loader
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்? பீதியில் மக்கள்... அறிகுறிகள் என்ன?

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்? பீதியில் மக்கள்... அறிகுறிகள் என்ன?

உலகை அச்சுறுத்தும் பயங்கர வைரஸ் கொரோனோவால் பீதியில் இருக்கின்றனர் மக்கள்.  சீனாவில் வேகமாகப் பரவி வரும் இந்த வைரஸ், இன்று வரையில் உலகில் பல நாடுகளில் பதிவாகியுள்ளது.

சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் இனங்காணப்பட்ட இவ் வைரஸ் தொற்று 2020 ஜனவரி மாதம் 23-ஆம் திகதி வரையும் சீனாவுக்கு அப்பால் ஜப்பான், தாய்லாந்து, தாய்வான், ஐக்கிய அமெரிக்கா, தென் கொரியா  உட்பட தற்போது மலேசியாவிலும் பதிவாகி இருக்கின்றது.

சீனாவின் உஹான் மாநிலத்தில் முதலில் இனம் காணப்பட்ட இவ் வைரஸ், தற்போது அந்த நாட்டின் 13 மாநிலங்கள் வரையும் பரவியுள்ளது. இது வரைக்கும் சீனாவில் 1975 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிங்கப்பூரில் இருந்து மலேசியா வந்த சீனர் ஒருவருக்கு இந்நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அவர் தற்போது சிகிச்சையில் உள்ளார்.

உலக மக்கள் மத்தியல் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ள இவ்வைரஸின் பிரதான குடும்பமான கொரோனா வைரஸ் குடும்பம் 1961ஆம் அண்டில் தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தடிமலுக்குள்ளாகி இருந்த நபர் ஒருவரின் நாசித் துவாரங்களில் பெறப்பட்ட மாதிரியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது தான் இவ்வைரஸ் குடும்பம் கண்டுபிடிக்கப்பட்டது.

இவ்வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஆறு வைரஸ்கள்தான் மனிதனைப் பாதிக்கக்கூடியனவாக இருந்தன. ஆனால் தற்போது அதில் மேலுமொரு வைரஸ் சேரந்து கொண்டுள்ளது.

தற்போது மனிதர்களுக்கு பெரும் சவாலாக விளங்குகின்ற 2019 - நொவல் கொரனா வைரஸ் (2019 - nCoV) மனிதர்கள் முன்பு இனம் காணப்படாத ஒரு வைரஸ் என உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டிருக்கின்றது. இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

2019 - நொவல் கொரனா வைரஸ் (2019 - nCoV) எனப் பெயரிடப்பட்டுள்ளதுடன், இவ் வைரஸ் மிருகங்களில் இருந்து மனிதனுக்கு கடத்தப்பட்டுள்ளதாக சீன மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர்.

அதனால் விலங்குகளுடன் பாதுகாப்பற்ற முறையில் நேரடித் தொடர்பை மேற்கொள்ள வேண்டாம் என்றும் இறைச்சி மற்றும் முட்டையை நன்கு சமைத்து சாப்பிட வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இவ்வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு தடிமல் போன்ற மேல் சுவாச குழாய் நோய்கள் இலேசாக வெளிப்படலாம். ஆனால் கீழ் சுவாசக் குழாயையும் பாதிக்கலாம். குறிப்பாக இவ்வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு கடும் இருமல், சளி, காய்ச்சல், மூச்சுத்திணறல், சுவாசிப்பதில் சிரமம் போன்ற நோய் அறிகுறிகளும் வெளிப்படுகின்றன என்று சீனாவின் சுகாதாரத் தேசிய ஆணைக்குழு தெரிவித்திருக்கின்றது.

அதேநேரம் மூக்கிலிருந்து நீர் வடிதல், தலைவலி, இருமல், தொண்டை வலி, உடல் சோர்வான நிலை என்றபடியும் அறிகுறிகள் ஏற்பட முடியும்.

இவ்வைரஸ் தாக்கம் சில சமயம் மூச்சுக் குழாய் அழற்சி போன்ற கீழ் சுவாச குழாய் நோய்களை ஏற்படுத்தி தீவிர நிலையை அடையலாம். அதன் விளைவாக நிமோனியா, மூச்சு குழாய் அழற்சி ஏற்பட்டு ஈரல் பலவீனமடையலாம்.

சிறுநீரகச் செயலிழப்பும் ஏற்படலாம். இவரை பெரும்பாலும் உயிரிழப்புக்கு வழிவகுக்கலாம்.

இது புதிதாக இனங்காணப்பட்டுள்ள வைரஸாக விளங்குவதால் அதனைக் கட்டுப்படுத்துவதற்கான அல்லது தவிர்த்துக் கொள்வதற்கான விஷேச மருந்துகளோ, தடுப்பு மருந்துகளோ கிடையாது.

இவ்வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கும் தவிர்த்துக் கொள்வதற்கும் தடுப்பு மருந்துகளையோ மாத்திரைகளையோ கண்டுபிடித்து புழக்கத்திற்கு விட சிறிது காலம் எடுக்கும் என மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன் விளைவாக மலேசியா உட்பட உலகின் பல நாடுகளும் தங்களது நாட்டுக்குள் இவ் வைரஸ் தொற்று வந்து சேர்வதைத் தவிர்ப்பதற்கான ஏற்பாடுகளை விரிவான அடிப்படையில் முன்னெடுத்துள்ளன.

சீனாவுக்குச் செல்வது தொடர்பிலும் அங்கு சென்று வருபவர்கள் தொடர்பிலும் ஒவ்வொரு நாடும் விஷேச கவனம் செலுத்துகின்றன.

இதன் நிமித்தம் விமான நிலையங்களிலும் விஷேச மருத்துவ சோதனை ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன!

 

0 Comments

leave a reply

Recent News