங்கள் நடைபெற்றன. அப்போது பீட்டாவின் ஷியாம் திவான் வாதிடுகையில், ஜல்லிக்கட்டு என்பது மிக கொடூரமானது; நாங்கள் 5 ஆண்டுகளாக ஆய்வு செய்து சேகரித்த தரவுகளைத்தான் தாக்கல் செய்திருக்கிறோம். எந்த ஒரு காளையும் ஜல்லிக்கட்டில் ஓட விரும்புவது இல்லை. ஜல்லிக்கட்டில் காளைகள் கட்டாயமாக ஓட விடப்படுகின்றன என்றார்.

இதற்கு நீதிபதிகள், ஜல்லிக்கட்டு எப்படி கொடூரமான விளையாட்டு என்கிறீர்கள்? ஜல்லிக்கட்டில் ஆயுதங்கள் எதுவும் பயன்படுத்தப்படவில்லையே.. ஸ்பெயின் எருது சண்டையில் ஆயுதங்களுடன் மோதுகின்றனர். ஆனால் ஜல்லிக்கட்டில் கைகளால்தானே காளைகளை மனிதர்கள் அடக்குகின்றனர்.. இது எப்படி கொடூரமாகும்? என எதிர் கேள்வி கேட்டனர். ஒரு விளையாட்டில் உயிர் பலி ஏற்பட்டுவிட்டாலே தடை செய்துவிடலாம் என்பது ஏற்புடையது அல்ல. அது கொடூரமானதும் அல்ல. ஜல்லிக்கட்டில் காளையை யாரும் கொல்லவும் இல்லை. ஜல்லிக்கட்டில் ரத்த காயம், உயிரிழப்பு என்பது எதிர்பாராமல் நிகழ்கின்றன நிகழ்வு. மலையேறுவது கூட ஆபத்தானதுதான்.. அதற்காக மலையேறுவதை கூட தடை செய்துவிட முடியுமா? என்றும் பீட்டா தரப்பை நோக்கி கேள்வி எழுப்பினர் நீதிபதிகள்.

பின்னர் அனைத்து தரப்பு வாதங்களையும் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இவ்வழக்கில் வியாழக்கிழமையன்று (மே 18) உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.

0 Comments

leave a reply

Recent News