சிங்கப்பூர், மலேசியா எல்லைகளில் அடுத்த மாதம் 10 ஆம் தேதி பயணங்களை அனுமதிக்க இணக்கம் காணப்பட்டுள்ளது. இதன் மூலம், சில ஊழியர்களும், வர்த்தக நோக்கில் பயணம் செய்வோரும் இரு நாடுகளுக்கும் சென்று வர அனுமதிக்கப்படுவர் என்று மலேசிய வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுதீன் ஹுசேனும், சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனும் கூட்டாக வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சிங்கப்பூரும், மலேசியாவும் எல்லைகள் திறக்கும் சமயத்தில் இரண்டு வழிமுறைகளை நடைமுறைப்படுத்துகின்றன.
முதலாவது Reciprocal Green Lane - தடையற்ற இருதரப்புப் பயணமுறை. இது அத்தியாவசிய வர்த்தக, அலுவலகச் செயல்பாடுகளுக்காக மலேசியாவுக்கும், சிங்கப்பூருக்கும் சென்று வர உதவும். இதற்குத் தகுதிபெறுவோர் இரு நாடுகளிலும் கிருமிப் பரவல் பரிசோதனை உள்ளிட்ட பொதுச் சுகாதார விதிகளைப் பின்பற்றி நடப்பதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.
இரண்டாவது Periodic Commuting Arrangement - அவ்வப்போது மேற்கொள்ளப்படும் பயண ஏற்பாடு. இது, நீண்ட கால அனுமதியுடன் சிங்கப்பூரிலும், மலேசியாவிலும் உள்ள குடியிருப்பாளர்கள், வேலைக்காக இரு நாடுகளுக்கும் சென்று வர வழியமைக்கும்.
மலேசிய வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுதீன் ஹுசேனும், சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனும் இதன் தொடர்பில் இணக்கம் கண்டுள்ளனர்.
அன்றாடம் சென்று திரும்புவோர் உட்பட, மற்ற பயணிகளுக்கான திட்டங்களை வரையறுக்கவும் இரு தரப்பிலும் இணக்கம் காணப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்!
0 Comments