நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா முழுக்க பிஜேபி வெற்றி பெற்றிருந்தாலும், தமிழகத்தில் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியவில்லை. தேர்தல் பரப்புரையின்போது 'தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்' என்று தமிழிசை பேசுவது வாடிக்கையாக இருந்தது. பாரதிய ஜனதா கட்சிக்குக் கொஞ்சம் ஆதரவு உள்ள கன்னியாகுமரி, கோவை தொகுதிகளிலும்கூட அந்தக் கட்சியால் வெற்றி பெற முடியாமல் போனது. கன்னியாகுமரி தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் படுதோல்வியடைந்தார். தேர்தல் தோல்விகளுக்கு தமிழிசை பல காரணங்களைச் சொல்லி வந்தார். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைமை மாற்றப்படலாம் என்கிற தகவலும் பரவியது. இந்நிலையில், தமிழிசைக்கு அவரின் குடும்பத்துக்குள்ளேயே எதிர்ப்பு இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.
சென்னை விமான நிலையத்தில் தமிழிசை நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துக்கொண்டிருந்தார். ஏராளமான பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்களும் அங்கே குழுமியிருந்தனர். அப்போது, தமிழிசை பேட்டியளித்த இடத்துக்கு வந்த அவரின் மகன் சுகநாதன், தமிழிசை முன்னிலையிலேயே பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராகக் கோஷம் எழுப்பினார்.
'தமிழகத்தில் பா.ஜ.க ஒரு தொகுதியில்கூட ஜெயிக்காது' என்றும் அவர் கத்தினார். தமிழிசை மகனே பொது இடத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராகக் கோஷம் போட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. உடனே, அங்கிருந்த பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்கள் சுகநாதனை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். ஏற்கெனவே சோபியா என்பவர் தமிழிசைக்கு எதிராக விமான நிலையத்தில் கோஷம் எழுப்பி பிரச்னையானது. தற்போது மகனே பிஜேபிக்கு எதிராகக் கோஷம் எழுப்பியிருப்பதால் அதிர்ச்சியில் இருக்கிறார் தமிழிசை!
0 Comments