ஷங்காய் ஜூன்16-
கலப்பு தற்காப்புக் கலை வீரர்களுக்கான ஒன் சாம்பியன்ஷிப் போட்டி நேற்று இரவு சீனாவின் ஷங்காய் நகரில் நடைபெற்றது.
இப்போட்டியில் மலேசிய இந்திய வீரரான அகிலன் தாணி ஜப்பானின் ஜாம்பவானான அகியாமாவை எதிர்த்துக் களமிறங்கினார்.
ஜப்பானின் வெட்ரன் வீரரான அகியாமா, கலப்பு தற்காப்புக் கலையில் முன்னணி வீரராகத் திகழ்பவர். பல போட்டிகளில் வெற்றிகளைக் குவித்தவர்.
43 வயதான அகியாமாவை எதிர்த்து, 23 வயது நிரம்பிய அகிலன் தாணி கலமிறங்குவது பலரது கவனத்தை ஈர்த்தது.
முதல் சுற்றில், பாயும் புலி போல் அகிலன் தாணி கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி பல யுத்திகளுடன், அதிவேகமாகத் தாக்குதலை நடத்தினார். இருந்தபோதும், முதல் சுற்றில் அகியாமாவை அகிலனால் வீழ்த்த முடியவில்லை. இரண்டாம் சுற்றில் சற்றுத் தோய்வடைந்த அகிலன், அகியாமாவின் தாக்குதலுக்கு முட்டுக்கொடுக்கச் சிரமப்பட்டார். ஆனாலும், அகிலன் அகியாமாவிடம் வீழ்வில்லை.
மூன்றாம் சுற்றில் பல வித்தைகளைக் களமிறக்கி ஒரு வேங்கையாய் மாறி, தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார் அகிலன் தாணி.
அகியாமாவிற்கும், அகிலன் தாணிக்கும் 20 வயது வித்தியாசம். எனவே, மூன்றாம் சுற்று இளைஞனுக்குச் சாதகமாக அமைந்தது. காரணம் 43 வயதான அகியாமா 3 வது சுற்றில் சற்றுச் சோர்வடைந்ததால், அகிலன் தனது நிலையை வலுப்பெறச் செய்தார்.
மூன்றாவது சுற்றில், 2 சுற்று அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அகிலன் தாணியை, போட்டியின் மூன்று நடுவர்களும் ஏகமனதாக வெற்றியாளராக அறிவித்தனர்.
இதன் வழி புதிய சரித்திரத்தை ஷங்காயில் பதித்துள்ளார் நம் மண்ணின் மைந்தன் அகிலன் தாணி!
0 Comments