loader
சீமானிடமிருந்து விலகினார் மன்சூர் அலிகான்! தமிழ் தேசிய புலிகள் கட்சியைத் தொடங்கினார்!

சீமானிடமிருந்து விலகினார் மன்சூர் அலிகான்! தமிழ் தேசிய புலிகள் கட்சியைத் தொடங்கினார்!

சீமானின் நாம் தமிழர் கட்சியில் அதிரடி காட்டிய மன்சூர் அலிகான், அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியிலிருந்து விலகி தமிழ் தேசிய புலிகள் என்கிற கட்சியைத் தொடங்கியுள்ளார்.

சீமானின் பேச்சால் ஈர்க்கப்பட்டு இணைந்த  நடிகர் மன்சூர் அலிகான் தீவிர மொழிப்பற்று மிக்கவர். இலங்கைத் தமிழர்கள் மீது பற்று கொண்டவர்.

இவர் நாம் தமிழர் கட்சியில் இணைந்த பின்னர் கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டார்.

தனது அதிரடி பிரச்சார உத்தியால் பொதுமக்களைப் பெரிதும் கவர்ந்த மன்சூர் அலிகான், அந்தத் தேர்தலில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றார்.

இந்நிலையில் வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட மன்சூர் அலிகான் ஆசைப்பட்டதாகவும், அதற்கு அவரது கோரிக்கையை சீமான் பரிசீலிக்கவும் இல்லை என்றும் தெரிகிறது. இதையடுத்து அவர் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகினார். புதிதாகக் கட்சியையும் தொடங்கினார். அவரது கட்சிக்கு தமிழ் தேசிய புலிகள் எனப் பெயரிட்டுள்ளார்.

மன்சூர் அலிகானின் அதிரடிக்கும், உணர்ச்சி வயப்பட்ட பேச்சுக்கும் அவர் எந்த அளவுக்கு அரசியல் கட்சித் தலைவராக சோபிப்பார் என்பதைப் போகப்போகத்தான் பார்க்க வேண்டும். புதிய கட்சியைத் தொடங்கியுள்ள மன்சூர் அலிகான் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுவார் எனத் தெரிகிறது!

0 Comments

leave a reply

Recent News