(வெற்றி விக்டர்)
கோலாலம்பூர், அக்டோபர் -16
சமீபகாலமாக மித்ரா மானியம் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என சிலர் அரசியல் காரணத்திற்காக பொய் பரப்புரைகளைச் செய்து வருகின்றனர்.
இதில் என் பெயரும் சேர்க்கப்பட்டு சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர் என ம.இ.காவின் நிர்வாகச் செயலாளர் ஏ.கே ராமலிங்கம் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு என்னை மீன் வளத் துறையில் வாரிய உறுப்பினராக நியமித்தனர். அங்கு மற்ற சமூகம் மீன் வளர்க்கும் துறையில் ஈடுபட்டு வருவதையும், அதிலும் இப்போது மிகவும் பிரபலமாக jade perch என்ற மீன் நல்ல ஒரு வணிகமாக மீன் துறையில் இருப்பதையும் நான் கண்டறிந்தேன்.
இந்தத் துறையில் இந்திய இளைஞர்கள். குறிப்பாக பி.40 பிரிவினர் ஈடுபட்டு வருமானம் பெறவேண்டும் என்று நான் ஆய்வு செய்து என்னுடை அரசு சாரா இயக்கத்தின் மூலம் மித்ரா விடம் விண்ணப்பம் செய்தேன். என் அமைப்பின் குறிக்கோள் முதல் கட்டமாக 200 இளைஞர்களை இதில் ஈடுபடச் செய்து , அவர்களுக்கு முழு செலவில் மீன் , மீன் வளர்க்கும் வசதி , 6 மாதத்திற்குத் தேவையான மீன் உணவு போன்றவற்றை வழங்கி 6 மாததிற்குப் பிறகு அந்த மீன்களை மீன் வள துறையே வாங்கிகொள்ளும் அளவிற்கு மிகவும் பயனுள்ள திட்டம் அது.
இந்தத் திட்டத்தை மித்ரா ஆய்வு செய்து எங்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் ஒப்புதல் வழங்கியது.
ஆனால், இது நாள் வரை அந்தத் திட்டத்தை அமல் படுத்த மித்ரா நிதியை இன்னும் எங்களுக்கு ஒதுக்கவில்லை.
ஆனால் பலர் பணத்தை கையாடிவிட்டோம் என்று குற்றம்சாட்டுகின்றனர். அவர்களுக்கு நான் சவால் விடுகின்றேன் உங்களால் நிரூபிக்க முடியுமா?
நான் ஒரு இந்தியன். என் சமுதாயத்திற்கு நல்ல திட்டத்தை கொண்டுச் செல்ல எனக்கு உரிமை இல்லையா? அரசியல் காரணமாக களங்கத்தை ஏற்படுத்தி சமுதாயத்திற்கு பயன் தரும் திட்டத்தை தடுத்து நிறுத்தாதீர்கள் என டத்தோ ஏ.கே ராமலிங்கம் தெரிவித்தார்.
15 லட்சம் கையாடிவிட்டேன் என குற்றம் சாட்டும் தம்பிகளே... இது 15 லட்ச திட்டம் அல்ல 21 லட்ச திட்டம் அதை சொல்லுவதில் எனக்கு அச்சம் இல்லை. காரணம் நான் சமுதாயத்திற்கு ஒரு நல்ல திட்டத்தை வகுத்துக் கொண்டு வந்துள்ளேன் . இது நாள் வரை மித்ரா எனக்கு ஒரு வெள்ளி கூட கொடுக்கவில்லை. ஆனால், இந்த மீன் வளர்ப்பு முன் ஏற்பாடுகளுக்கு என் சொந்தப் பணமாக 1லட்சத்து 80 ஆயிரம் வெள்ளி செலவு செய்து வைத்துள்ளேன்.
என் சமுதாயத்திற்கு நான் கொண்டு வந்த திட்டத்தை தடுத்து நிறுத்தினால் நஷ்டம் நமக்குதான். காரணம், அடுத்த ஆண்டு இதை இன்னொரு சமூகத்தினர் செய்வதற்கு வேலைகள் நடந்துகொண்டிருக்கிறது. என்பதையும் இங்குப் பதிவு செய்கிறேன்.
தற்போது மித்ரா இந்தத் திட்டம் தொடர ஒப்புக்கொண்டு, முதல் கட்டமாக 50 விழுக்காடு தொகையும், 150 இளைஞர்கள் ஈடுபட்ட பிறகு மேலும் 40 விழுக்காடு தொகையும், எல்லாம் நடத்தி முடிந்த பின் 10 விழுக்காடு தொகையும் தருவதாகக் கூறியுள்ளனர்.
ஆகையால் மிக விரைவில் இந்திய இளைஞர்களுக்கு பயனுள்ள இத்திட்டம் ஆரம்பமாக உள்ளது என ஏ.கே ராமலிங்கம் தெரிவித்தார்.
அதோடு தன் மீது அவதூறு பரப்பும் நபர் மீது நடவடிக்கை எடுக்கபோவதாகவும் அவர் தெரிவித்தார்!
விளம்பரம்:
0 Comments