கொரோனா வைரஸ் பரவுவதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்பே, சார்ஸ் கொரோனா வைரஸ் போன்ற உயிரி ஆயுதத்தைத் தயாரிப்பதற்கு, சீன ராணுவம் திட்டமிட்டிருந்த ரகசியத் தகவல் சர்வதேச அளவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வருடம் சீனாவின் வுகான் நகரில் கண்டெடுக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகின் பெரும்பாலான நாடுகளுக்குப் பரவி, அதன் தாக்கம் தற்போதும் குறையவில்லை.
இதற்கிடையே சீனாவின் ஆய்வகத்தில் கொரோனா வைரஸ் பரவியதாகவும், இது சீன விஞ்ஞானிகள் செயற்கையாகத் தயாரித்ததாகவும் எழுந்த குற்றச்சாட்டுகளை அந்நாடு மறுத்தது.
இந்நிலையில்,சார்ஸ் கொரோனா போன்ற கொடிய வைரஸை செயற்கையாக உருவாக்கி, அதை உயிரி ஆயுதமாகப் பயன்படுத்த சீனா திட்டமிட்டது தற்போது தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பான சீன ராணுவத்தின் ரகசிய ஆவணங்கள், அமெரிக்க வெளியுறவுத் துறைக்குக் கிடைத்துள்ளதாக, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஊடகம், செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியில், ''கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்பே 2015-ம் ஆண்டில் சீன ராணுவத்தின் விஞ்ஞானிகள் மற்றும் பொதுச்சுகாதார நிபுணர்கள் இணைந்து, சார்ஸ் கொரோனா என்ற வைரஸை உருவாக்கும் திட்டத்தை தயாரித்ததாகவும், தேவைப்படும்போது அந்த வைரஸை உயிரி ஆயுதமாகப் பயன்படுத்தவும் திட்டமிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், போர்க்காலத்தில் மட்டுமின்றி, தன்னை எதிர்க்கும் நாடுகள் மீதும் பயன்படுத்துவதற்கு சீனா திட்டமிட்டதும் தெரிய வந்துள்ளது.
இயற்கையாக உருவானதாகத் தோன்றும் அளவுக்கு ஆய்வுகள் இருக்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் உலக நாடுகள் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கும், குற்றம் சாட்டினால் மறுக்கும் அளவுக்கும் அது இயற்கையாக இருக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டிருந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே சீனா மீது உலக நாடுகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், தற்போது அமெரிக்காவுக்குக் கிடைத்த இந்த ரகசிய ஆவணங்களால் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது!
0 Comments