வாஷிங்டன்: அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவின் டேவிஸ் பகுதியில் அமைந்துள்ள சென்ட்ரல் பூங்காவில் காந்தி சிலை நிறுவப்பட்டுள்ளது. ஆறு அடி உயரமும், 294 கிலோ எடையுடன் கூடிய வெண்கல காந்தி சிலை பூங்காவின் மையப்பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் காந்தி சிலையின் முகம் மற்றும் கணுக்கால்களில் சேதங்களை ஏற்படுத்தியுள்ளனர். காந்தி நினைவு நாளான ஜனவரி 30-ஆம் தேதியன்று காந்தி சிலை சேதமடைந்து காணப்பட்டதால், அமெரிக்க வாழ் இந்தியர்கள் இந்த நிகழ்விற்கு கண்டனம் தெரிவித்தனர்.
இதனிடையே காந்தி சிலையைச் சேதப்படுத்திய நபர்கள் குறித்தும், அதற்கான நோக்கம் குறித்தும் கலிபோர்னியா மாகாண காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். “வெறுக்கத்தக்க இந்த செயலுக்கு” காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா அமெரிக்காவை கேட்டு கொண்டு உள்ளது.
இந்த நிலையில் காந்தி சிலை உடைக்கப்பட்டதற்கு அமெரிக்க வெள்ளை மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஊடகச் செயலாளர் ஜென் பிசாகி கூறுகையில், “மகாத்மா காந்தி சிலை உடைக்கப்பட்டு அவமதிக்கப்பட்டது குறித்து விசாரித்து வருகிறோம். இதுகுறித்து நாங்கள் மிகுந்த கவலை கொண்டுள்ளோம். இந்தச் செயலை அமெரிக்க அரசு வன்மையாகக் கண்டிக்கிறது” என்று தெரிவித்தாா்!
0 Comments