loader
இ.டபள்யூ. ஆர்.எஃப்பின்-  இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து - கூடைப்பந்து போட்டி!

இ.டபள்யூ. ஆர்.எஃப்பின்- இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து - கூடைப்பந்து போட்டி!

 

(மகேன் வித்யாசாகர்)

சுங்கைபூலோ ஜூலை 22-

இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து, வலைப்பந்து போட்டிகளை 8 ஆண்டுகளாக கல்வி, சமூக மேம்பாட்டு அறவாரியம் (இ.டபள்யூ. ஆர்.எஃப்) நடத்திவரும் வேளையில், இம்முறை  ஆர்.ஆர்.ஐ தோட்டத் திடலில் நடத்தியது.

இடைநிலைப் பள்ளியில் பின் தங்கிய மாணவர்களை ஒன்றுபடுத்தி, அவர்களுக்கு உரிய  பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு வாரமும் அம்மாணவர்களைச் சந்தித்து கருத்தரங்கு, கல்வி, விளையாட்டுப் பயிற்சிகளை இலவசமாக இவ்வறவாரியம்  வழங்கிவருகிறது.

அம்மாணவர்களுக்கிடையே கால்பந்து, கூடைப்பந்துப் போட்டிகள் பெரிய அளவில்  ஆண்டு தோறும் நடத்தப்படும். அந்த வகையில் இவ்வாண்டு நடத்தப்பட்ட போட்டியில்  நாடு தழுவிய அளவில் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டியில் பங்குகொண்டதாக கல்வி, சமூக அறவாரியத்தின் தலைவர்  நடராஜன் தெரிவித்தார்.

ஆண்கள்  கால்பந்து போட்டியிலும், பெண்கள் கூடைப்பந்து போட்டியிலும் கலந்துகொண்டு தங்களின் விளையாட்டுத் திறமையை வெளிப்படுத்தினர்.

பொதுவாக இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல முயற்சிகளை எடுத்து வருவதாகவும், இதற்கு முன் எங்கள் பயிற்சியில் ஈடுபட்டு சிறந்து விளையாடிய போட்டியாளர்கள்  மாநில அணிகளுக்கு விளையாடி வருவதாகவும் நடராஜன் தெரிவித்தார்.

இம்முறை நடத்தப்பட்ட போட்டியில் கால்பந்து விளையாட்டில்  சுபாங் யுனைட்டெட் அணியினர் வெற்றிபெற்ற நிலையில் இரண்டாவது இடத்தை இ.டபள்யூ. ஆர்.எஃப் மலேசிய அணியினரும், மூன்றாம் இடத்தை டிஎன் சூப்பர் ஸ்ட்ரைக்கர் அணியினரும், நான்காம் இடத்தை  காஜாங் தெர்மினேட்டர் அணியினரும் வாகை சூடினர்.

பெண்களுக்கான கூடைப்பந்து போட்டியில், பினாங்கு பிளாக்பேர்ல் அணியினர் வெற்றிபெற்ற நிலையில், இரண்டாம் இடத்தை  ஜெராய் என்சி அணியும், மூன்றாம் இடத்தை பினாங்கு ஒய்ட் பேர்ல் அணியும், நான்காம் இடத்தை லெம்பா பூஜாங்கும் பிடித்தனர்.

வெற்றிபெற்ற மாணவர்களுக்குத்  தலைவர் நடராஜன், முன்னாள் தலைவர் டத்தோ யோகேஸ்வரன், துணைத்தலைவர் கோவிந்தசாமி மற்றும் ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன் ஆகியோர் பரிசுகளை எடுத்து வழங்கினர்!

விளம்பரம்:

0 Comments

leave a reply

Recent News