loader
நயன்தாராவைக் கரம்பிடித்தார் விக்னேஷ் சிவன்! கோலாகலமாக நடைபெற்றது திருமணம்!

நயன்தாராவைக் கரம்பிடித்தார் விக்னேஷ் சிவன்! கோலாகலமாக நடைபெற்றது திருமணம்!

இயக்குநர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம் இன்று மகாபலிபுரத்தில் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், அவர்களின் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

‘போடா போடி’ என்ற திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான விக்னேஷ் சிவன், தனது இரண்டாவது படமாக ‘நானும் ரௌடிதான்’ என்ற திரைப்படத்தை இயக்கினார். கடந்த 2015-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்திருந்தனர். இந்தப் படத்தில் நடித்தபோது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இடையே ஏற்பட்ட பழக்கம் பின்பு காதலாக மலர்ந்தது. அதன் பின் இருவரும் இணைந்து தனி வீட்டில் வாழ்ந்து வந்ததுடன்,‘ரௌடி பிக்சர்ஸ்’ மூலம் திரைப்படங்களைத் தயாரிப்பது, படங்களை வாங்கி வெளியிடுவது என சேர்ந்து பணிபுரிந்து வந்தனர்.


சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படம் வெளியாகும் சமயத்தில் விரைவில் நயன்தாராவுக்கும், தனக்கும் திருமணம் நடக்க இருக்கிறது என்பதைக் கூறி வந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, பத்திரிகையாளர் சந்திப்பில் திருமணத் தேதியையும் அறிவித்தார் விக்னேஷ் சிவன். அதன்படி இன்று இருவரின் திருமணம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. நண்பர்கள் உறவினர்கள் சூழ, அவர்களின் ஆசீர்வாதத்துடனும், அன்புடனும் திருமணம் நடந்தாலும், இதிலும் பாலிவுட் முறையிலான நடைமுறையைக் கையாண்டிருக்கிறார்கள் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும். அதில் முதலாவது இந்த திருமணத்தை பிரத்யேகமாக பதிவு செய்ய நெட்ஃப்ளிக்ஸுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக மிகப் பெரிய தொகை ஒன்றை நெட்ஃப்ளிக்ஸ் தரப்பு அளித்திருக்கிறது.

சூர்யா - ஜோதிகா, விஜய் சேதுபதி, ஜெயம்ரவி, இயக்குநர் மணிரத்னம், மோகன்ராஜா, சுந்தர் சி, நெல்சன், இயக்குநர் விஜய், கௌதம் மேனன், ஆனந்த் ஷங்கர், மலையாள நடிகர் திலீப், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, ஒளிப்பதிவாளர் ரத்னவேலு, இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த திருமணத்தில் கலந்து கொண்டார்கள். கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் திட்டமிடப்பட்ட திருமணம், இன்று காலை 10.20 மணிக்கு இந்து முறைப்படி நடந்தது.

இந்நிலையில், திருமணம் முடிந்ததை அறிவிக்கும் வகையில் நயன்தாராவுடன் உள்ள புகைப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், கடவுள், பிரபஞ்சம், எங்களது பெற்றோர் மற்றும் சிறந்த நண்பர்கள் அனைவரின் ஆசிர்வாதத்துடன் நயன்தாராவை திருமணம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

0 Comments

leave a reply

Recent News