(வெற்றி விக்டர் / ஆர். பார்த்திபன்)
கோலாலம்பூர், அக்டோபர் - 1
மலேசியாவில் உள்ள பல இந்திய சிறு வர்த்தகர்கள் தங்களது வியாபாரத்தை தொடரமுடியாத அபாயக் கட்டத்தில் உள்ளனர் என மைக்கி தலைவர் டத்தோ என். கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
மலேசியாவைப் பொறுத்தவரை சிறு வர்த்தகச் சமூகத்தில் 30 விழுகாட்டினர் இந்தியர்கள். அந்த 30 விழுக்காட்டில் சுமார் 80 சதவிகித வியாபாரிகள் தங்களின் தொழிலைக் கைவிடும் நிலையில் உள்ளனர். இது இந்திய சமுதாயத்தின் வர்த்தக வளர்ச்சியில் மிகப் பெரிய அபாய ஒலி என டத்தோ கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஆள்பற்றாக்குறை பிரச்னை இங்கு மேலோங்கி இருக்கிறது . அரசாங்கமோ தற்போது 8 லட்ச உள்நாட்டவர்கள் வேலையை இழந்துள்ளனர்; அவர்களுக்கு முன்னுரிமை கொடுங்கள் என்கிறார்கள்.
விளமபரப் படுத்தி, மை ஜாப்பில் அறிவித்தும் எந்த ஒரு உள்நாட்டவர்களும் நகைக் கடை ஜவுளிக் கடை, உணவகம், முடி திருத்தும் கடை, உலோக மறுசுழற்சி, மளிகைக் கடைகளில் வேலை செய்யத் தயாராக இல்லை என்பதை அரசாங்கம் உணரவேண்டும்.
இந்தத் துறைகள் சார்ந்த வேலைகளை கௌரவக் குறைவாக நினைத்து, உள்நாட்டவர்கள் வருவது இல்லை. இதுதான் நடப்பு உண்மை. இதை அரசாங்கம் புரிந்துக்கொள்ள வேண்டும் என டத்தோ கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
இந்தியர்கள் வியாபாரம் சார்ந்த சுமார் 15 துறைகளுக்கு உடனடியாக 45 ஆயிரம் அந்நியத் தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர்.
இந்த கோவிட்-19 சமயத்தில் விசா முடிந்து சென்றவர்களுக்குப் பதிலாக அந்நியத் தொழிலாளர்களை தருவிப்பதும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நாங்கள் என்னதான் செய்வது? வியாபாரங்களை இழுத்து மூடிவிட்டு செல்வதைர் தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை.
இந்தப் பிரச்னைக்கு உடனடி தீர்வு கிடைக்க வேண்டும் என்றால், பிரதமர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என டத்தோ கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஆகையால் மிக விரைவில் பிரதமரைச் சந்தித்து மகஜர் வழங்கவுள்ளதாகவும் டத்தோ கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்!
0 Comments