ஸ்ருதிஹாசன், சில நாள்களுக்கு முன்பு தன் நீண்ட நாள் காதல் பயணத்தை முடித்துக்கொண்டார். உறவு முறிவுக்கான காரணம் எதுவும் வெளியிடப்படாத நிலையில், தற்போது தெலுங்கு ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டவர், அது பற்றி மனம் திறந்திருக்கிறார்.
ஸ்ருதிஹாசனும், லண்டனைச் சேர்ந்த நடிகரும் பாடகருமான மைக்கேல் கோர்சாலும் நீண்ட நாள்களாகக் காதலித்து வந்தனர். இருவரும் கூடிய விரைவில் திருமணம் செய்யவிருப்பதாகச் செய்திகள் வெளியாகிய நிலையில், மைக்கேல் கோர்சால் தன்னுடைய இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில், `இந்த இளம்பெண் என் வாழ்க்கையின் முக்கிய, சிறந்த நண்பராக எப்போதும் இருப்பார்' எனப் பதிவிட்டு தங்களின் காதல் பயணம் முடிவுற்றது என்று மறைமுகமாகத் தெரிவித்திருந்தார்.
இதைப் பற்றி எதுவும் பேசாமல் இருந்த ஸ்ருதி, தங்கள் பிரிவுக்கான காரணத்தைப் பகிர்ந்துகொண்டார்.
"நான் ரொம்ப கூல் டைப். யாருக்கும் எந்தத் தீங்கும் நினைக்காதவள். மிகவும் எமோஷனலான பெண். அதனால்தானோ என்னவோ மற்றவர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இது எனக்கு ஒரு நல்ல அனுபவம் என்றுதான் சொல்லுவேன். காதலில் விழுவதற்கு எந்த ஃபார்முலாவும் இல்லை. நல்லவர்கள் நல்ல நேரங்களில் நல்லவர்கள். அதே நபர்கள் சில நேரங்களில் மோசமானவர்களாக மாறலாம்.
ஆனால், எனக்கு இதில் எந்த வருத்தமும் இல்லை. இது ஒட்டுமொத்தமாக எனக்கு ஒரு நல்ல அனுபவமாக இருக்கிறது. இதில், நான் நிறைய கற்றுக்கொண்டேன். இதை நல்ல கற்றல் அனுபவம் என்று சொல்லலாம். நான் எப்போதும் ஓர் ஆழமான அன்புக்காகக் காத்திருப்பவளாக இருப்பேன். அதை நான் எதிர்பார்த்திருக்கிறேன் என்று அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று அந்நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டுள்ளார் ஸ்ருதி!
0 Comments