சென்னை, நவ.16-
சென்னையில் நடைபெற்ற மூன்றாம் அனைத்துலக தமிழ்த் தொழிலதிபர்கள் மாநாட்டில் மலேசியர்கள் ஐவருக்குச் சாதனை விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் ஒரு தனி மனிதனாக மருத்துவக் கல்லூரியை நிறுவியதோடு, உலக நாடுகளிலும் மருத்துவக் கல்லூரியை விரிவுபடுத்தியுள்ள சைபர் ஜெயா பல்கலைக்கழகத்தின் தோற்றுநர் டான்ஸ்ரீ டத்தோ பாலனுக்கு, 'தமிழ் உலக கல்வித் தந்தை 'எனும் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் வழி தவறிச் செல்லும் மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களின் வாழ்க்கைக்கு விடிவெள்ளியாக இருந்து வரும் 'மைஸ்கில்ஸ்' கல்லூரியை நிறுவிய இயக்குநர் வழக்கறிஞர் பசுபதிக்கு 'நம்பிக்கை சுடர்ஒளி' எனும் விருது வழங்கப்பட்டது.
மலேசியாவில் ஏற்றுமதி, இறக்குமதி துறையில் முன்னோடி வர்த்தகராக இருந்து வரும் டத்தோஸ்ரீ ஆண்டிக்கு :முன்னோடி வர்த்தகர்' எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் ஒரு முன்னோடி பெண் வர்த்தகரான பவானி விஸ்வநாதனுக்கு 'பெண் சுடரொளி' எனும் விருது வழங்கப்பட்டது.
மலேசியாவில் தமிழ்த் துறையில் மிகவும் பிரபலமான பாண்டிதுரைக்கு 'தமிழ் உலக படைப்பாற்றல் மேதை' எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
'எழுமின் தி ரைஸ்' எனும் அமைப்பு நடத்திய இந்த மாநாடு, நவம்பர் 14 தொடங்கி 16 வரை சென்னை, நுங்கம்பாக்கம் மகளிர் கிறித்துவக் கல்லூரி அரங்கில் 35 நாடுகளைச் சேர்ந்த 1500 பேராளர்கள் பங்கேற்பில் மிகச் சிறப்பாக நடந்தேறியது!
0 Comments