கோலாலம்பூர் செப்டம்பர் -24
இந்த நாட்டில் முறையாக நிறுவனத்தைத் தொடங்கி, வருமான வரி முறைப்படி செலுத்தி தொழில் செய்து வரும் எங்களுக்குப் பெரும் முட்டுக்கட்டையாக இருப்பது, சட்டவிரோதமாகத் தொழில் செய்யும் அந்நிய நாட்டவர்கள்தான் என மலேசியத் தோட்டத் தொழில் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் டத்தோ ஆனந்த் தெரிவித்தார்.
இன்று ஆள்பல இலாகாவின் அதிகாரிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்ட மலேசிய தோட்டத் தொழில் உரிமையாளர்கள் சங்கப் பொறுப்பாளர்கள் அதன் பின் செய்தியாளார்களைச் சந்தித்தனர்.
ஒரு புறம் அந்நியத் தொழிலாளர் பற்றாக்குறையால் எங்கள் தொழில் மந்தமாக உள்ள நிலையில், இன்னொரு புறம் சட்டவிரோதமாக அந்நிய நாட்டவர்கள் மிகவும் குறைந்த விலையில் சேவைகளை வழங்கி, எங்கள் பிழைப்பில் மண் அள்ளிப் போடுகிறார்கள்.
முறையாக வரி செலுத்த இயலாத அவர்கள், இஷ்டத்திற்கு விலையைக் குறைப்பதால், நமது நாட்டுத் தொழிற்துறையினரின் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகிறது.
அவர்கள் பகுதி நேரத் தொழிலாகத் தோட்டத் தொழிலைச் செய்து வருகிறார்கள். இப்படிச் சட்டவிரோதமாக தொழில் நடத்தும் அந்நிய நாட்டவர்கள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என டத்தோ ஆனந்த் கேட்டுக்கொண்டார்.
அதே வேளையில், நீண்ட காலமாக அந்நியத் தொழிலாளர் பற்றாக்குறையால் எங்கள் துறை சரிவுநிலையை எட்டியுள்ளதால், இதற்கு உரிய நடவடிக்கையை அரசாங்கம் எடுக்கவேண்டும் என, நாடுதளுவிய நிலையில் உள்ள தோட்டத் தொழில் உரிமையாளர்களை ஒருங்கிணைத்து, கடந்த ஏப்ரல் மாதம் மனிதவள அமைச்சர் குலசேகரனிடம் எங்கள் பிரச்னைகளை எடுத்துரைத்து மகஜரை வழங்கினோம்.
அந்த வகையில் இன்று, ஆள் பல இலாகாவின் துணை இயக்குனர் துவான் ஹாஜி அஸ்ரி பின் அப்துல் ரஹ்மானைச் சந்தித்து இவ்விவகாரம் குறித்துப் பேசியிருக்கிறோம். இதன் வழி விரைவில் எங்கள் பிரச்னைக்குத் தீர்வுகிடைக்கும் எனத் தாம் நம்புவதாக டத்தோ ஆனந்த் தெரிவித்தார்.
எங்களுக்கு 1000 அந்நியத் தொழிலாளர்களைத் தருவிக்க அனுமதி கிடைத்தால் போதுமானது.
நம் நாட்டவர்கள் தோட்டத் தொழிலில் ஈடுபட, குறிப்பாக வெயில் மழையில் வேலை செய்யத் தயக்கம் காட்டுகின்றனர். அதனால் எங்கள் துறை அந்நியத் தொழிலாளர்களை நம்பித்தான் உள்ளது.
அதே நேரத்தில் வங்காளதேசம், பாகிஸ்தான், மியன்மார் நாட்டைச் சேர்ந்த அந்நியர்கள் சட்டவிரோதமாகத் தொழிலைத் தொடங்கியதோடு அல்லாமல், சட்ட விரோத அந்நியத் தொழிலாளர்களையும் வேலைக்கு அமர்த்தி, இத்துறையை ஆக்கரமித்துள்ளனர். இது நாட்டின் வருமானத்திற்குப் பெரிய பாதிப்பை எற்படுத்துவதோடு, எங்கள் பிழைப்பிற்கும் ஆபத்தை ஏற்படுத்தும். எனவே, இவர்கள் மீது அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என டத்தோ ஆனந்த் கேட்டுக்கொண்டார்!
0 Comments