இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட, பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் கடந்த 29 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். இவர்களை விடுதலை செய்யக்கோரி பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்த நிலையில் எழுவரை விடுதலை செய்ய தமிழக அரசு தீர்மானத்தை நிறைவேற்றியது. தமிழக அரசு ஒருமனதாக சட்டமன்றத்தில் 2018-ம் ஆண்டு நிறைவேற்றிய தீர்மானத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருந்தார். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வரை சென்றும் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இந்தநிலையில், பேரறிவாளனுக்கு விடுப்புகோரி அவரது தாயார் அற்புதம்மாள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கைவைத்தார்.
இந்தநிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் கைதாகி, ஆயுள் தண்டனை பெற்று, தற்போது சென்னை புழல் மத்திய சிறையில் இருந்துவரும் ஏ.ஜி. பேரறிவாளனுக்கு (சிறைக் கைதி எண் 7640) மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் விடுப்பு வழங்க வேண்டுமென அவரது தாயார் டி.அற்புதம்மாள் தமிழக அரசுக்கு அளித்திருந்த கோரிக்கையை பரிசீலித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஏ.ஜி.பேரறிவாளனுக்கு உரிய விதிகளைத் தளர்த்தி, 30 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்கிட ஆணையிட்டுள்ளார்கள்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments