கோலாலம்பூர், செப் 7: இந்நாட்டில் உள்ள இந்தியக் கலைஞர்கள் எப்போதும் ஒற்றுமையைப் பேணி காக்க வேண்டும் என்று மலேசியக் கலைஞர்களின் முன்னோடியாகத் திகழும் டத்தோ ஸ்ரீ ஆர்.கே. ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.
மலேசியக் கலைஞர்கள் எப்போதும் தன்மானத்துடன் வாழ வேண்டும். ஒருவருக்கு
ஒருவர் உதவும் மனப்பான்மையைஉருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று டத்தோஸ்ரீ ஆர்.கே. கேட்டுக்கொண்டார்.
கலைஞர்கள் ஒற்றுமையுடன் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என அவர் வலியுறுத்தினார்.
மலேசியக் கலைஞர்கள் ஒன்று கூடும் நிகழ்வு நேற்று நேதாஜி மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. டத்தோ ஸ்ரீ ஆர்.கே. ராதாகிருஷ்ணன் இந்நிகழ்விற்குத் தலைமை ஏற்றார்.
நாட்டின் மூத்தக் கலைஞர்களுக்குச் சிறப்பு செய்தல், உதவிகள் தேவைப்படும் கலைஞர்கள் குடும்பத்திற்கு உதவுதல் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்று தெரிவித்த டத்தோஸ்ரீ ஆர்.கே, சிறுநீரக நோயாளிகள் உட்பட பலருக்கு உதவும் வகையில் நிதி திரட்டும் நிகழ்சிகளுக்குக் கலைஞர்கள் தானாக முன் வந்து உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மறைந்த மூத்த மலேசியக் கலைஞர்களை நினைவு கூரும் வகையிலும், மலேசியக் கலைஞர்களை கொண்டாடும் வகையிலும் ஆகஸ்ட் 28 -ஆம் தேதியை மலேசியக் கலைஞர்கள் தினமாகக் கொண்டாட வேண்டும் என ஆர்.கே கலைக் குடும்பத்தின் சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அந்தத் தினத்தில், காலையில் மறைந்த கலைஞர்களுக்காகச் சிறப்பு பூஜையும், மாலையில் மலேசியக் கலைஞர்களுடன் கொண்டாட்ட நிகழ்ச்சியும் நடைபெறும் என டத்தோ ஸ்ரீ ஆர் . கே இந்த நிகழ்ச்சியில் அறிவித்தார்!
0 Comments