கோலாலம்பூர் செப்டம்பர் - 20
இந்தியத் தொழில்முனைவர்கள் தங்களது வியாபாரத்தை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் 300 மில்லியன் சிறப்புக் கடன் நிதியை, இந்தியத் தொழில்முனைவர்களுக்கு ஒதுக்கவேண்டும் என, பிரதமரிடம் மைக்கி பரிந்துரைத்துள்ளது.
மைக்கி தலைவர் டத்தோ கோபாலகிருஷ்ணன் தலைமையில் மைக்கி நிர்வாகக் குழுவினர், பிரதமர் துன் டாக்டர் மகாதீரை அவரது அலுவலகத்தில் இன்று சந்தித்தனர்.
இதனையடுத்து பிரதமரிடம் 5 பரிந்துரைகளை மைக்கி முன்வைத்துள்ளது. அதில், அரசாங்கம் பட்ஜெட்டில் தொழில்முனைவர்கள் முன்னேற்றத்திற்காக அரசாங்க அமைப்பின் வயிலாக கடன் உதவிகளை வழங்கி வருகிறது என்றும், அந்த வகையில் பூமி புத்ராவிற்கு 2 பில்லியன் கடன் உதவியும் , பூமி புத்ரா அல்லாதவர்களுக்கு 3 பில்லியன் கடன் உதவிகளையும் ஒதுக்கி வருவதாகவும், இது வரவேற்கத் தக்க ஒன்று என்றாலும், பூமி புத்ரா அல்லாதவர்களுக்கு ஒதுக்கப்படும் நிதியால் இந்தியச் சமுதாயம் அதிகம் பயன் அடைகிறதா? என்பது கேள்விகுறியே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அந்த 3 பில்லியன் நிதியில் இருந்து 300 மில்லியன் நிதியை இந்தியத் தொழில்முனைவர்களுக்காக ஒதுக்கும்படி மைக்கி பிரதமரிடம் பரிந்துரைத்துள்ளதாகவும் மைக்கி தலைவர் டத்தோ கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதைத் தவிர்த்து இந்திய வர்த்தகர்கள் எதிர்நோக்கும் அந்நியத் தொழிலாளர்கள் பற்றாக்குறை பிரச்னையையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் பிரதமரிடம் விளக்கி, இந்தியத் தொழில்முனைவர்கள் தங்களது தொழிலை மூன்று வருடங்கள் எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் நடத்த, 30 ஆயிரம் அந்நியத் தொழிலாளர்களைத் தருவிக்க அனுமதி வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதாகவும் டத்தோ கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
புதிய தொழில் முனைவர்களை உருவாக்கும் நோக்கில் தொழில் சார்ந்த பயிற்சிகளை நடத்த மைக்கிக்கு ஆண்டு தோறும் சிறப்பு நிதியினை அரசாங்கம் வழங்க வேண்டும் என்ற பரிந்துரையும் முன்வைக்கப்பட்டதாக, இன்று பிரதமரைச் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் டத்தோ கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்!
0 Comments