கோலாலம்பூர் ஜூலை -14: இப்போது மலேசியாவை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 சூழலில், டெல்டா என்கிற புதிய வகை உருமாறிய வைரஸ் தாக்கம் மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா மிகப் பெரிய ஜனத்தொகை உடைய நாடு. அந்த நாட்டில் கடந்த மார்ச் மாதம் டெல்டா தாக்கம் தலைதூக்கியது. ஆனால், குறுகிய காலத்தில் இந்திய அரசு அந்தத் தாக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறது என முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் தெரிவித்துள்ளார்.
தற்போது மலேசியாவும் அதே தாக்கத்தை எதிர்கொள்கின்றது. வீரியமாகப் பரவும் இந்த வகை டெல்டா வைரஸைக் கட்டுப்படுத்த முயற்சித்து, முன்களப் பணியாளர்கள் சோர்வடைந்துவிட்டனர். மருத்துவ வசதியும் அபாய நிலையில் உள்ளது.
இந்தியாவின் மருத்துவக் குழு டெல்டா ரக கோவிட்டை கட்டுப்படுத்திய அனுபவம் கொண்டவர்கள்.
நான் அரசாங்கத்தில் இருந்திருந்தால், முதலில் இந்தியாவின் உதவியை நாடியிருப்பேன். அவர்களுக்கு இது தொடர்பான அனுபவம் உண்டு. அங்குள்ள நிபுணுத்துவ மருத்துவக் குழுவை மலேசியா வரவழைக்க அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பேன். அதைச் சாத்தியப் படுத்தியிருப்பேன் என டத்தோ ஸ்ரீ நஜீப் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இங்கு என்ன பலவீனம்? இந்தியாவில் எப்படிச் சாத்தியமானது? அதே போல் சீனா, அமெரிக்கா போன்ற நாடுகள் இதை எப்படிக் கையாண்டார்கள் என்பதை அரசாங்கம் கண்டறிய வேண்டும்.
இக்காலக்கட்டதில் நான் அரசாங்கத்தில் இருந்தால், தற்காலிக ஊழியர்களாக அந்நாட்டு மருத்துவ நிபுணர்களை இங்கு வரவழைப்பேன். காரணம், கடந்த கால அரசாங்கத்தில் சீன, ஜப்பான் இன்னும் பல நாடுகள் இயற்கைச் சீற்றத்திற்கு ஆளாகியபோது, மலேசியா மருத்துவக் குழு அனுப்பியதோடு, பல உதவிகளைச் செய்த்துள்ளது.
மலேசியாவிற்கு ஒன்று என்றால், பல நாடுகள் உதவி செய்யும். காரணம் கடந்த கால அரசாங்கத்தில் மலேசியா உலக நாடுகளுடன் நல் உறவு வைத்திருந்தது. குறிப்பாக எனது அரசாங்கத்தில் இந்தியா, சீனா, அமெரிக்கா இன்னும் பல நாடுகளுடன் நல் உறவை வைத்திருந்தேன் என நஜீப் தெரிவித்துள்ளார்.
நாம் ஈகோவை கைவிட்டு அண்டை நாடுகளிடம் இருந்து உதவியை வாய் திறந்து கேட்கவேண்டும். நாடு எதிர்நோக்கிவரும் டெல்டா ரக வைரஸைக் கட்டுப்படுத்த, இந்தியாவின் உதவி அவசியமானது.
இதிலிருந்து நம் நாடு மீண்டு வந்த பிறகு, நமது அனுபவத்தைக் கொண்டு நாம் மற்ற நாடுகளுக்கு உதவி செய்வோம். இப்படித்தான் நாம் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து அனைத்துலக உறவை வலுப்படுத்த முடியும் என டத்தோ ஸ்ரீ நஜீப் பதிவிட்டுள்ளார்!
0 Comments