தனிப்பெரும்பான்மையுடன் நரேந்திர மோடி 2-வது முறையாக இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்க உள்ளார். நாடாளுமன்றத்தின் 17-வது மக்களவைத் தேர்தல் கடந்த மாதம் 11-ஆம் தேதி தொடங்கி 19-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில், வேலூரில் மட்டும் பணப்பட்டுவாடா புகாரால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. மீதமுள்ள 542 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.
மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பாஜக 345 இடங்களிலும், காங்கிரஸ் 91 இடங்களிலும், மற்றவை 106 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்க 272 இடங்கள் தேவைப்படும் நிலையில், பாஜக மட்டும் தனித்து 300 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அதன் கூட்டணி கட்சிகள் 45 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன.
இதன்மூலம் மோடி தலைமையிலான பாஜக அரசு அதீத பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. இதனால் நாடு முழுவதிலும் உள்ள பாஜகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகளைப் பரிமாறியும் வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர். 2-வது முறையாக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ள மோடிக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பல்வேறு உலக நாட்டு பிரதமர்கள் என வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில் வருகிற 26-ஆம் தேதி குடியரசுத் தலைவரைச் சந்தித்து பிரதமர் மோடி ஆட்சியமைக்க உரிமைகோர உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது!
0 Comments