(ரமேஸ்வரி)
தாப்பா ஏப். 16 :
விளையாட்டுதானே என மாணவர்களும் பெற்றோர்களும் அதில் கவனம் செலுத்தாமல் இருந்துவிடக்கூடாது. விளையாட்டும் வாழ்க்கையை ஜெயிக்க வைக்கும் என்பதைப் பல விளையாட்டு சாதனையாளர்கள் நிரூபித்துள்ளனர் என, தாப்பா நிர்மல் நிறுவனத்தின் உரிமையாளரும் சமூகச் சேவையாளருமான தொழில் முனைவர் தொண்டர்மணி சு. நாகையா கருத்துரைத்தார்.
இங்குள்ள தாப்பா தமிழ்ப்பள்ளியின் 60-ஆம் ஆண்டு விளையாட்டு போட்டியை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்து மேலும் பேசிய அவர, ஆசிரியர்கள் மாணவர்களுக்காகத் தங்களை அர்ப்பணித்து பணிகளை ஆற்றிவரும் வேளையில், பெற்றோர்கள் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
எந்த அளவு கல்வி முக்கியமோ அதே அளவு விளையாட்டும் புறப்பாட நடவடிக்கைகளும் முக்கியமாகிறது எனப் பள்ளியின் தலைமையாசிரியர் அ. வனஜா தமது தலைமையுரையின்போது குறிப்பிட்டார். தற்போதைய கல்வி திட்டத்தில் மாணவர்கள் புறப்பாட நடவடிக்கையிலும் சிறந்த நிலையைக் கொண்டிருத்தல் அவசியம் என தெரிவித்த அவர், பள்ளி அதற்கான ஆக்ககர திட்டங்களை மேற்கொண்டு வருகிறது எனவும் கருத்துரைத்தார்.
நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் மாணவர்கள் உற்சாகமாகப் பங்குபெற்று தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். இவ்விழாவில் மாவட்ட கல்வி இலாகாவின் விளையாட்டு பொறுப்பதிகாரி ஷாருல், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் குமரகணேஷ், அதன் பொறுப்பாளர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்!
1 Comments
Vanajah Annamalai
தமிழ் லென்ஸூக்கு இனிய நன்றி