நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டார்கள். அவர்களின் நம்பிகையைப் பெறுவது அவசியம். இல்லையென்றால் மக்களால் ஒதுக்கப்படுவோம் என சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதி ராவ் தெரிவித்தார்.
நாட்டில் இந்தியச் சமுதாயம் சொஸ்மா சட்டம் உட்பட பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்வதாகவும், அதனால் மக்கள் அதிருப்தியுற்றுள்ளதாகவும் அவர் கூறினார். மக்களின் இந்த அதிருப்தியைக் களைய விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், இல்லை என்றால் அடுத்த பொதுத்தேர்தலில் நம்பிக்கை கூட்டணி மக்களின் செல்வாக்கை இழக்க நேரிடலாம் என்றும் 2020 சிலாங்கூர் மாநில பட்ஜெட்டில் இந்தியர்களுக்காக ஒதுக்கப்பட்ட சிறப்பு நிதி குறித்து விளக்கமளித்த பின், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சொஸ்மா விவகரம் தொடர்பாக பிரதமர் துன் டாக்டர் மகாதீரிடம் தாம் உட்பட மனிதவள அமைச்சர் குலசேகரன், அமைச்சர் கோபிந்த் சிங், துணை அமைச்சர் சிவராசா, பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி ஆகியோர் பேச்சு நடத்தியதாகவும், அந்தச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என பிரதமர் கூறியதையும் கணபதிராவ் சுட்டிக்காட்டினார்.
நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் மீது இந்தியர்கள் கடும் அதிருப்தியில் உள்ளதால், மக்களின் நம்பிக்கையைப் பெறுவது மிக மிக அவசியம் என கணபதி ராவ் நினைவுறுத்தினார்!
0 Comments