loader
மியான்மர் போராட்டத்தில் துப்பாக்கிச்சசூடு! பொதுமக்கள் 18 பேர் பலி! தொடரும் ராணுவ சர்வாதிகாரம்!

மியான்மர் போராட்டத்தில் துப்பாக்கிச்சசூடு! பொதுமக்கள் 18 பேர் பலி! தொடரும் ராணுவ சர்வாதிகாரம்!

நேபிடாவ்: மியான்மரில் ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக ரீதியிலான ஆட்சியைக் கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியுள்ளது. தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட 100-க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் மோசடி நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டி, ஆட்சிக்கவிழ்ப்பை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது மியான்மர் ராணுவம்.

ஆனால் மியான்மர் மக்கள் ராணுவ ஆட்சியை ஏற்றுக் கொள்ளவில்லை. நாட்டில் ஜனநாயகம் மீட்கப்பட வேண்டும் என்று கோரி கடந்த சில வாரங்களாக அந்த நாட்டு மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ராணுவ ஆட்சிக்கு எதிராகவும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை உடனடியாக விடுவிக்க கோரியும் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர்.

மியான்மர் ராணுவம் இந்தப் போராட்டங்களை  ஒடுக்கி வருகிறது.  ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தின் போது பல்வேறு இடங்களில்  போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 18 பேர் வரை உயிரிழந்ததாக ஐநா மனித உரிமை கவுன்சில் தெரிவித்துள்ளது.

யங்கூன், தாவெய், மாண்டலே உள்ளிட்ட நகரங்களில் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் ராணுவத்தின் அடக்குமுறைக்கு மத்தியிலும் மியான்மரில் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. அதேபோல் மியான்மர் மக்களுக்கான சர்வதேச நாடுகளின் ஆதரவும் தொடர்ந்து பெருகி வருகிறது. இது மியான்மர் ராணுவத்துக்கு பெரும் தலைவலியாக அமைந்தது. இதனால் ராணுவத்தினர் மேலும் ஆக்ரோஷத்துடன் போராட்டத்தை ஒடுக்கத் தொடங்கியுள்ளனர்!

0 Comments

leave a reply

Recent News