கோலாலம்பூர், ஜூலை 29-
நாடு தொழில்நுட்ப வளர்ச்சியில் மிளிர்ந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், இந்திய சமூகமும் மற்ற சமூகங்களுக்கு நிகராக பொருளாதாரத்தில் மட்டுமின்றி, முதலீட்டிலும் பலமிக்க சமுதாயமாகச் சிறக்க வேண்டும்.
நாடு தழுவிய அளவில் வர்த்தக வாய்ப்புகளும் முதலீடுகளும் பல கோணங்களிலும் பல அம்சங்களிலும் நிறைந்துள்ளன. ஆனால், நம் இந்திய சமுதாயத்திற்கு இது குறித்த தகவல்கள் சரியாகக் கிடைக்கப் பெறாததால் அவர்கள் எப்படி முதலீடு செய்வது? எங்கு முதலீடு செய்வது போன்ற தகவல் அறியாமல் உள்ளனர்.
சாதாரண மக்கள் தொடங்கி பெரிய அளவிலான வணிகர்கள், சிறு - நடுத்தர வர்த்தகர்கள் கூட இன்னும் இது குறித்து அறிந்து கொள்ளாமல் இருக்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இத்தகையோரை அடையாளம் கண்டு அவர்களுக்கு விழிப்புணர்வு தர வேண்டும் என்ற வகையில் , 1 மைன்ட் எனப்படும் மலேசிய இந்திய வர்த்தக தொடர்புச் சங்கம் அரசாங்கத்தைக் சார்ந்த மைடாவுடன் கைகோர்த்து, முதலீட்டு வர்த்தக கலந்துரையாடலை ஏற்பாடு செய்துள்ளதாக, 1 மைன்ட் அமைப்பின் தலைவர் டத்தோ எஸ்.கோபிநாத் தெரிவித்தார்.
இந்தக் கலந்துரையாடல் நிகழ்வு வரும் 2.8.2019 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி தொடங்கி நண்பகல் 12.30 மணியளவில் கேஎல் சென்ட்ரலில் அமைந்துள்ள மைடா சென்ட்ரலில் நடைபெறவிருக்கிறது.
முற்றிலும் இலவசமாக நடைபெறும் இந்த சிறப்புக் கலந்துரையாடலில் வர்த்தகர்கள், சிறுதொழில் வணிகர்கள், வர்த்தகத் துறையில் பீடுநடைப் போட வேண்டும் என்று விரும்புபவர்கள், உற்பத்திதுறையில் உள்ளவர்கள், நிர்வாகப் பொறுப்பாளர்கள் என அனைவரும் கலந்து கொள்வதுடன், முதலீடு மற்றும் வர்த்தக மேம்பாடு குறித்து தங்களின் ஐயங்களையும் கேட்டுத் தெளிவு பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.
வெறும் பணம் மட்டுமின்றி பொருள் முதலீடும் இன்னும் இதர மூதலீடுகளைப் பற்றியும் இந்தக் கூட்டத்தில் விளக்கமளிக்கப்படும். குறிப்பாக நிதி ஒதுக்கீடு பற்றி இதில் தீவிரமாக விளக்கப்படும். வருங்கால சூழ்நிலைக்கு நிதி ஒதுக்கீடு என்பது மிகவும் அவசியமானது என்பதை முன்னிறுத்தியே இது குறித்து விளக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
முதலில் பதிவு செய்யும் 200 பேருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படும் பட்சத்தில், இதுவரை 100-க்கும் மேற்பட்டவர்கள் பதிந்து கொண்டுள்ளனர். இந்தக் கலந்துரையாடலில் இந்தியர்கள் மட்டுமின்றி, மற்ற இனத்தவர்களும் கலந்து கொள்ளவிருப்பதால் ஆங்கில மொழியிலும், தேசிய மொழியிலும் கலந்துரையாடல் இடம்பெறும்.
மைடாவைச் சேர்ந்த அதிகாரிகளே இந்தக் கலந்துரையாடலைத் தலைமையேற்று நடத்துவர்.
பல சிறப்பம்சங்கள் வாய்ந்த இந்த வர்த்தக மூதலீட்டுக் கலந்துரையாடல் நிகழ்வில் அனைவரும் திரளாகக் கலந்து ஆதரவு தருவதோடு, வர்த்தக உலகில் மற்ற இனத்தவர்களுக்கு நிகராக நாமும் மேலோங்க வேண்டும் என்று டத்தோ கோபிநாத் கேட்டுக் கொண்டார்.
வாட்ஸப் தொடர்புக்கு: 016 4028144
விளம்பரம்:
0 Comments