மியான்மரில் அதிரடியாக ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதை அடுத்து, அங்கு மக்கள் போராட்டம் தீவிரமாகியுள்ளது.
ராணுவத்தால் கைது செய்யப்பட்டு வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ள அந்த நாட்டின் தலைவரான ஆங் சான் சூ கி உள்ளிட்டவர்களை விடுதலை செய்யக்கோரி போராட்டங்களை நடத்துகின்றனர்.
இந்த நிலையில், மியான்மரில் கடந்த 8 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் 30 நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக மியான்மர் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் போராட்டங்களுக்கும், பொது இடங்களில் உரை நிகழ்த்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அந்நாட்டு மக்கள் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மியான்மரின் நேபிடா என்ற இடத்தில் நேற்று நடந்த 4-வது நாள் போராட்டத்தின் போது, போராட்டக்காரர்களை கலைந்து செல்ல ராணுவத்தினர் வலியுறுத்தினர். அவர்கள் மீது தண்ணீர் பாய்ச்சினர். மேலும் எச்சரிக்கை செய்வதற்காக வானை நோக்கி துப்பாகியால் சுட்டனர்.
அப்போது அங்கிருந்த பெண் ஒருவரின் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதனால் அந்த பெண் அதே இடத்தில் சரிந்து விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தற்போது அந்தப் பெண் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் மேலும் சிலர் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன!
0 Comments