(ஆர்.பார்த்திபன்)
கோலாலம்பூர்,ஏப் 8-
கணவர் போதைப் பித்தர் என்று தெரிந்ததும், விவாகரத்து செய்யும் முயற்சியாக தாய் வீட்டிற்குச் சென்ற மனைவியையும், அவரது குடும்பத்தினரையும் தொடர்ந்து துன்புறுத்தி வரும் நபர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கிள்ளான், பாடாங் ஜாவாவைச் சேர்ந்த வீ.அழகன், பத்துமலை ஆகியோரின் குடும்பத்தை, சம்பந்தப்பட்ட நபர் அடித்துத் துன்புறுத்தும் சம்பவம் அவ்வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாமா, அத்தை, சொந்த மனைவி மற்றும் அவரின் குடும்பத்தையே அடித்துத் துன்புறுத்தியதோடு, மனைவியையும் அவரது சகோதரியையும் கஞ்சா பொட்டலத்துடன் போலீஸிடம் அந்த நபர் பிடித்துக் கொடுத்துள்ளார்.
இது தொடர்பில் ஷா ஆலம் போலீஸ் தலைமையகத்தில் பல முறை புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட பத்துமலை (வயது 62) எனும் மாது கண்ணீர் மல்க தெரிவித்தார்.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு நீதி கிடைக்க வேண்டும் என மலேசியத் தமிழர் முன்னேற்றக் கழகம், மலேசிய மக்கள் கட்சி, நம்பிக்கை ஆகிய அமைப்புகள் இணைந்து, இன்று மதியம் 2 மணியளவில் புக்கிட் அமானில் இரண்டாவது முறையாக மகஜரை வழங்கியுள்ளனர்!
0 Comments