(காளிதாஸ் சுப்ரமணியம்)
சென்னை, நவ.14-
எழுமின் தி ரைஸ் என்றழைக்கப்படும் உலகத் தமிழ் தொழிலதிபர்கள், தொழில் முனைவோர் மாநாடு மலேசியப் பேராளர்களுக்குப் பயனாக அமையும் என்று, தி ரைஸ் மலேசிய கிளைத் தலைவர் சரவணன் சின்னப்பன் கூறியுள்ளார்.
மலேசியாவைப் பிரதிநித்து கலந்து கொண்டுள்ள 65 பேராளர்களுக்கு, குறிப்பாக இளம் தொழில் முனைவர்களுக்கு பயனளிக்கும் என்று சென்னையில் மலேசிய செய்தியாளர்களிடம் சரவணன் தெரிவித்தார்.
சென்னையில் இன்று நவம்பர் 14 வியாழக்கிழமை காலை 8.00 மணி தொடங்கி, நுங்கம்பாக்கம் மகளிர் கிறித்துவக் கல்லூரி அரங்கில் தி ரைஸ் மாநாடு தொடங்கியது.
இம்மாநாட்டில் மலேசியா, சிங்கப்பூர், மியான்மார், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, தென் ஆப்பிரிக்கா, பிரித்தானியா, ஜெர்மனி, நார்வே, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமான், கத்தார், குவைத், பஹ்ரைன், இலங்கை மொரீசியஸ் உள்ளிட்ட 35-க்கும் மேலான உலக நாடுகளில் இருந்து தமிழ்த் தொழிலதிபர்கள், தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் மலேசியாவைப் பிரதிநிதித்து 65 பேராளர்கள், குறிப்பாக இளம் வர்த்தகர்கள் கலந்து கொண்டதாகவும் அவர்கள் பல்வேறு வர்த்தக வாய்ப்புகளை அமைத்துக் கொள்ள தி ரைஸ் மாநாடு ஒரு தளமாக அமையும் என்றும் சரவணன் சின்னப்பன் தெரிவித்தார்.
இந்த மாநாடு திறனாளிகளைச் சந்திக்கவும், தொழில்– வணிக உறவுகளை உருவாக்கிக் கொள்ளவும் அரிய வாய்ப்பாக அமையும்.
எழுமின் அமைப்பு முதல் உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாட்டினை கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மதுரை மாநகரிலும், இரண்டாம் மாநாட்டினை மலேசியா கோலாலம்பூர், சைபர் ஜெயா பல்கலைக்கழகத்திலும் நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது!
0 Comments