loader
மலேசியா - சிங்கப்பூர் அதிவேக ரயில் திட்டம் ரத்து செய்யப்பட்டது ஏன்?

மலேசியா - சிங்கப்பூர் அதிவேக ரயில் திட்டம் ரத்து செய்யப்பட்டது ஏன்?

கோலாலம்பூருக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான அதிவேக ரயில் திட்டத்தில் ‘அசெட்ஸ்கோ’ (AssetsCo) என்ற நிறுவனத்தை வெளியேற்றிவிட வேண்டும் என்று மலேசியா முன்வைத்த யோசனையை சிங்கப்பூர் அரசால் ஏற்க முடியவில்லை என்று அந்நாட்டின் போக்குவரத்து அமைச்சர் ஓங் யி காங் இன்று நாடாளுமன்றத்தில் விளக்கினார்.

மலேசியாவின் யோசனைக்கு இணங்கி அந்த நிறுவனத்தை அகற்றினால் அது அந்த உடன்பாட்டின் அடிப்படையில் இருந்தே விலகிச் செல்வதாக இருக்கும் என்று  ஓங் குறிப்பிட்டார்.

அசெட்ஸ்கோ நிறுவனத்தை விலக்கிவிட வேண்டும் என்ற மலேசியாவின் கோரிக்கை இந்த உடன்பாட்டைப் பொறுத்தவரையில் சிங்கப்பூருக்கு முக்கிய கவலையாக இருந்தது என்று நாடாளுமன்றத்தில் அமைச்சர் தெரிவித்தார். அந்த அதிவேக ரயில் திட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது ஏன் என்பது பற்றி பாட்டாளிக் கட்சிக்குப் பதிலளித்து பேசிய அமைச்சர், அத்தகைய அதிவேக ரயில் முறை ஒன்றை நிர்வகித்து நடத்துவதில் ஆற்றலோ, அனுபவமோ இரு நாடுகளுக்கும் இல்லை என்றார்.

இதன் காரணமாக திட்டப் பணிகளை மேற்கொள்ள, அனைத்துலக ஏலக்குத்தகை மூலம் இத்துறையில் சிறந்து விளங்கும் ஒரு நிறுவனத்தைத் தேர்வு செய்யலாம் என்று அந்த உடன்பாட்டில் சிங்கப்பூரும் மலேசியாவும் இணங்கி இருந்தன. அந்த வகையில் அசெட்ஸ்கோ தேர்வு பெற்றது.  அப்படி நியமிக்கப்பட்ட பிறகு ரயில் கட்டமைப்பு முறையை அமைத்து அந்தக் கட்டமைப்பை நிர்வகித்து நடத்தி, எல்லை கடந்த அதிவேக ரயில் சேவைக்கு முறையாக முன்னுரிமை அளிக்கப்படுவதை அசெட்ஸ்கோ நிறுவனம் உறுதிப்படுத்தும். அந்த நிறுவனம்தான் மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் பதிலளிக்க வேண்டி இருக்கும், பொறுப்பு ஏற்க வேண்டி இருக்கும் என்றெல்லாம் உடன்பாட்டில் ஒப்புக்கொள்ளப்பட்டன.

சிங்கப்பூரை பொறுத்த வரைஅந்த அதிவேக ரயில் திட்டத்தின் மையமே அசெட்ஸ்கோ நிறுவனம்தான். சிங்கப்பூர், மலேசியா இரு நாடுகளின் நலன்களும் பாதுகாக்கப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்த அது தேவை என்றும் அமைச்சர் விளக்கினார்.

நீண்டகாலப்போக்கில் இந்த  ரயில் திட்டம் தொடர்பில் சச்சரவுகள்,  இணக்கமின்மை ஏற்படக்கூடிய வாய்ப்புகளையும் அந்த ஏற்பாடு கூடுமானவரை குறைத்துவிடும் என்று  ஓங் கூறினார்.

அதிவேக ரயில் திட்டத்தை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிறுவனத்துடன் இணைக்கலாம் என்பது மலேசியா முன்வைத்த மற்றொரு யோசனை.
இதில் பல தொழில்நுட்பப் பிரச்சினைகள் உண்டு. ஆனாலும் சிங்கப்பூரைப் பொறுத்தவரையில் அதன் முக்கியமான கவலை அசெட்ஸ்கோ நிறுவனத்தை அகற்றுவதுதான் என்று அமைச்சர் தெரிவித்தார்.

இந்த உடன்பாடு தொடர்பில் மூன்றாண்டு காலம் பேச்சுவார்த்தை நடந்தது. அதன் பிறகு 2016ல் இரு நாடுகளும் சட்டபூர்வ அம்சங் களுக்கு இணங்கி இருதரப்பு உடன்பாட்டில் கையெழுத்திட்டன.

பல முறை இந்தத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. கடைசியாக முற்றிலும் ரத்தாகிவிட்டது. அதனையடுத்து உடன்பாட்டிற்கு ஏற்ப சிங்கப்பூருக்கு மலேசியா இழப்பீடு வழங்க வேண்டி இருக்கிறது!

0 Comments

leave a reply

Recent News