புத்ராஜெயா, ஏப். 10-
பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு ஏப்ரல் 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பிரதமர் டான்ஸ்ரீ முஹைதின் யாசின் அறிவித்துள்ளார்.
உலகையே அச்சுறுத்தும் கொரோனா நச்சுத்தொற்று மலேசியாவையும் விட்டுவைக்கவில்லை. நாட்டில் ஒவ்வொரு நாளும் புதிய கோவிட் 19 பதிவுகள் தொடர்வதால், அரசாங்கம் பொது நடமாட்டக் கட்டுப்பாட்டினை ஏப்ரல் 14 வரை நீட்டித்தது. இந்நிலையில், நாட்டில் இன்னும் நிலைமை சீரடையாமல் இருப்பதால் ஏப்ரல் 28-ஆம் தேதி வரை நடமாட்டக் கட்டுப்பாடு நீட்டிக்கப்படும் என இன்று பிரதமர் அறிவித்துள்ளார்.
நாடு சிறப்பான முறையில் இந்நோயைக் கட்டுப்படுத்தி வந்தாலும், இன்னும் இரண்டு வாரங்களுக்கு நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை நீட்டிப்பது அவசியம் என பிரதமர் சுட்டிக்காட்டினார். இந்த இரண்டு வாரங்களில் நோய்த் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை குறைந்தாலோ அல்லது முழுமையாக நாம் விடுபட்டாலோ மட்டுமே அடுத்தக்கட்ட நடவடிக்கையை அரசு வெளியிடும் என அவர் தெரிவித்தார்.
பள்ளிகளுக்கான விடுமுறை ஏப்ரல் 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதோடு, வீட்டிலிருந்தே மாணவர்கள் கல்வி கற்கும் நடைமுறையை கல்வி அமைச்சு முன்னெடுக்க வேண்டும் என்ற பரிந்துரை வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார்.
மேலும், நிறுவனங்கள் இந்த உத்தரவை மீறினால் அவற்றின் உரிமம் பறிக்கப்படும் என்றும், இந்த கோவிட் 19 நோய்த் தொற்றிலிருந்து நாம் அனைவரும் விடுபட வேண்டும் என்றும், அதற்காக ஒற்றுமையாய் இணைந்து பணியாற்றுவோம் எனவும் பிரதமர் டான்ஶ்ரீ முஹைதீன் வேண்டுகோள் விடுத்தார்!
0 Comments