கோலாலம்பூர் மார்ச் -29
பிரதமர் டான் ஸ்ரீ மொகைதீன் யாசின் அறிவித்த 250 பில்லியன் மதிப்பிலான பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தில், சிறு நடுத்தர வியாபாரிகள் எதிர்நோக்கியுள்ள பிரச்னைகள் தீர்க்கப்படவில்லை; மாறாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் -புத்ராஜெயா இந்திய வர்த்தகச் சம்மேளனத்தின் செயலாளர் டத்தோ டாக்டர் ஏ.டி குமாரராஜா கருத்து தெரிவித்துள்ளார்.
மக்கள் சுமையைக் குறைக்கும் முயற்சியில் பிரதமர் சில திட்டங்க்ளை அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது. சிறு நடுத்தர வியாபாரிகளுக்கான அரசாங்கம் கொடுத்த சலுகை கடன், வரி கட்டண ஒத்தி வைப்பு போன்றவை பிரச்னையை தள்ளி வைத்துள்ளது.
ஆனால், வியாபாரிகள் தங்களது வியாபாரச் சறுக்களிலிருந்து மீண்டெழுவதற்கு அரசாங்கம் இன்னும் சில ஆக்கப்பூர்வமான திட்டங்களை அறிவிக்க வேண்டும். இல்லையேல், இந்தப் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தில் சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகள் நலன் விடுபட்டுள்ளதாகவே கருதப்படும் என ஏ.டி குமாரராஜா தெரிவித்தார்.
அரசாங்கம் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண ஒரு சிறப்புக் குழு அமைத்து, பலதரப்பட்ட வர்த்தக அமைப்புகளின் கருத்துகளை உள்வாங்கி, அதன் அடிப்படையில் வர்த்தகர்களின் எதிர்பார்ப்பு என்ன என்பதைப் புரிந்துகொண்டு, அதிலிருந்து பிரச்னைக்கான தீர்வை நோக்கி அரசின் திட்டம் அமைந்தால், அது சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகள் பிரச்னையில் இருந்து மீண்டுவர உதவியாக இருக்கும் என டத்தோ ஏ.டி குமாரராஜா தெரிவித்தார்.
உதாரணத்திற்கு பிரதமர் அறிவிப்பில் மியா அண்டிக்கு அரசு உதவி 4000 வெள்ளியாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறு நடுத்தர வியாபாரம் தடைப்பட்டு இருக்கிறது. வெறும் பணத்தை வைத்து என்ன செய்வார்கள்? பெருநிறுவனம் தடையின்றிச் செயல்படுகிறது.
சிறு தொழில் தடைபடுகிறது என்பதை அரசாங்கம் உணர்ந்து, சிறு நடுத்தர வியாபாரிகள் மீண்டெழ விரைந்து சில நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என டாக்டர் ஏ.டி குமாரராஜா கேட்டுக்கொண்டார்!
0 Comments