மாண்புமிகு பிரதமர் டான்ஸ்ரீ மொகைதீன் யாசின் பி 40, எம் 40 என்று அனைத்து தரப்பினரையும் கவனத்தில் கொண்டு, அமைச்சரவை குழுவினர் மற்றுன் நிபுணத்துவ குழுவின் ஆலோசனையுடன், மிகவும் அருமையான ‘பந்துவான் பிரிஹாதின் நேஷனல்’ பொருளாதார ஊக்கத் திட்டத்தை அறிவித்துள்ளார்.
முதல் முறையாக பி 40 பிரிவினருக்கு மட்டுமல்லாமல், எம் 40 பிரிவினருக்கும் இந்த உதவித் தொகை வழங்கப்படும் என்று அறிவித்திருப்பதை மைக்கி வரவேற்பதாக, அதன் தலைவர் டத்தோ ந. கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த 2 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வணிகங்களை ஆதரிக்க 100 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதும் வரவேற்கத்தக்கது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
முதன்முறையாக இப்பாதிப்புக்கு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளதால், அரசாங்கத்தின் இவ்வுதவி எந்த அளவிற்கு உறுதுணையாக இருக்கும் எனக் காத்திருந்து பார்த்தால் தான் தெரியும் என அவர் விவரித்தார்.
அரசாங்கத்தின் இவ்வுதவி சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்குப் பற்றாத நிலையில் மைக்கி இந்தியர், சீனர் மற்றும் மலாய் வர்த்தகர்கள் பங்குபெற்றுள்ள NCCIM எனப்படும் தேசிய வர்த்தக தொழிலியல் சங்கங்களின் சம்மேளனம் மூலமாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் என மேலும் தெரிவித்தார்
பொருளாதார நெருக்கடியில் அனைத்து நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களைக் கவனத்தில் கொண்டு அறிவித்திருக்கும் ‘பந்துவான் பிரிஹாதின் நேஷனல்’ பொருளாதார ஊக்கத் திட்டத்தை அனைவரும் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தினார். இந்த இக்கட்டான சூழ்நிலையில், அரசாங்கம் எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் கட்டுப்பட்டு மைக்கி ஆதரவு தரும் என்று அவர் தெரிவித்தார்!
0 Comments