loader
சீன எல்லையில் 50 ஆயிரம் இந்திய ராணுவ வீரர்கள்!

சீன எல்லையில் 50 ஆயிரம் இந்திய ராணுவ வீரர்கள்!

லடாக், ஜூன் 29. லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஆண்டு சீனா ராணுவத்தினருக்கும், இந்திய வீரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். இதனால் இந்தியா- சீனா எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வந்தது. இதையடுத்து இருதரப்பிலும் படைகள் குவிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து இருநாட்டு ராணுவ அதிகாரிகள் சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, எல்லையில் படைகள் ஓரளவு திரும்ப பெறப்பட்டன. எனினும், சீன ராணுவத்தினரின் அத்துமீறலால் அவ்வப்போது பதற்றம் நிலவுவதால் படைகள் முழுமையாக விலக்கிக் கொள்ளப்படவில்லை. சீன எல்லையில் இப்போது 2 லட்சம் இந்திய வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கூடுதலாக மேலும் 50 ஆயிரம் வீரர்களை சீன எல்லையில் நிறுத்த இந்தியா முடிவு செய்துள்ளது. இந்திய எல்லைப் பகுதிக்குள் சீன ராணுவத்தினர் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டுள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், சீன எல்லைப் பகுதியில் 3 முக்கிய இடங்களில் போர் விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.

அதே சமயம் சீன ராணுவம் கூடுதலான படையினரை திபெத்தில் இருந்து ஜிங்ஜியாங் ராணுவத் தளத்துக்கு அனுப்பியுள்ளது. மேலும், போர் விமானங்கள், நீண்ட தூரம் தாக்கும் பீரங்கிகள் போன்றவற்றையும் எல்லைப் பகுதியில் சீனா நிறுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன!

0 Comments

leave a reply

Recent News