(வெற்றி விக்டர்)
கோலாலம்பூர் ஏப்ரல்-21
நேற்று செலாயாங்கில் உள்ள தாமான் ஸ்ரீ முர்னி அடுக்குமாடி குடியிருப்பில் மக்கள் அவதிப்படுவது உண்மை. தனக்குப் புகார் கிடைத்தது என பிரபாகரன் சொன்னதும் உண்மை. பத்து நாடாளுமன்ற மக்கள் வாட்சாப்பில் புகார் செய்து உள்ளனர். (அதனை கீழே இணைத்துள்ளோம்) இதனால் பிரபாகரன் புகார் கிடைத்து மக்களை சந்திக்கச் சென்றார், என்பது தெளிவாகிறது.
அதே சமயம் கூட்டரசுப் பிரதேச துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ எட்மண்ட் சந்தாரா அங்கு எப்படி வந்தார்? ஏன் வந்தார் ? எதற்கு வந்தார்? என்பது இன்னமும் புதிராக இருக்கிறது.
பிரபாகரன் அங்கு வந்த தகவல் எப்படி அமைச்சர் வரை சென்றது? அமைச்சர் வந்து தடுக்கும் அளவிற்கு ஏன் இந்தப் பரபரப்பு? ஏன் இந்த வாக்குவாதம்? எதற்கு இந்தக் கைது என்பதை அலசுவோம்.
சற்றுப் பின் நோக்கிச் செல்வோம். அரசியல் சண்டையில் பி.கே.ஆர் கட்சியில் டத்தோ ஸ்ரீ அன்வாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் கட்சியை விட்டுப் பிரிந்த டத்தோ ஸ்ரீ அஸ்மின் அலிக்கு ஆதரவாக அவருடன் இணைந்தவர்தான் டத்தோ ஸ்ரீ எட்மண்ட் சந்தாரா.
பத்து நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து கடந்த பொதுத் தேர்தலில் சட்ட சிக்கலால் போட்டியிட முடியாமல் பிரபாகரனுக்கு ஆதரவு வழங்கி, பின்னர் சட்ட சிக்கல் சரியானதும் பிரபாகரனுடன் கருத்து வேறுபாட்டில் இருக்கும் தியான் சுவாவும் இந்த அரசியல் சண்டையில் அஸ்மின் அலியுடன் கைகோர்த்து, பி.கே.ஆர் கட்சியில் இருந்து விலகிய பின்னர் அவரை கட்சி உறுப்பினர்கள் தாக்கிய சம்பவமும் நாம் அறிவோம்.
இதில் எங்கு பிரபாகரன் உள்ளே வருகிறார் என்றால், தேர்தலுக்கு பின் பி.கே.ஆர் கட்சியில் இணைந்த பிரபாகரன் அந்த அரசியல் சண்டையில் டத்தோ ஸ்ரீ அன்வாருக்கு ஆதரவாக இருந்தார். மக்கள் விரும்பும் அன்வாருக்கு ஆதரவு அளித்தார்.
தியான் சுவா அன்வாரை ஆதரிக்காதபட்சத்தில் நம் ஆதரவு அன்வாருக்கு இருந்தால் பத்து தொகுதியை தற்காத்துக் கொள்ளலாம் என்ற தூரநோக்குச் சிந்தனையாகக் கூட இது இருக்கலாம். இதில் எது உண்மை என்பது அவரவர் மனசாட்சிக்கே வெளிச்சம்.
ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக புதிய கூட்டணியின் ஆட்சி இப்போது மலர்ந்துள்ளது. இதில் அமைச்சரவையில் அஸ்மின் அலியின் அதரவாளர்கள் இருக்கிறார்கள். அதில் ஒருவர்தான் துணை அமைச்சர் எட்மண்ட் சந்தாரா.
பத்து தொகுதி மீண்டும் அவர்களுக்கு உரியவருக்குப் போகவேண்டும். அதற்கு இப்போது உள்ள இளம் நாடாளுமன்ற உறுப்பினருக்குக் குடச்சல் தரவேண்டும் என்பதே அரசியல் விளையாட்டு.
இனி இப்படிப் பல சவால்களை பிரபாகரன் சந்திக்க நேரிடும். அவருக்கு அரசியல் ரீதியில் இடையூறுகள் வரும். எனவே, தயாராக இருந்து எதிர்நீச்சல் அடிக்கவேண்டும். இப்போதுதான் அரசியல் களத்திற்குள் நுழைந்துள்ளார் பிரபாகரன். இன்னும் இருக்கிறது சவால்கள்!
0 Comments