நேற்று இரவிலிருந்து சீமான் கட்சியினர் குறித்த ஒரு தொலைபேசி உரையாடலும் அதையொட்டிய விவாதங்களும் ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் வைரலாகி வருகிறது. அந்த உரையாடல், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் உதவியாளர் புகழேந்திக்கும் தனசேகர் என்பவருக்குமான உரையாடல். இருவரும் தகாத வார்த்தைகளால் திட்டிக்கொள்கிறார்கள். அதில், தனசேகர் என்பவர் சீமான் தன்னை மலேசியாவில் வைத்துக் கொல்வதற்கு முயற்சிசெய்து தோற்றுவிட்டதாகக் கூறுகிறார். ஆகவே, இது சாதாரணமாகக் கடந்துபோகக்கூடிய ஒரு தொலைபேசி உரையாடலாக இல்லை. ஒட்டுமொத்த உரையாடலின் பின்னணி குறித்துச் சொல்கிறார், நாம் தமிழர் கட்சியின் மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கார்த்திக்.
எதிர்தரப்பில் பேசிய தனசேகர் என்கிற நபருக்கும் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரை, தலைவன், தொண்டன் என்று இல்லாமல் அண்ணன், தம்பி என்கிற முறையில்தான் பழகுகிறோம். சீமானை யார் வேண்டுமென்றாலும் எப்போது வேண்டுமென்றாலும் கட்சி அலுவலகத்திலேயே சந்திக்கலாம். அதன் அடிப்படையில்தான், அந்த நபரை இங்கே நேரில் பேசப் புகழேந்தி அழைத்தார். எதிர்தரப்பிடமிருந்து ஒழுங்கான பதில் இல்லை. எனவே, அவர் முகவரி கேட்டு அவரிடம் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்.
எங்கள் கட்சி நாளுக்குநாள் மக்களிடம் செல்வாக்கு பெற்று வருகிறது. அதைக் கலைத்துப் போடுவதற்குப் பலதரப்பிலும் ஏராளமானோர் வேலை செய்கிறார்கள். அவற்றில் ஒரு திட்டம்தான் இது. நாம் தமிழர் கட்சியையும் அதன் உறுப்பினர்களையும் ஒரு பிற்போக்குவாதிகளாக, இனவாதக் கூட்டமாகச் சித்திரிக்க ஒரு பெருங்கூட்டம் முயன்று வருகிறது. குறிப்பாக, தி.மு.க-வினருக்கு எங்களின் வளர்ச்சியின் மீது பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த ஒலிப்பதிவை அவர்கள்தான், இணையத்தில் வேகமாகப் பரப்புகிறார்கள். இது அவர்களுடைய வேலையாகக்கூட இருக்கலாம்.
எங்கள் மீது மிகப்பெரிய உளவியல் தாக்குதலைச் செய்து பார்க்கிறார்கள். வெளிவர இருக்கின்ற தேர்தல் முடிவுகளில் எங்களுக்குக் கிடைத்திருக்கிற வாக்குகள் இவர்களுக்குத் தெரியவரும்போது, இன்னும் சில சூழ்ச்சிகளைச் செய்வார்கள். ஆனால், அவற்றுக்கெல்லாம் அஞ்சி நடுங்குகிற கூட்டம் அல்ல நாங்கள்- இவ்வாறு கார்த்திக் தெரிவித்துள்ளார்!
0 Comments