சென்னை, ஏப்ரல் 6: தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் களைகட்டியது. அரசியல் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்டனர்.
கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் அனல்பறந்த பிரசாரம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
பின்னர் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றன. அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் தேர்தல் அதிகாரிகள் நேற்று இரவே சென்று வாக்குப்பதிவு சுமுகமாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
வாக்குப்பதிவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 7 மணி வரை நடைபெறுகிறது.
கொரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். தமிழக சட்ட சபை தேர்தலில் வாக்களிக்க 6.28 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்!
0 Comments