கோலாலம்பூர் ஜுலை- 5
(வெற்றி விக்டர்)
உலகத் தமிழர்களை வர்த்தக ரீதியில் ஒருங்கிணைத்து, அவர்களுக்குத் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் முயற்சியை உலகளாவிய நிலையில் ரய்ஸ் அமைப்பு செய்து வருகிறது.
இந்நிலையில் மலேசியா ரய்ஸ் அமைப்பு மலேசியாவில் உள்ள வர்த்தகர்களை ஒருங்கிணைத்து, அவர்களுக்குத் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் ஒரு தளமாகச் செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில், இன்று தலைநகர் அர்மாடா தங்கும் விடுதியில் நடத்தப்பட்ட ரய்ஸ் மாநாட்டில், 102 உள்நாட்டு சிறு வர்த்தகர்களும், 200 வெளிநாட்டு வர்த்தகர்களு 'ஸூம்' எனப்படும் இணைய தொழில்நுட்பம் வழி கலந்துகொண்டனர்.
இந்த மாநாட்டில் ரய்ஸ் மலேசியா தலைவர் சரவணன், மைக்கியின் பொதுச் செயலாளர் டத்தோ டாக்டர் ஏ.டி குமாரராஜா, எச்.ஆர் .டி. எஃப் தலைமை வாரிய இயக்குனர் டத்தோ நெல்சன், எச்.ஆர்.டி.எஃப் முன்னாள் தலைமைச் செயல்முறை அதிகாரி டத்தோ விக்னேஸ்வரன், சமூகப் பேச்சாளர் பாண்டித்துரை ஆகியோர் உரையாற்றினர்.
இம்மாநாட்டை தமிழ் வணிகர்கள் ஜீரோவாகப் பார்க்கவேண்டும். வணிக உலகில் (0) ஜீரோவுக்கு அதிக மவுசு உண்டு. காரணம் எந்தளவிற்கு வருமானத்தில் ஜீரோ அதிகரிக்கிறதோ, அந்தளவிற்கு வணிகத்துறை மேம்பாடு அடையும். அந்த வகையில் பலதரப்பட்ட வர்த்தக வாய்ப்புகளைத் தமிழ் வணிகர்களுக்கு உருவாக்கும் பொருட்டு, ஒரு தளத்தை ஏற்படுத்தியுள்ள ரய்ஸ் மாநாட்டை, ஜீரோவாக மலேசியத் தமிழ் வர்த்தகச் சமூகம் பார்க்க வேண்டும். இதன் மூல வாய்ப்புகளைப் பயன்படுத்தி, வணிகத்தில் ஜீரோக்களை அதிகரிக்கச் செய்யலாம்.
இந்த கோவிட் 19 காலகட்டத்தில் இணையம் வழி வர்த்தகத்தைச் செய்யும் வழிமுறையில் தமிழ் வர்த்தகர்கள் தீவீரப்படுத்தப்படவேண்டும். அதன் வழி அவர்களுடைய வணிகம் அடுத்த நிலைக்கு உருமாறும். அந்த வகையில் அரசாங்கமும் பல நல்ல திட்டங்களை வணிகர்களுக்கு வகுத்து வருகிறது.
கோவிட் 19 மலேசியா கையாண்ட விதம், அதில் இருந்து மலேசியா மீண்டு வந்து மீண்டும் வணிகத்தை உயிர்ப்பித்த விதம் பல உலக வணிகர்களைக் கவர்ந்துள்ளது.
ஆகையால், இந்தக் காலகட்டத்தில் மலேசியா ஆசியாவின் வணிக மையத் தலமாக உருவெடுக்கும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாக ரய்ஸ் மலேசியா தலைவர் சரவணன் தெரிவித்தார்!
0 Comments