கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை அனைத்துலக அளவில் 3500 பேர் பலியாகி உள்ளனர். ஒரு லட்சத்திகும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் பெரும்பாலானவர்கள் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த விடுதி இடிந்து விழுந்ததில் ஆறு பேர் பலியாகி உள்ள சோகமும் அரங்கேறியுள்ளது. மேலும், 28 பேர் காணாமல் போய் உள்ளதாகவும் தெரிகிறது.
ஃபுஜியான் மாகாணத்தில் உள்ள குவான்சோவ் நகரத்தில் உள்ள இந்த ஐந்து மாடி விடுதி கொரோனா கண்காணிப்பு முகாமாக இயங்கியது. இடிந்து விழுந்த நேரத்தில் அந்த விடுதியில் 71 பேர் இருந்தனர்.
உலகம் முழுக்க மிரட்டி வருகிறது கொரோனா.
ஸ்பெயின் கொரோனா காரணமாகக் கடந்த சில தினங்களில் 7 பேர் பலியாகி உள்ளனர். இதனை அடுத்து அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
வங்கதேசத்தில் கொரோனாவைரஸால் பாதிக்கப்பட்டதாக 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் 20 - 35 இடையிலான வயதுடையவர்கள். அதில் இருவர் அண்மையில் இத்தாலி சென்று திரும்பியவர்கள்.
ஹாங்காங்கில் கொரோனா வைரஸ் காரணமாக மூன்றாவதாக ஒரு நபர் பலியாகி உள்ளார். இறந்த அந்த மூதாட்டிக்கு 76 வயது. அவரது கணவரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
சுவிட்சர்லாந்தில் கொரோனா வைரஸால் இதுவரை 281 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
செளதி அரேபியாவில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனை அடுத்து அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
செளதியில் கதீப் நகரம் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. அந்த ஊரில் உள்ள பள்ளிகள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் கொரோனா காரணமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் குடும்ப வன்முறைக்கு ஆளாவதாக செயற்பாட்டாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
வத்திகானில் உள்ள புனித பீட்டர் சதுக்கத்தில் மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடுவதைத் தவிர்ப்பதற்காக இன்று நேரலையில் தோன்றிய பிரான்ஸிஸ் உரையாற்றினார். போப் பிரான்ஸில் ஜலதோஷத்தில் பாதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா இல்லை என்பது தெரியவந்தது.
ஈரானில் கொரோனாவால் லியானவர்களின் எண்ணிக்கை 194ஆக உயர்ந்துள்ளது. அங்கு மட்டும் 6,566 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தென்கொரியாவில் கொரோனா அச்சம் காரணமாக நூற்றுக்கணக்கான தேவாலயங்கள் மூடப்பட்டன.
தமிழகத்தில் நேற்று மூவருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் இதுவரை 99 நோயாளிகள் கொரோனா பாதிப்பில் இருப்பதாகத் தெரிகிறது!
0 Comments