கோலாலம்பூர், ஆகஸ்ட் 9:
புதிய பொருளாதாரக் கொள்கைகள் மக்களின் தேவைகளுக்கு ஏற்ப இருக்க வேண்டுமே தவிர, இன அடிப்படையில் இருக்கக்கூடாது என மைக்கி எனப்படும் மலேசிய இந்திய வர்த்தகத் தொழிலியல் சங்கங்களின் சம்மேளனம் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டது.
அண்மையில் நிதி அமைச்சர் துன் டாய்ம் வெளியிட்ட கருத்தினை மைக்கி முழுமையாக வரவேற்பதாக தெரிவித்த மைக்கியின் தேசியத் தலைவர் டத்தோ ந. கோபாலகிருஷ்ணன், புதிய மலேசியா, புதிய சித்தாந்தத்துடன் புதிய கொள்கைகளை வழிவகுத்து மக்களின் வாழ்க்கை முறை மேம்படும்படி செயல்படவேண்டும். நாட்டின் வளர்ச்சியில் அனைவரும் பங்குபெற்று பயன்பெற வேண்டும் எனக் கூறினார்.
பிரதமர் திறமைமிக்கவர், கடுமையான உழைப்பாளி, அவரின் தலைமைத்துவத்தில் பழைய கொள்கைகளில் உள்ள பலவீனங்களைக் கண்டறிந்து அவற்றைச் சரிப்படுத்த வேண்டும். நாட்டின் நிலைமையை மைக்கி நன்கு அறியும். நிறைந்த அனுபவமும் திறைமையும் கொண்ட நமது பிரதமரால், அனைத்தையும் மாற்றி அமைத்து மக்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்த முடியும் என டத்தோ ந. கோபாலகிருஷ்ணன் நம்பிக்கைத் தெரிவித்தார்.
மலேசியாவிற்கென தனி பலம் உள்ளது. சமமான வாய்ப்புகள் அனைத்து மலேசியர்களுக்கும் அரசாங்கம் வழங்கும் பட்சத்தில், அனைத்துலக ரீதியில் நாம் பீடு நடை போடமுடியும். அதனால் நாட்டிற்கும் நமக்கும் நன்மையே. அனைத்து தரப்பு மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து புதிய கொள்கைகளை உருவாக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.
அரசாங்கத்திற்கு முழுமையான ஆதரவினை மைக்கி வழங்கும் என்றும், புதிய கொள்கைகளுக்குத் தேவையான அனைத்து கருத்துக்களையும், யோசனைகளையும் கொடுப்பதற்கு மைக்கி எப்பொழுதும் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்!
0 Comments