திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தனது கட்சி வேட்பாளர்களையும் , கூட்டணிக் கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்துப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் . நாகர்கோயிலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியஸ்டாலின், நான், எனது அண்ணன் அழகிரி, மைத்துனர் செல்வம், நமது பொருளாளர் துரைமுருகன், டிஆர் பாலு அனைவரும் கலைஞர் அவர்களுக்கு நினைவிடம் அமைப்பதற்காக தமிழக அரசிடம் முறையிட்டோம் . அதில் கூட கீழ்த்தரமான அரசியல் செய்தது எடப்பாடி அரசு. அண்ணாவுக்குப் பக்கத்தில் நினைவிடம் அமைக்க வேண்டும் என்பது கலைஞர் கடைசி ஆசை. அதில் கூட 6 அடி இடம் தர மறுத்தது எடப்பாடி அரசு.
எம்ஜிஆருக்கு அண்ணாவுக்குப் பக்கத்தில் இடம் கொடுத்து, நினைவு மண்டபம் அமைத்தவர் கலைஞர். காமராஜருக்கு இடம் கொடுத்து நினைவிடம் உருவாகக் காரணமாக இருந்தவர். வள்ளுவர் கோட்டம் தந்த கலைஞருக்கு, தியாகிகளுக்கு மணிமண்டபம் அமைத்த கலைஞருக்கு, வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு கோட்டை கட்டியவருக்கு. மொழிப்போர் தியாகிகளுக்கு மணிமண்டபம் அமைத்த கலைஞருக்கு 6 அடி நிலம் இல்லை என்று எடப்பாடி கூட்டம் கூறியது. அதற்கு அவருக்கு அருகதை இல்லையா? 6 லட்சம் அடி கூட தலைவருக்கு பொருந்தும் .நீங்கள் ஆறு அடிக்குக் கூட தகுதியில்லாத குள்ள நரி கூட்டம். நான் வெட்கத்தை விட்டு சொல்கிறேன் என்று கூறிக்கொண்டு இருக்கும் போதே கண் கலங்கினார் ஸ்டாலின்.
அண்ணா மறைந்த நேரத்தில் இதயத்தை இரவலாகத் தந்துவிடு. கையோடு கால் அருகில் வைப்பேன் என்ற கலைஞருக்காகக் கேட்டேன். அவர் கொடுத்த உறுதிமொழி, வாக்குறுதியைக் காப்பாற்ற கெஞ்சினேன், நடக்கவில்லை . என்ன செய்வது என்று தெரியாமல் நீதிமன்றம் சென்று அனுமதி பெற்றோம். கலைஞருக்கு இடம் கொடுக்காதவர்களுக்கு இந்தத் தேர்தலில் வென்று நாம் யார் என்று காட்ட வேண்டும் என்று பேசினார் !
0 Comments