கொரோனா வைரஸின் கோரத் தாண்டவம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 50,000 பேரைப் பலிகொண்டு விட்டது இந்தக் கொடூர வைரஸ். அமெரிக்காவில் அதிகபட்சமாக 2,45,000 பேர் வைரஸ் தொற்றுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் நேற்று ஒரேநாளில் அமெரிக்காவில் மட்டும் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். அங்கு வைரஸ் அறிகுறி தெரிந்த அடுத்தநாளே இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சோகம் நடைபெற்றுள்ளது.
மத்திய அமெரிக்காவின் எல் சால்வடார் நாட்டைச் சேர்ந்தவர் 32 வயதான ஜெசிகா பீட்ரிஸ் கோர்டெஸ். இவரும் இவரது சகோதரரும் கடந்த மூன்று ஆண்டுகளாக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தங்கி வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த மார்ச் 23-ஆம் தேதி உடல் வலி இருப்பதாக ஜெசிகா தன் சகோதரரிடம் தெரிவித்துள்ளார். சகோதரர் சென்று பார்ப்பதற்குள் ஜெசிகா மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் நான்காவது நபராக சால்வடார் நாட்டைச் சேர்ந்த ஜெசிகா உள்ளார்.
சகோதரியின் இறப்பு பற்றிப் பேசியுள்ள சீசர் கோர்டெஸ், “ கடந்த மார்ச் 23-ஆம் தேதிக்கு முன்னர் வரை என் சகோதரி நல்ல உடல் ஆரோக்கியத்துடன்தான் இருந்தார். சிறிது உடல் வலி மற்றும் உடல் குளிச்சி, நடுக்கமாக இருப்பதாகக் கூறினார். அப்போதே எங்களுக்குக் கொரோனா தொற்று இருக்குமோ என்ற அச்சம் இருந்தது. ஆனால் உடல் வலி ஏற்படுவதற்கும் வைரஸுக்கும் தொடர்பில்லை என நினைத்து அவருக்கு முதலுதவி மருந்து கொடுத்தேன். மறுநாள் ஜெசிகாவுக்கு உடல்நிலை மோசமாக இருப்பதாக எனக்கு போன் வந்தது.
நான் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்குச் சென்று பார்த்தபோது ஏற்கெனவே ஜெசிகா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஒரேநாளில் உடல்நிலை மோசமாகி அவர் உயிர் பிரியும் நிலை வந்தது எங்களுக்குப் பெரும் அதிர்ச்சியாக உள்ளது. ஒரேநாளில் அனைத்தும் முடிந்துவிட்டது. என் சகோதரி வலியில் துடித்திருப்பாள், அவள் உயிர் பிரியும் நேரத்தில்கூட ஆறுதல் சொல்ல அருகில் யாரும் இல்லை. அவளின் உடல் தகனத்துக்குக் குடும்பத்தினர் யாரும் வர முடியாத சூழல் உள்ளது. இந்தநிலை யாருக்கும் வரக்கூடாது” எனக் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார் சீசர்.
ஜெசிகா இறந்த பிறகு நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது!
0 Comments