ஜெனீவா: உலகம் முழுவதும் தற்போது 2-வது கட்ட கொரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் தனது கோர முகத்தைக் காட்டி வருகிறது.
இதனிடையே இங்கிலாந்தில் ஏற்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் ஒட்டுமொத்த உலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் தென்னாப்பிரிக்காவில் இருந்து இங்கிலாந்து வந்த இரண்டு பயணிகளுக்கு மற்றொரு புதிய வகை கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் சமீபத்தில் கண்டறியப்பட்டது போலவே வீரியமாகப் பரவும் திறன் கொண்டதாக இது அறியப்படுகிறது. இங்கிலாந்தில் இருந்து புறப்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவுவதால், மீண்டும் மக்கள் நிம்மதியை இழந்துள்ளனர்.
இது ஏற்கனவே இருக்கும் வைரஸை விட 70 சதவீதம் வேகமாகப் பரவுகிறது என முதற்கட்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் 8 ஐரோப்பிய நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 8,01,94,033 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 5,64,60,230 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 17 லட்சத்து 56 ஆயிரத்து 947 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு தற்போது 2,19,76,856 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,05,799 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது!
0 Comments